பக்கங்கள்

திங்கள், 16 நவம்பர், 2015

சோதிடந்தனையிகழ்!


-சு.அறிவுக்கரசு
’விதியே வாழி! விநாயகா வாழி! பதியே வாழி! பக்தி வாழி! என்றெல்லாம் பாடிய பாரதியார், ஆத்திச்சூடியில் சோதிடந்தனை இகழ் எனக் கூறினார். இராசகோபாலாச்-சாரியாரும்கூட சோதிடம் ஒரு மூடநம்பிக்கையே என்றார். நம் வீட்டு எருமை, கன்று ஈந்த நேரத்தைக் குறித்துக் கொடுத்தால்கூட, ஜோதிடன் ஜாதகம் கணித்துக் கொடுப்பானே தவிர, இது எருமை சோதிடம் என்று கூறமாட்டான் என்றார் தந்தை பெரியார்.
அண்ணனின் ஜாதகத்தையும் தங்கையின் ஜாதகத்தையும் தந்து, பொருத்தம் பாருங்கள் என்று கூறினால், பத்துக்கு எட்டரைப் பொருத்தம் இருக்கிறது என்றுதான் சோதிடன் கூறுவானே தவிர, உடன் பிறந்தவர்களின் ஜாதகம் இவை என எந்த ஜோசியனும் கூறுவது இல்லை. ஆகவேதான் அதனை இகழ வேண்டும் என்றனர்.
மாறாக, அதனைப் பாடமாக்கி, கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் கற்பிக்கின்றனர் என்றால்... இந்தக் கொடுமை அரங்கேற்றப்பட்டது, பி.ஜே.பி. ஆட்சி ஆறாண்டுக் காலம் நடந்தபோது!
ஆர்.எஸ்.எஸ்.காரரான முரளி மனோகர் ஜோஷி கல்வித்துறையைக் கவனித்த அமைச்சராக இருந்தபோது மேடையை அமைத்தார். இந்த அறிவியல் படித்தால் பி.எஸ்.சி. பட்டம் வழங்கப்படும் என ஆணை பிறப்பித்தார். எல்லாரும் எதிர்த்தனர். இது எப்படி அறிவியலாகும் எனக் கேட்டனர்.
பதில் கூற முடியாத முரளி மனோகர் ஜோஷி பணிந்து பேசினார். பி.ஏ. பட்டம் தரப்படும் அதுவும் ஒரு கலை என்ற காரணத்தினால் என்றார். மேல்நாட்டார் ஒருவர் கொலைகூட ஒரு கலைதான் எனக் கூறினார் அல்லவா? கொலை ஒரு கலை அப்பா! என்று மந்திரிகுமாரி திரைப்படத்தில் எஸ்.ஏ.நடராஜன் என்ற நடிகர் கூறும் வசனத்தை கலைஞர் மு.க. எழுதியதைப் படம் பார்த்தவர்கள் நினைவில் வைத்திருப்பர்.
அதுபோல சோதிடத்தைப் புளுகுக்கலை எனக் கூறினாரோ? இந்தக் கலையைக் கற்றுத் தந்தால் பல்கலைக்கழக மான்யக் குழு (U.G.C.) நிதி கூடுதலாக வழங்கும் என்று தேன் தடவினார். பல்கலைக் கழகங்கள் சில ஈக்களாகச் சிக்கின. அதில் ஒன்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்!
நாள், நட்சத்திரம் பார்த்து பிரும்மரிஷி வசிட்டன் ஜோதிடம் கூறியவாறு, ராமன் பட்டாபிஷேகம் நடைபெறவில்லை; காட்டுக்கு அனுப்பப்பட்டான். அக்மார்க் முத்திரை குத்தும் அருகதை பெற்றவன் வசிஷ்டன். அவன் கணித்ததே கவிழ்ந்து போனது கைகேயியால்!
முறைப்படியும் வழக்கப்படியும் ஜாதகப்படியும் அண்ணன் நாடாள முடியாது, தம்பிதான் நாடாள்வான் என்றான் ஜோதிடன். தம்பி துறவு மேற்கொண்டான். அண்ணன் ஆட்சியில் அமர்ந்தான். நிமித்தகன் சொன்னதை மாற்றிக் காட்டினான் சிலப்பதிகாரத்தில்! செங்குட்டுவன் சேரனானதை இளங்கோ அடிகள் அப்படித்தான் பாடினார்! சோதிடத்தைப் பொய் எனக் காட்டி இகழ்ந்த செய்திகளை ஏராளம் சுட்டிக்காட்டலாம்!
கேரளப் பகுத்தறிவாளர் ஏ.டி.கோவூர் 1969இல் விடுத்த அறைகூவலை ஏற்று, சோதிடம் அறிவியல் என்பதை எண்பித்துக்-காட்ட எவரும் முன்வரவில்லையே! பெங்களூர் நகரில் எட்டுக் கூட்டங்களில் பேசி இந்த அறைகூவலை 1978இல் புதுப்பித்தார் கோவூர். இங்கிலீஷில் ஜோசியம் கூறி, ஏடு நடத்திவந்த உலகப் புகழ்(!) பி.வி.ராமன் என்பவர்கூட பெங்களூர்க்காரர்தான். அறைகூவலை ஏற்கவில்லையே!
வைத்தீசுவரன் கோவில் என்ற ஊரில் நாடி ஜோதிடம் கூறிவந்த பூசமுத்து என்பவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்து கணக்கில் காட்டப்படாத பல இலட்ச ரூபாய்த் தொகையை அள்ளிப் போனார்கள்.
பசிக்காமலிருக்க வரம் தருவேன், எனக்குப் பழைய சோறு பிச்சை போடுங்கள் என்று ஒருவன் சொன்னதைப் போல என்பார் தந்தை பெரியார். அதைப் போல ஊருக்கு ஜோசியம் சொன்ன ஆள், தனக்கு வருவதை உணரவில்லையே!
காந்தியாரும் இந்திரா காந்தியும் சுடப்பட்டுச் சாவார்கள் என்று எந்த ஜோதிடனும் கூறவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆபிரகாம் லிங்கனும், கென்னடியும் கொலை செய்யப்படுவார்கள் என்று அமெரிக்க நாட்டு ஜோதிடனும்கூடக் கூறவில்லையே! அங்கேயும்-கூட ஜோசியர்களும் சோதிடமும் இருக்கின்றன. முட்டாள்தனம் உலகுக்கே சொந்தம் என்றார் தந்தை பெரியார்.
வானவியல் (Astronomy) என்பது வேறு. சோதிடம் (Astrology) என்பது வேறு. முன்னது அறிவியல். பின்னது பொய்யியல். நோபல் பரிசு பெற்ற பல அறிவியலாளர் வெளிப்படையாக அறிவித்த பிறகும் அங்கேயே பலருக்கு அறிவு வரவில்லை எனும்போது, இந்தியாவில் எப்படி....?
வானவெளியில் ஒன்பது கிரகங்கள் மட்டுமே உள்ளனவா? ஹம்ஃப்ரி என்று பெயர் வைக்கப்பட்ட பத்தாம் கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சூரியனைச் சுற்றிவர 204 நாள்கள் ஆகிறது என்பது உட்படப் பலவற்றையும் கண்டறிந்து உள்ளனர்! இது ஜாதகத்தில் இடம் பெறவில்லை! ராகு, கேது, என்பவை ஆங்கில ஜோசியத்தில் இடம்பெறவில்லையே!
சூரியனைக் கிரகம் என்கிறது சோதிடம். அது நட்சத்திரம் என்பது அறிவியல்! சூரியன் ஏழிலிருந்து ஒன்பதாம் வீட்டுக்குப் போகிறார், ஆறிலிருந்து நாலுக்கு நடக்கிறார் என்கிறது சோதிடம். சூரியன் நகர்வதோ, சுற்றுவதோ இல்லை. நிலையாக நின்று எரிகிறது என்கிறது அறிவியல். பின் எப்படி சோதிடம் அறிவியல்?
சந்திரன் கோள் அன்று! துணைக் கோள்தான். ஆனால், அதனைக் கோள் என்றே கணக்குப் போடுகிறது சோதிடம்! பூமிக்கு ஒரு சந்திரன், செவ்வாய்க்கோளுக்கு இரண்டு சந்திரன், வியாழனுக்கு 16, சனிக்கு 22, யுரேனசுக்கு 15, நெப்டியூன் கோளுக்கு 3 என நூற்றுக்கும் மேற்பட்ட சந்திரன்கள் வானவெளியில் உண்டு. எந்தச் சந்திரன் சோதிடத்தில் சேர்த்தி? நாம் கண்ணால் காணும் சந்திரனை மட்டும் சேர்த்தால் போதுமா?
பூமி ஒரு கோள் (கிரகம்)! பூமியை சோதிடத்தில் கிரகமாகக் கணக்கில் சேர்க்கவில்லையே!
கோள்களின் பார்வை படுகிறது என்கிறது சோதிடம்! எட்டாம் வீட்டில் இருந்துகொண்டு சூரியன் பார்க்கிறான் என்கிறார்கள். அனுகூலப் பார்வை, வக்கிரப் பார்வை என்று பார்வையோ பலவிதம் என்கிறார்கள். பூமியிலிருந்து 15 கோடி கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் சூரியன்! 195 நாடுகளுக்கும் ஒரே சாயையும் ஒரே கிரணங்களையும் பதிவு செய்கிறது. நாடே இல்லாத, ஆளே இல்லாத துருவப் பகுதிகளிலும் சூரியக் காற்று சுமூகமாகவே வீசுகிறது. இந்த நிலையில் சூரியப் பார்வையில் வேறுபாடாம்! எப்படி அறிவியலாகும்?
உலகில் அரசியல் நிலையை சுக்கிரன் முடிவு செய்கிறதாம். போர்களைச் செவ்வாய் உண்டாக்குகிறதாம்! தர்மச் செயல்களுக்கு குருவாம்! அதர்மச் செயல்களுக்கு சுக்கிரன், செவ்வாய், ராகு கிரகங்களாம்!
நாடு பிடிக்கும் வெறியும், பேராசைகளும் உலகில் இதுவரை ஏற்பட்ட போர்களுக்குக் காரணிகள். அலெக்சான்டர், செங்கிஸ்கான், தொடங்கி பிஸ்மார்க், முசோலினி, டோஜோ, இட்லர் ஈறாகப் பல சர்வாதிகாரிகளின் மன வக்கிரங்கள், நாடு பிடிக்கும் பேராசைகள் போன்றவையே அரசியலையும் போர்களையும் ஆட்டிப் படைத்தன என்பதே உண்மை! நபர்களின் வக்கரிப்புகளுக்கு நாடு எப்படிப் பொறுப்பு? நாட்டின் ஜாதகம் எப்படிப் பொறுப்பு ஆக முடியும்?
மனிதர்களின் பிறந்த நேரம், கிரக நிலை இதனை வைத்து ஜாதகம் என்று கூறுகிறார்கள்! நாடுகளுக்கு எது பிறந்த நேரம்? இந்தியா எப்போது ஜனித்தது? 1947 ஆகஸ்ட் 15ஆம் நாளிலா? நள்ளிரவு 12-_01க்கு அல்லவா? இவர்களது பஞ்சாங்கம் 30 நாழிகைக்கு மட்டும்தானே கணித்து வைத்திருக்கிறார்கள்!
சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை உள்ள 12 மணிநேர, 30 நாழிகைக்கு மட்டும்தானே! உதயமோ, அஸ்தமனமோ சூரியனுக்குக் கிடையாது. அது, தோற்றப் பிழை! ஆனால், அதனடிப்படையில் எதையோ பிதற்றுவது அறிவியலா?
எவ்வளவோ வாதங்கள் உள. என்றாலும் ஈராயிரம், மூவாயிரம் ஆண்டுகளாக சோதிடப் பித்தலாட்டம் உலகில் இருக்கிறது. தமிழர் பிரித்த நானிலங்களில் மருத நிலத்துக்கு உரித்தான பரத்தமை உலகின் இரண்டாம் மூத்த தொழில் என்கிறார்கள். அப்படியானால் உலகின் மூத்த முதல் தொழில்? சோதிடம்!
சோதிடர்களை நற்செய்தி கூறுவோர் (Soothe Sayers) என்கின்றனர் ஆங்கிலேயர்கள்! இங்கோ, இந்தியாவிலோ, சோதிடர்கள்தாம் எல்லாமுமே! அத்தகைய மடமை ஒழிய வேண்டும். ஒழிக்கப்பட வேண்டும். கல்விச் சாலைகள் அறிவை வளர்க்க வேண்டும்.
பகுத்தறிவைப் பயன்படுத்திட படிப்போரை ஊக்குவிக்க வேண்டும். சிலகோடி நிதிக்காகப் பகுத்தறிவைப் பாழ்படுத்தும் பாடத் திட்டங்களை ஏற்கக் கூடாது, மறுதலித்திட வேண்டும்! அந்த நாளும் வந்திடாதோ?
-உண்மை இதழ்,15-28.2.15

செவ்வாய், 10 நவம்பர், 2015

சோதிடம் ஓர் அஞ்ஞானமா? விஞ்ஞானமா?



சோதிடம் ஒரு விஞ்ஞானம் என்று கதைவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சோதிடமும் ஒரு விஞ்ஞானமே என்பது மக்களை ஏமாற்றி, இதன் பால் இழுக்கச் சிலர் போடும் நாடகமே. சோதிடத்தைக் கிரகங்களின் அசைவுகளைக் கொண்டு கணிக்கிறார்கள் என்று கூறுவார்கள். நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் தான் மற்ற கிரகங்களும் சஞ்சரிக்கின்றன. அக்கிரகங்களின் நிலை மாற்றங்கள், மனிதனைப் பாதிக்காதா? என்பது பலரது சந்தேகமாகும். இக்கேள்வி சற்று விரிவாக விஞ்ஞானத்துடன் அணுக வேண்டியது. முதலாவதாகக் கிரகங்களைப் பற்றிச் சோதிடம் சொல்வதைக் காண்போம்.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என்று ஒன்பது கிரகங்கள் உள்ளன. இவற்றின் சஞ்சாரத்தைக் கொண்டே, சோதிடம் கணிக்கப்படுகிறது என்று சோதிடர்கள் கூறுகின்றனர். சோதிடத்தின் அஸ்திவா ரமே கேலிக்கூத்தாய் இருக்கிறது.
சூரியன் ஒரு கிரகமே அல்ல. அது ஒரு நட்சத்திரம், நட்சத்திரம் என்றால், ஹைட்ரஜன் வாயுவால் உருவானது. சூரியன்  சுயமாக ஒளியையும், வெப்பத் தையும் உருவாக்க முடியும். கிரகங் களுக்கு இந்த ஆற்றல் கிடையாது. ஆக, சூரியனை ஒரு கிரகமாகப் பொய் கூறிச் சோதிடம் கணிக்கிறார்கள். சூரியனை மையமாகக் கொண்டுதான், பல கிரகங்கள் சுற்றி வருகின்றன.
மற்றொரு வேடிக்கை பார்த்தீர்களா? அவர்கள் கூறும் ஒன்பது கிரகங்களில், பூமியே இல்லை என்பதைக் கவனித் தீர்களா? நாம் வாழும் இந்த பூமியின் நிலை  மாற்றங்களை தவிரவா மற்ற கிரகங்களின் நிலை மாற்றங்கள் நம்மைப் பாதிக்கப் போகின்றன. பூமியும் ஒரு கிரகம்தானே? பிறகு ஏன் அதனைச் சேர்க்கவில்லை. ஏன் என ஆராய்ந்தால், விஞ்ஞானம் வளர்ச்சி பெறாத காலக் கட்டத்தில் பூமிதான் மையம். அதனைச் சுற்றித் தான், சூரியன் வலம் வருகிறது என நம்பப்பட்டது.
மற்றொரு வேடிக்கை என்னவென் றால், சோதிடக் கிரகங்களில் சந்திரனும் ஒன்று. சந்திரன் கிரகமே இல்லை. அது ஒரு  துணைக்கிரகம் ஆகும். சந்திரன் சூரியனைச் சுற்றி வருவதில்லை. பூமியைத்தான் சுற்றி வருகிறது.  சூரியன் ஒரு நட்சத்திரம் என்பதை அறிந்தோம். சந்திரன் துணைக்கிரகம் என்பதை அறிந்தோம். ஆக ஏழு கிரகங்கள். பூமியைச் சேர்ந்தால் எட்டு கிரகங்கள். இந்த எட்டு கிரகங்களில், ராகு, கேது ஆகியவை கிரகங்களே இல்லை என விஞ்ஞானம் கூறுகிறது.
தற்போது விஞ்ஞானம் கூறுகிற கிரகங்களைப் பார்ப்போம்.
பூமி, புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, வின்மம், சேண்மம், புளூட்டோ, சாரோன், மேக்மேக், ஹவு மியா, இரிஸ். ஆக, 13 கிரகங்கள் அக்டோ பர் 2011 வரை கண்டறியப்பட் டுள்ளன. இவை அனைத்துமே சூரிய னைத்தான் சுற்றி வருகின்றன. இந்த கிரகங் களை ஏன் சோதிடம் கைவிட்டு விட்டது. அவர்கள் கூறிய கிரகங்களுக்குத்தான் சோதிடத்தில் இடமுண்டா?
சூரியனிலிருந்து இந்தக் கிரகங்கள் பல கோடிக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்றன. இவ்வளவு தூரத்தில் இருக்கக் கூடிய இந்தக் கிரகங்களின் சஞ்சாரம் எப்படி பூமியில் இருக்கக்கூடிய ஒரு தனி மனிதனின் வாழ்வைத் தீர்மானிக்க முடியும்? உண்மையில், இதர கிரகங்களின் நிலை யினால், பூமிப் பந்தில்கூடத் திடீரென்று பெரிய அளவுக்கு மாறுதல்கள் ஏற்படுவ தில்லை. பிறகு, எப்படி தனி மனிதனின் வாழ்வில் அவை புகுந்து, தீர்மானிக்க முடியும்?
ஆயுள் ரேகை, நேர்த்தியாக அமைந் திருந்தால் ஒருவர் ஆயுளுடன் நோய் தொல்லை இல்லாமல், சுக வாழ்க்கை வாழ்வார். பலரிடமும் இந்த நம்பிக்கை ஆழமாய் பதிந்திருக்கிறது. ஒரு மனிதனின் ஆயுளைப்  பலகாரணி கள் தீர்மானிக்கின்றன. உடல்வாகு, உணவுப் பழக்கம், வேலை முறை, தீய பழக்கம், எதிர்பாராத விபத்து போன் றவை. அத்தோடு சேர்ந்து வாழும் நாட்டின் சுகாதார வசதிகளுக்கும் ஒரு முக்கிய பங்குண்டு.
மனித வாழ்வின் அனைத்து அம்சங் களும், ஏற்கெனவே கைரேகைகளில் தீர்மானம் ஆகிவிட்டன., என்றால், மனித முயற்சிக்கும், தனி மனித ஆற்ற லுக்கும் அர்த்தமே இல்லாமல் போய் விடும். மனிதனை முடக்கிப் போட முயலுகிற கோரமான நம்பிக்கைகளில், கைரேகை சோதிடமும் ஒன்று, சோதிடர்கள் சூழ்நிலைக்காரர்கள். அதைக் கேட்பவர்கள் சூழ்நிலைவாதிகள்.
நம் வீட்டில் நடந்த சில நிகழ்வுகளை அப்படியே நேரில் பார்த்தது போலச் சொல்லி விடுகிறார்களே, அதற்கு என்ன சொல்கிறீர்கள்? என்று சிலர் கேட்கக் கூடும். நியாயமான கேள்வி தான்! பெரும் பாலும் சோதிடம் கேட்கப் போகிறவர் களே, தங்கள் வீட்டில் நடந்ததை, தாங்கள் எதற்காக வந்திருக்கிறோம் என்பதை உளறி விடுவார்கள். சோதிடரும் இவர்களின் வாயைக் கிளறி வரவழைத்து விடுவார்கள். பிறகு என்ன? ஈரைப் பேனாக்கி, பேனை பெருமாளாக்கி விடுவார்கள்.
- நன்றி: கலைக்கதிர் பிப்ரவரி 2013
-விடுதலை 30.3.13

ராசி பலனும், தாயத்தும் ஒரு வடிகட்டப்பட்ட மூட நம்பிக்கை


Image result for தாயத்து
ராசி பலனும், தாயத்தும் ஒரு வடிகட்டப்பட்ட மூட நம்பிக்கை கிரக பலன்களையும் ராசி பலன் களையும் நம்புவது நட்சத்திரங்கள் மூலமாக ராசி பலன் பார்ப்பதும், கோள்கள், நட்சத்திரங்களால் உலகில் மாற்றங்கள் எற்படுகின்றன என நம்புவதும் வடிகட்டப் பட்ட மூட நம்பிக்கையாகும்.   நாளிதழ், வார இதழ், மாத இதழ்களில் வெளியிடப் படும் நட்சத்திர ராசி பலன்களை நம்புவது அறிவுள்ளவர்கள் செய்யும் காரியம் அல்ல. அதை படிப்பதும், அதன்படி நடப்பதும் நம் தலையில் நாமே மண்ணைப் போடுவது போன்றது. ஒவ்வொரு பத்திரிகையி லும் ஒரே ராசி உள்ளவர்களுக்கு வெவ்வேறு விதமான பலன்களைச் சொல்லி எழுதி, இந்தப் போலிகள் கணிசமான காசு  பார்க்கிறார்கள். இந்த சாதாரண விவரங்கள் கூட தெரியாத முட்டாள்கள், இன்றும் இவற்றை நம்பிக் கொண்டு இருக் கின்றார்கள். ராசி பலன் எழுதி வந்த குஷ்வந்தசிங், தனக்கு அது பற்றி எதுவும் தெரியாது என்றும் அது ஒரு வடி கட்டப்பட்ட பொய் என்றும் அடித்துக் கூறி உள்ளார். பொருந் தாத எதிர்பார்ப்புகள்
சிலர் தாயத்துகள், கயிறுகள், வளையங்கள் பேன்றவற்றை அணிந்து கெள்கிறார்கள் அல்லது தங்களது பிள்ளைகளுக்கு அணிவிக்கிறார்கள். சிலர் தங்களது கை, கழுத்து, இடுப் பில் அவைகளை கட்டிக் கொள் கிறார்கள். சிலர் சில கற்களை ராசிக் கல் என்று கூறி அதை மோதிரங் களில் பதித்து அணிகிறார்கள். இவ்வகையான அனைத்துச் செயல்களும் அறிவுக்குப் பொருந்தா என்பதை நாம் உணர வேண்டும்.
ஒரு  ரூபாய் கூடப் பெறாத தாமிரத் தகடுகளில் ஏதேதோ கிறுக்கி எழுதி, ஆயிரக்கணக்கில் இப்பொ ழுது பலரும் சம்பாதித்து வரு கிறார்கள். இதற்கு என்று டிவியிலும் பத்திரிகைகளிலும் ஆயிரக்கணக்கில் செலவழித்து, இந்த ஏமாற்றுத் தொழிலில் லட்சக் கணக்கில் பணம் பார்க்கிறார்கள்.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்குக்  கொண் டாட்டம்தான்.
பிள்ளையாரின் விலை?
இந்துக்களால் மதித்து வணங்கப் படும் பிள்ளையாரை ஒரு சாமி சிலைகள் செய்து விற்கும் நிறுவனத் தில் விலைப் பட்டியல்
இதோ!
1. வைரப் பிள்ளையார்         ரூ.1.25 லட்சம்
2. தங்கப் பிள்ளையார் ரூ. 80,000
3. வெள்ளிப் பிள்ளையார்    ரூ. 20,000
4. செம்புப் பிள்ளையார் ரூ. 1,200
5. மற்ற உலோகங்களில்    ரூ. 300
6. பிள்ளையார் படங்கள் ரூ 125
7.  லித்தோ படங்கள் ரூ. 45
8. நல்ல பேப்பரில்  ஜெராக்ஸ்       செய்யப்பட்டது  ரூ.3  * கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.
ஆக  மொத்தத்தில் பிள்ளையா ருக்கு அல்ல, அவர் செய்யப் பட்ட உலோகத்திற்குத்தான் மதிப்பு உள்ளது என்பதே உண்மை.
எப்படியோ நகை வியாபாரிகளுக் குக் கொண்டாட்டமே!
-விடுதலை ஞா.ம.23.3.13

திங்கள், 9 நவம்பர், 2015

கிரகங்களால் பாதிப்பு ஏற்படுமா?


பூமியிலிருந்து கிரகங்களின் தூரம்
1. புதன்    - 5 கோடியே 70 லட்சம் மைல்
2. வெள்ளி (சுக்கிரன்)    - 2 கோடியே 60 லட்சம் மைல்
3. செவ்வாய் 4 கோடியே 85 லட்சம் மைல்
4. வியாழன் (குரு) 39 கோடியே 3 லட்சம் மைல்
5. சனி 79 கோடியே 31 லட்சம் மைல்
6. யுரேனஸ் - 169 கோடியே 40 லட்சம் மைல்
7. பூமிக்கும், சூரியனுக்கும் உள்ள தூரம் - 9 கோடியே 30 லட்சம் மைல்
8. பூமிக்கும், சந்திரனுக்கும் உள்ள தூரம் - 2 லட்சத்து நாற்பதாயிரம் மைல்
எல்லா கிரகங்களும் சூரியனை மய்யமாக வைத்து நீள் வட்டப் பாதை யில் சுற்றி வருவதால் கிரகங்களின் தூரம் சற்று வேறுபடக் கூடும்.
கிரகங்கள் எல்லாம் பூமியிலிருந்து வெகு தொலைவில் அதாவது கோடிக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருப்பதால் அக்கிரகங்களின் ஈர்ப்பு விசை பூமியை நோக்கி குறிப் பிட்ட தூரம் வரை மட்டுமே இருக்கும். ஆகையால் அந்த ஈர்ப்பு விசை பூமியை எட்ட வாய்ப்பில்லை. எனவே, பூமியில் இருக்கும் மனிதர்களுக்கு கிரகங்கள் எந்த மாற்றத்தையோ, ஏற்றத்தையோ உண்டாக்குவதற்கான வாய்ப்பு சிறிதும் இல்லை.
பலன்கள் மனிதனுக்கு தானாகவே ஏற்படுவதா? அல்லது உழைப்பினால் ஏற்படுவதா? கிரகத்தின் தன்மையால் ஏற்படுவதா? அல்லது முன் ஜென் மத்தில் செய்த கருமத்தின் பலனாய் ஏற்படுவதா? பகவத் கீதையில் முன் ஜென்மத்து பலனுக்கேற்ப நம்முடைய வாழ்வில் செயல்கள் எல்லாம் தலைவிதியின்படி நடக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. அந்த தலைவிதியை படைத்த அந்த கடவுளாலே கூட இதை மாற்ற முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. (கீதை, அத்யாயம் -_ 4, சுலோகம் _ 13, அத்யாயம் _ 3, சுலோகம் _ சுலோகம் _ 35) எனவே பூசைகள் செய்து பலன்களை மாற்ற முடியும் என்பது அடிபட்டு அறுத்துப் போய்விடுகிறது. ஏன் இந்த முரண் பாடுகள்? ஒவ்வொரு கேட்டுக்கும், குற்றத்திற்கும் கிரகப் பலன்கள் காரணம் என்றால், மனிதர்களைக் குற்றப்படுத்த என்ன இருக்கிறது? மனிதனைத் தண்டிப்பதில்தான் அர்த் தம் உண்டா?
பூமியின் ஈர்ப்பு விசையில் 6இல் 1 பங்குதான் (1/6) துணைக்கிரகம் சந்திரனுக்கு இருக்கிறது. அதுபோலவே மற்ற கிரகங்களுக்கும் ஈர்ப்பு விசை மாறுபடும். துணைக் கிரகம் சந்திரன் பூமிக்கு மிக நெருக்கமாக இருப்பதால் அதன் ஈர்ப்பு விசையால் சில மாறுதல்கள் பூமியில் உள்ள கடல் நீருக்கு சில சமயங்களில் ஏற்படலாம்.
2003ஆம் ஆண்டு ஆகஸ்டு 27ஆம் தேதி செவ்வாய்க் கிரகம் பூமிக்கு அருகில் வந்தது. பூமியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை! சனிக்கிரகம் 2003ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் நாள் பூமிக்கு அருகில் வந்தது. பூமியைவிட 7.55 மடங்கு பெரிய சனிக்கிரகத்தால் கூட அப்போது பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை. நம் காலத்தில் தானே இரு கிரகங்களும் பூமியை நெருங்கி வந்தன. சோதிடர்கள் செவ் வாய் தோஷமென்றும், சனி தோஷ மென்றும் நம்மிடத்தில் கூறியதை நினைவுபடுத்திப் பாருங்கள். அறிவியல் முடிவுகளை ஏற்று துணிச்சலோடு செயல்படுவதே வாழ்வில் சிறந்த வழியாகும். தோஷம் என்பதெல்லாம் மோசம்.
ஜோதிடர்கள் சென்ற ஆண்டு 21.12.2012, உலகம் அழிந்து விடும் என்று ஊடகங்கள் மூலம் மக்களை அச்சுறுத்தி வந்தனர். ஆனால் ஒன்றுமே பூமிக்கு கேடு ஏற்படவில்லை என்பதை எல்லோரும் அறிவோம். மூடநம்பிக்கை முறியடிக்கப்பட்டு, பூமி சுற்றும், உலகம் வாழும் என்பது நிறுவிக்கப்பட்டது.
கிரகங்கள் பூமியில் இருக்கும் மனி தர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துகிறது என்று வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும், பெண் கருவுற்று அவள் வயிற்றில் புதிய உயிர் ஏற்படும் போது அந்தக் குழுந்தையின் முன் வினைப்படி எல்லா பாதிப்புகளையும் கிரகங்கள் உருவாக்க வாய்ப்புகள் இருக்கின்றன. பிறகு ஏன் பத்து மாதங்கள் காத்திருந்து குழந்தை தாய் வயிற்றை விட்டு பிரிந்த உடனேயே காவல்துறை ஒரு குற்றவாளியைப் பிடிக்க முற்படுவது போல் கிரகங்கள் வானத்தில் இருந்து கொண்டு அந்தக் குழந்தையைத் தாக்கி பாதிப்பைக் கொடுக்கின்றன? பல கோடி மைல் தூரத்திலுள்ள கிரகங்கள் மனிதர்களைப் பாதிக்கிறது என்ற வாதத்தை தகுந்த ஆதாரமில்லாமல் எப்படி நம்புவது?
ஒரு குழந்தை பிறந்தால் அந்தக் குடும்பத்திற்கு ஒரு வாரிசு கிடைத்தது என்று சந்தோஷப்படுவது சிறந்ததா? அல்லது சோதிடம் பார்த்து குழந்தை யின் பிறப்பால் குடும்பத்தில் தாய் மாமனுக்குக் கெட்டது ஏற்படும். தாய் தந்தையருக்கு நோயைக் கொடுக்கும். குடும்பத்தில் சிக்கல் ஏற்படும் என்று குழப்பமடைந்து பொருளற்ற பரிகார பூசை செய்து துன்பப்படுவது சிறந்ததா? இவை இரண்டில் எது சிறந்தது என்று அறிவின்பால் சிந்தித்து முடிவெடுப்பது உங்களிடமே விடப்பட்டுள்ளது.
பெண்ணின் ஜன்ம நட்சத்திர பலன், ருதுப்பலன், திருமணப் பொருத்தம், ஜோதிட பலன் கிரகங்களின் பாதிப்பு ஆகியவைகளைப் பற்றி சிறந்த சோதி டர்கள், அறிவியலாளர்கள், ஊடகத் தார்கள் முதலானோர் எடுத்துரைத்த கருத்துக்களை இங்கு பார்த்தோம். சோதிடர் கூறும் கோட்பாடுகளை வேறு மதத்தவர்கள் நம்புவதில்லை. அவர்கள் என்ன சீர்கெட்டா போய் விட்டனர்? இனி இந்து மதம் பெண் களின் பிறப்பைப் பற்றி என்ன கூறு கிறது என்பதைப் பற்றிச் சிறிது தெரிந்து கொள்வோம்.
பிரம்மசூத்திரம், சிறீபாஷ்யம்
இந்து மதத்தின் பெருந்தலைவர் களில் ஒருவரான இராமானுஜர் விசிஷ்ட்டாத் வைதம்) பிரம்ம சூத்திரத் திற்கு தான் எழுதிய உரையின் சிறீபாஷ் யம்) முகப்பிலேயே பின்வருமாறு கூறியுள்ளார்.
பகவத் பலன தானக் ருதாம்
விஸ்தீரணாம் ப்ரம்மசூத்ரா வ்விருத்திம்
பூர்வாச்சாரியாஹா சஞ்சிக்டிபூஹி
தன்மதானு சாரேந சூத்ரா அக்ஹதாரீ
வ்யாக்யாஸ்யந்தே
அதாவது
பூர்வாச்சாரியார்கள், அதாவது பிரம்ம சூத்திரத்தைப் பண்ணிய ஆச் சாரியார்கள் என்ன சொன்னார்களோ அதை அப்படியே நான் (இராமானுஜர்) இங்கு தருகிறேன். இதில் என் கருத்தென எதுவும் இல்லை. அவர்கள் சொன்னதுதான் நான் சொன்னதும் என்று முன்னோர்கள் மொழிந்ததை அப்படியே ஏற்றுக் கொண்டுவிட்டார் இராமானுஜர்.
பிரம்ம சூத்திரத்திற்கு இராமானுஜர் எழுதிய சிறீபாஷ்யத்தின் (உரையின்) அபசூத்ராபிஹாரணம் என்ற பகுதியில் சொல்வது இதுதான்:
பகவானின் உருவத்தை நித்யமும் தியானித்து உபாஸனம் செய்பவர் களுக்குத்தான் மோட்சம். நான் சொல் வது பிராமணர்களுக்கு மட்டும்தான். பிராமணர் அல்லாத சூத்ரர்கள் மோட்சம் வேண்டுமென்றால் இந்தப் பிறவியை இப்படியே கழித்து அடுத்த ஜென்மாவில் பிராமணனாகப் பிறக்க பகவானைப் பிரார்த்திக்க வேண்டும். ஒரு வேளை, அடுத்த பிறவியில் பிராமணனாகப் பிறக்க அவர்களுக்குப் பிராப்தம் கிடைக்குமானால், வேத, உபநிஷத்துகளைக் கற்று பகவானைத் தொடர்ந்து தியானித்து மோட்சம் பெறலாம்.
அதுபோலவே, பிராமண ஸ்த்ரீகளும் சூத்திரர்கள்தான். எனவே, அவர்கள் அடுத்த ஜென்மாவில் பிராமண புரு ஷனாக அதாவது பிராமண ஆணாக அவதரித்தால்தான் மோட்சத்திற்குப் பாடுபடுவதற்குரிய தகுதியே கிடைக்கும் என்கிறார் இராமானுஜர்.
மோட்சமென்றால் அடுத்த ஜென் மம் பிறந்து அவதிப்படாமல் வைகுண் டத்தில் பகவானின் திருவடிகளை அடைந்து நித்ய ஆனந்தம் அனுப விப்பது (அக்னி ஹோத்ரம் ராமானுஜ தத்தாச்சாரியார் - _ இந்து மதம் எங்கே போகிறது என்ற நூல் _ நான்காம் பதிப்பு பக்கம்: 126-_127).
மூடத்தனத்தை முறியடிப்போம்
பெண்கள் மீதான வன்புணர்ச்சிக்குக் காரணம் கிரகப் பலன் என்று கூறுவது எவ்வளவு மூடத்தனம். மதம், ஜாதி, வேதங்கள், சாத்திரங்கள் ஆகிய அனைத்துமே பெண்களை அடக்கி, ஒடுக்கி வைப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுவதையே இந்தக் கட்டுரையில் விரிவாக விளக்கப்பட்டுள் ளது. பெண் விடுதலைக்கு பாடுபடும் அமைப்புகள், அனைத்துமே தங்களின் மனச்சாட்சியை விழிப்படையச் செய்து இந்தக் கொடுமையை வெகு விரைவில் சமூகத்திலிருந்து துடைத்தெறிய முன்வர வேண்டும்.
வெறும் பெண் உரிமை பேசுவதும் இடஒதுக்கீடு அளிப்பதும் இந்தக் காலகட்ட சூழ்நிலைக்குப் போதாது. பெண் இழிவினை முதலில் போக்க ஆவன செய்ய வேண்டும். காலம் வெல்லும் என்று காத்திருக்கக் கூடாது.
மனிதனால் உருவாக்கப்பட்ட ஜோதிடம் என்னும் மூடநம்பிக்கை சமுதாயத்தை எவ்வளவு பாழ்படுத்திக் கொண்டு இருக்கிறது என்பது ஆதாரத்துடன் இங்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பொது மக்கள் திறந்த மனதுடன் (With Open mind) செய்திகளை ஊன்றிப் படித்து உண்மைகளை உணர வேண்டும். இந்த உலகில் நம் நாட்டைத் தவிர,  வேறு எந்த நாட்டிலும் இல்லாத, இந்த மூடத்தனம் நமக்கு தேவைதானா?
ஜோதிடம் பொய்; உண்மை என்று நிரூபிப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு என்று கர்நாடக விச்சாரவாதி சங்கம், பெங்களூரு - _ சவால் விட்டு பல ஆண்டுகள் ஆகியும், சால்வை தைரியமாக சந்திக்க எந்த ஜோதிடரும் இன்று வரை முன் வரவில்லை, ஏன்? ஜோதிடர்கள் தோல்வியை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்றே கருத வேண்டி இருக்கிறது.
- பேரா. ஏ.எஸ். நடராஜ்
-விடுதலை ஞா.ம.20.7.13

ஞாயிறு, 1 நவம்பர், 2015

சோதிடம் - அறிவியலல்ல!


விண்வெளிக் களங் களைப் பற்றி என்னிடம் பல நண்பர்கள் கேள் விகள் கேட்ட போது, அவர்கள் சில நேரங் களில் ஜோதிடம் பற்றியும் கூட கேள்விகள் கேட் டனர்.
நமது சூரிய மண்டலத்தில் நம்மை விட்டு வெகு தொலைவில் உள்ள கோள்களுக்கு நமது மக்கள் இந்த அளவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்ததன் பின்னணியில் உள்ள காரணத்தை  உண்மையில் என்னால் எப்போதுமே புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.
ஜோதிடம் ஒரு கலை என்பதற்கு எதிராக நான் எந்தக் கருத்தையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் அது அறிவியல் என்ற போர்வையில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு நான் வருந்தவே செய்கிறேன்.
இந்த கோள்கள், நட்சத்திரக் கூட்டங்கள், செயற்கைக் கோள்கள் ஆகியவை மனித உயிர்கள் மீது ஆற்றல் செலுத்த இயலுமென்ற கட்டுக் கதைகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன
என்பதை நானறியேன். விண்வெளியில் உள்ள இவற்றின் சரியான இயக்கத்தைச் சுற்றி, குழப்பம் மிகுந்த கணக்குகளை கற்பனையில் உருவாக்கி அவற்றிலிருந்து மக்களின் வாழ்க்கை நடைமுறைகள் பற்றி முடிவுகளைப் பெறுவது என்பது சரியானதென எனக்குத் தோன்றவில்லை.
நான் காணும் வரை, பூமி ஒன்றே ஆற்றல் மிகுந்த, சுறுசுறுப்புடன் இயங்கும் ஒரு கோளாகும்.  தனது இழந்த சொர்க்கம் (8ஆம் புத்தகத்தில்) ஜான்மில்டன் அழகாக கூறியபடி,
பூமிக்கும் மற்ற நட்சத்திரங்களுக்கும் சூரியன் மய்யமானதாக இருந்தால் என்ன?
மூன்று வேறுபட்ட வழிகளில் பூமி அறிவற்றபடி இயங்குவதாக தோன்றினாலும், பூமி என்னும் இக்கோள் எவ்வளவு உறுதியாகச் செயல்படுகிறது!
நெருப்பு இறக்கைகள் என்ற தனது சுயசரிதையில் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியும், இந்திய அரசின் அறிவியல் ஆலோசகருமான ஏ.பி.ஜே.அப்துல்கலாம்.
-viduthalai,1.11.13