பக்கங்கள்

வியாழன், 4 ஜூலை, 2024

ஜோதிடப் பைத்தியங்களே, திருந்துங்கள்!

 


டிசம்பர் 16-31, 2020

நாட்டில் உள்ள பல படித்தவர்களும், பதவியில் உள்ள பெரிய மனிதர்களில் பலரும், பாமரத்தனத்திலிருந்து அறியாமையிலிருந்து விடுபட முடியாமல், பேராசைச் சிறைக்குள் கிடந்து உழலுவதற்கான மிகப் பெரிய காரணங்களில் ஒன்று _ ஜோதிடம் என்ற ஒரு போலி விஞ்ஞானத்தை நம்பி பொருளையும் அறிவையும் இழப்பதாகும்!

எத்தனையோ கொலைகளும், தற்கொலைகளும் நரபலிகளும் நாட்டில் நடைபெறுவதற்கு அடிப்படையான காரணம் இந்த ஜோதிட மூடநம்பிக்கையேயாகும்!

அறிவியல் (Science) வேறு; போலி அறிவியல்(Pseudo Science) வேறு. படித்த தற்குறிகளுக்கே கூட இது விளங்குவதில்லை!

வானவியல் (Astronomy) என்பது அறிவியல் (Science). ஜோதிடம் (Astrology) என்பது போலித்தனமான அறிவியல்!

கிரகங்கள் கணக்கே இரண்டிலும் மாறுபடுவதைச் சுட்டிக் காட்டினாலே, திறந்த மனம் உடையவர்களாக இருந்தால், அவர்களுக்கு இந்த வேறுபாடு எளிதில் விளங்கிவிடும்!

சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பே, சுயமரியாதை இயக்கம் தொடங்கி, பச்சை அட்டை குடிஅரசு வார ஏட்டின் மூலம் தந்தை பெரியார் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஜோதிடப்புரட்டு எனும் தலைப்பில் சிறு நூலாக அச்சில் வந்து, பல லட்சக்கணக்கில் _ பல பதிப்புகள் மூலம் _ நாட்டில் பரவியுள்ளது!
நம் நாட்டு நாளேடுகளில் பலவும், வார ஏடுகளும் ஜோதிடத்தைப் பரப்பி, மக்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொள்ளையடிக்கும் சுரண்டல் வியாபாரத்தினை செய்வது மகா வெட்கக் கேடு!
நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் எல்லாம் பல அறிவியல் ஆளுமையாளர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் ஜோதிடம் என்பது புரட்டு என்று கூறினார்கள்!

ஜோதிடம் இதழ் என்பது அறிவார்ந்தோர் வைத்த நம்பிக்கையாகும். சி.இராஜகோபாலாச்சாரியார் போன்றவர்களேகூட ஜோதிடத்தை நம்பாதவர்கள்.
ஜோதிடப் புரட்டைப் புரிந்துகொள்ள வேறு பெரிய விளக்கம் கூடத் தேவையில்லை!

இன்றைய ராசிபலன் போட்டு நாளும் ராசிபலன் வருவாய் தேடும் நாளேடுகளில் ஒரு குறிப்பிட்ட ராசிக்கு என்ன பலன் என்பதை இரண்டு, மூன்று நாளேடுகளில் வந்துள்ளவற்றோடு ஒப்பிட்டுப் பாருங்கள். ஒன்றுக்கு மற்றொன்று நேர் எதிராகக் கூட இருக்கும்!

என்றாலும், ஆசை வெட்கம் அறியாது என்பதுபோல மூடநம்பிக்கையால் ஏற்படும் ஆசை இந்த மூடத்தனத்தை வளர்த்துக் கொண்டே உள்ளது!
புதிய ஒரு செய்தி: அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் இரண்டாம் முறை போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் முழு வெற்றி பெறுவார்; அவரை எதிர்க்கும் ஜோபைடன் தோல்வி அடைவார்; துணை அதிபர் பதவி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வி அடைவார் என்று ஜோஸ்யம் சொன்னார்கள்! அது அப்படியே ஆங்கிலத்தில் தரப்பட்டிருக்கிறது.

இதுபோல இதற்கு முன் எத்தனையோ ஜோதிடங்கள் பொய்த்த கதையும் நிகழ்வுகளும் ஏராளம் உண்டு. இதே கேள்விக்கு பைடன் வெல்வார் என்று இன்னொருவரும் ஏதோ கணக்குப்போட்டு எழுதியுள்ளார். இந்தப் பக்கம் ஒருவர், அந்தப் பக்கம் ஒருவர் என எவர் வந்தாலும் ஜோதிடம் கணித்தது என்று சொல்லிக் கொள்ளலாம் அல்லவா? ஜோதிடம் என்பது கணிதம், அறிவியல் என்றால் யார் கணக்கிட்டாலும் ஒன்று போல் தானே வரவேண்டும்? ஒன்று கூட்டல் ஒன்று என்றால் இரண்டு தானே எல்லோர்க்கும் விடை. ஜோதிடத்தில் மட்டும் ஆளுக்கொரு விடை வருவது எப்படி? அதுவே ஜோதிடம் பொய் என்பதற்கான சான்றல்லவா? அதைவிட ஒரு சிறு கேள்வி: கொரோனா கொடுந்தொற்று வந்து இப்படி உலகத்தில் (ஏறத்தாழ 68.2 மில்லியன் பாதிக்கப்பட்டவர்கள், 1.56 மில்லியன் உயிரிழந்தவர்கள், 44 மில்லியன் குணமானவர்கள்) இத்தனை லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள், இவ்வளவு பேர் பலியாவார்கள் என்று எந்த ஜோதிடராவது கூறியிருக்கிறார்களா? (பல ஊர்களில்) ஜோதிடர்களேகூட கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்! இது அசல் கேலிக் கூத்து ஆகும். புயல், பூகம்பம் எப்போது எங்கே எந்த நொடியில் உருவாகும் என்று ஜோதிடர்கள் கூற முடியுமா?

எனவே, ஜோதிடப் பைத்தியங்கள், பரிகாரம் என்ற பெயரில் அறிவையும், பொருளையும், காலத்தையும் இழப்பதைத் தவிர, நாம் கண்ட பலன்தான் என்ன? எனவே, ஜோதிடப் பைத்தியங்களே, திருந்துங்கள்!
– கி.வீரமணி,
ஆசிரியர்.

புதன், 19 ஜூன், 2024

செவ்வாய் தோஷம்? மெச்சத் தகுந்த உச்சநீதிமன்ற ஆணை


முகப்புக் கட்டுரை – 

2023 முகப்பு கட்டுரை ஜூன் 16-30,2023

– மஞ்சை வசந்தன்

உத்தரபிரதேசத்தில் உள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம் பல நேரங்களில் பரபரப்பான தீர்ப்புகளை வழங்கிய முக்கியமான நீதிமன்றம். அண்மையில் அந்த நீதிமன்றத்தில் ஒரு வழக்கு.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி, ஒரு பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தினார். ஆனால், அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்வதைத் தவிர்த்து, தொடர்ந்து ஏமாற்றி வந்தார்.
பாதிக்கப்பட்ட அப்பெண் புகார் அளித்ததை அடுத்து அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். பிணை கோரி, அவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை நாடினார்.

அப்போது அந்த இளைஞரின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், ‘‘அந்தப் பெண்ணுக்கு ‘செவ்வாய் தோஷம் உள்ளது; இந்தத் தோஷம் இருப்பவர்களைத் திருமணம் செய்தால், குடும்பத்துக்கு அழிவு ஏற்படும்; அதனால்தான், அந்தப் பெண்ணை என் கட்சிக்காரர் திருமணம் செய்யவில்லை’’ என வாதிட்டார்.

இதையடுத்து அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த அதிர்ச்சி தரும் உத்தரவு என்ன தெரியுமா?

‘‘இந்த வழக்கில் தொடர்புடைய பெண்ணும் – அந்த இளைஞரும் தங்கள் ஜாதகத்தை லக்னோ பல்கலைக்கழக ஜோதிடத் தலைவரிடம் 10 நாள்களுக்குள் அளிக்கவேண்டும்.

இதை ஆய்வு செய்து, அந்தப் பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் உள்ளதா இல்லையா? என பல்கலைக்கழக ஜோதிடத் துறை மூன்று வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட உறையில் வைத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்
என்று ஆணை பிறப்பித்தார்.

இந்த விவகாரம் குறித்து பத்திரிகைகளில் செய்தி வெளியானதை அடுத்து, உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்தது.
அப்போது உச்சநீதிமன்றம், ‘‘பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் உள்ளதா இல்லையா? என அறிக்கை அளிக்கும்படி, லக்னோ பல்கலைக்கழகத்திற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் ஏன் உத்தரவிட்டது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
எனவே, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் அந்த ஆணைக்கு (ஜோதிடம் பார்த்து முடிவு செய்யும் ஆணையை) தடை விதிக்கின்றோம்’’ என்று ஆணையிட்டுள்ளது!

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியின் ஆணை எவ்வளவு பெரிய அறியாமை! உயர்நீதிமன்ற நீதிபதிக்கே சட்டப்பார்வைக்கும் சமூக நம்பிக்கைகளுக்கும் வேறுபாடு தெரியாமல் போகலாமா?

சமுதாயத்தில் மக்கள் மத்தியில் எத்தனையோ அறியாமையின்பாற்பட்ட மூடநம்பிக்கைகள் இருக்கும். அப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளையெல்லாம் கருத்தில் கொண்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கமுடியுமா?

பக்தியின் பேரால் தன் பிள்ளையையே அறுத்து சாமியாருக்கு விருந்து கொடுத்தான் சிறுத்தொண்டன்.

இன்றைக்கு ஒரு தந்தை தன் பிள்ளையை பக்தியின் பேரால் அறுத்து கறி சமைத்தால் நீதிமன்றம் ஏற்குமா?
நம்பிக்கையின் அடிப்படையில் நரபலிகள் கொடுக்கப்படுகின்றன. அவற்றை நீதிமன்றம் ஏற்குமா?

சோதிடத்தில் ஒருவருக்கு படிப்பு வராது என்று சொன்னால், அவரைப் படிக்க வைக்காமல் ஒரு தந்தை இருந்தால் அதை நீதிமன்றம் ஏற்குமா? அந்தப்பிள்ளைக்கு படிப்பு வருமா? வராதா? அப்பிள்ளையின் ஜாதகத்தைப் பார்த்துச்சொல்லுங்கள் என்று பல்கலைக் கழகத்திற்கு உத்தரவு போடுவாரா நீதிபதி?நீதிபதியின் இந்த அணுகுமுறை எதனால் வந்தது? சோதிடத்தை பல்கலைக்கழகத்தில் பாடமாக வைத்ததன் அவலநிலை அல்லவா இது? பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளதால் அது உண்மை என்று எண்ணுகிறாரா நீதிபதி?

பாடத்தில் வருவதெல்லாம் அறிவியல் உண்மையாகுமா? சட்டம் அவற்றை ஏற்க முடியுமா?

சிவபெருமான் தலையில் கங்கையுள்ளது; நிலவு உள்ளது என்று பாடம் வைத்துள்ளார்கள். திருப்பாற்கடல் கடையப்பட்டதாய் பாடத்தில் சொல்லப்படுகிறது. பூமியை பாயைச் சுருட்டிய கதை பாடத்திட்டத்தில் உள்ளது. பாடத்திட்டத்தில் இருப்பதால் இவையெல்லாம் உண்மையாகிவிடுமா?

அறிவியலுக்கு எதிரான பாடங்கள் அறவே நீக்கப்பட வேண்டும்; வாஸ்து, பாடத்திட்டத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளதால், கட்டு
மான அறிவியலை (Civil Engineering) கைவிட்டு விட்டு, வாஸ்துபடி கட்டடங்களை கட்ட வேண்டும் என்று கூற முடியுமா?
மதவாத பி.ஜே.பி. அரசு தங்கள் நம்பிக்கைகளை, சாஸ்திர விதிமுறைகளையெல்லாம் சட்டமாக்க, பாடமாக்க முயற்சி செய்வதன் விளைவுகளே இச்சீர்கேடுகளுக்குக் காரணம்.

நீதிமன்ற நீதிபதிகளையே பாதிக்கும் அளவிற்கு இது சென்றுவிட்டதால், கல்வி நிலையங்களில், அறிவியலுக்கு எதிரான, முரணான ஒவ்வாத கருத்துகள் எதுவும் பாடத்திட்டத்தில் இருக்கக்கூடாது என்று முடிவு செய்து அப்படிப்பட்ட பாடங்களை உடனே நீக்க வேண்டும். இல்லையேல், உலக அரங்கில் இந்தியாவின் கல்வித்திட்டமும், நீதிமன்றமும், சட்டங்களும் கேலிக்குரியனவாய் மாறிவிடும். இந்திய விஞ்ஞானிகள் எல்லாம் தலைகுனிந்து நிற்க வேண்டிவரும். எனவே, கல்வியாளர்களும், விஞ்ஞானிகளும் கூடிப்பேசி, இப்படிப்பட்ட அவலங்களை அகற்ற உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நீதிபதிகளின் தனிப்பட்ட நம்பிக்கைகள் எல்லாம், தீர்ப்பில் தற்போது எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. அனைத்து சாதியினர் அர்ச்சகர் தொடர்பான வழக்கில்கூட, அதை விசாரித்த நீதிபதியின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப தீர்ப்புகள் வருவது, சட்டப்படியான, சமூகநீதியின் அடிப்படையிலான ஆட்சியின் மாண்பைக் குலைத்து மண்மூடச் செய்துவிடும் என்பதை நீதித்துறையில் உள்ளவர்கள் உடனடியாகக் கருத்தில்கொண்டு செயல்பட்டு முடிவெடுக்க வேண்டும்.

நீதிமன்றங்களில் சட்டப்பார்வை மட்டுமே இருக்கவேண்டுமே தவிர, தனிப்பட்ட நம்பிக்கைகள், கொள்கைகள், விருப்பு, வெறுப்புகள் அங்கு நுழைந்தால் நீதித்துறையையே அது சீரழித்து, சீழ்பிடிக்கச் செய்துவிடும்.

செவ்வாய் தோஷம் உண்மையா?

செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணைத் திருமணம் செய்தால் இன்னின்ன பாதிப்புகள் வரும் என்பது ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளனவா? செவ்வாய் தோஷம் உள்ளதாகக் கூறும் சோதிடம் முதலில் சரியாக கணிக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டதா?
நீதிமன்றத்தில் ஒரு கொலைக்கான தடயங்களை உறுதி செய்ய எத்தனை பரிசோதனைகள், ஆய்வுகள் செய்யப்படுகின்றன. தடயவியல் ஆய்வு, மருத்துவர் ஆய்வு, சோதனைக்கூடத்தில் ஆய்வு என்று பல ஆய்வுகள் அறிவியல் கண்ணோட்டத்தில் செய்யப்பட்டு, அத்தடயங்களின்

உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்ட பின்பே அவை ஏற்கப்படுகின்றன.
அப்படியிருக்க, சோதிடம் உண்மை என்று ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதா? செவ்வாய் தோஷம் உண்மை, அதனால் பாதிப்பு வரும் என்று ஆய்வுகள் நடத்தப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதா?

எந்த ஆய்வும் இன்றி, சோதனையின்றி, இதை எப்படி ஏற்க முடியும்? இந்த அடிப்படைச் சிந்தனைகூட இன்றி ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி எப்படி ஆணையிட்டார்?

உச்சநீதிமன்ற ஆணை மெச்சத் தகுந்தது

செய்தித்தாளில் செவ்வாய்தோஷம் சார்ந்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியின் உத்தரவு வெளிவந்ததைப் பார்த்த அளவிலே உச்சநீதிமன்ற நீதிபதிகள், தாங்களாகவே முன்வந்து அதை வழக்காக எடுத்து, உயர்நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்குத் தடையும் உடனடியாக விதித்துள்ளனர் என்றால், அதன்உட்பொருள் என்ன? உயர்நீதிமன்ற நீதிபதியின் உத்தரவு அந்த அளவிற்கு சட்டத்திற்குப் புறம்பானது, நீதிமன்ற விதிமுறைகளுக்கு, விசாரணை முறைகளுக்கு எதிரானது என்பதை அவர்கள் உணர்ந்ததால்தான் உடனடியாக தடைவிதித்து ஆணையிட்டுள்ளனர்.

சோதிடம், வாஸ்து போன்ற மூடநம்பிக்கைகளை பாடமாக வைப்பது எவ்வளவு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை இந்த வழக்கின் மூலமாக, இந்த பா.ஜ.க. அரசு உணர்ந்து தங்கள் தப்பை உடனடியாகச் சரிசெய்து கொள்ள வேண்டும். அறிவியலுக்கு எதிரான பாடங்களை உடனடியாக பாடத்திட்டத்திலிருந்து விலக்கிக்கொள்ள வேண்டும்.

அறிய வேண்டிய அறிவியல் கருத்துகளை பாடமாக வைக்காமல், மூடநம்பிக்கைகளை பாடமாக வைப்பதும், கட்டாயம் கற்க வேண்டிய மக்களாட்சி பற்றிய பாடங்களை பாடச்சுமை என்று நீக்குவதும், கல்வித்துறை கற்காலத்தை நோக்கிக் கொண்டு செல்லப்படுவதையே காட்டுகிறது.

ஒன்பது கிரகங்கள் என்று கணக்கில் கொண்டு சோதிடம் கணிக்கிறார்கள். வெறுங்கண்ணால் பார்த்து கணித்த காலத்தில் ஒன்பது. ஆனால் அதன்பின் புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

அப்படியென்றால் எல்லா கோள்களையும் கணக்கில் கொள்ளாமல் காணப்படும் சோதிடம் எப்படிச் சரியாக இருக்க முடியும்?
மேலும், சூரியன் நிலையாக தன்னைத்தானே சுற்றக்கூடியது. ஆனால், சூரியன் கோள்களைச் சுற்றி வருவதாக சோதிடம் கூறுகிறது.இது அறிவியலுக்கு முற்றிலும் எதிரானது; உண்மைக்கு மாறான கருத்தின் அடிப்படையில் கணிக்கப்படும் சோதிடம் எப்படிச் சரியாக இருக்க முடியும்?

கடவுளுக்கு எதிரானது சோதிடம் :

கடவுள் கொள்கைப்படி ஒருவனுடைய வாழ்க்கை கடவுளின் விதிப்படி அமைவது.ஆனால், ஒருவரது வாழ்க்கை கிரகங்களால் தீர்மானிக்கப்படுகிறது என்கிறது சோதிடம். அப்படியென்றால் சோதிடம் கடவுளை மறுக்கிறது என்று பொருள்.

வாழ்வைத் தீர்மானிப்பது கடவுளா? கிரகங்களா என்பதையே உறுதி செய்ய முடியாத நிலையில், செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணைத் திருமணம் செய்யக்கூடாது என்பது அநீதியல்லவா? பெண்ணுக்குச் செய்யும் துரோகம் அல்லவா?

https://unmai.in/images/magazine/2023/june/16-30/30.jpg

செவ்வாய் என்பது ஒரு கோள். அங்கு மனிதன் விண்கலம் இறக்கி சோதனை செய்கிறான். செவ்வாயில் உயிரினங்கள் உண்டா என்று ஆய்வு நடத்துகிறான். செவ்வாயில் குடியேற திட்டம் வகுத்துக்கொண்டிருக்கிறான். அப்படி அறிவியில் வளர்ச்சி உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கும் நிலையில் செவ்வாய் தோஷம் என்று கூறி பெண்ணின் வாழ்வைக் கெடுக்க முற்படுவது, அதற்கு உயர்நீதிமன்றமே துணை நிற்பது மிகப்பெரிய அவலம் அல்லவா?

ஆசிரியர் அறிக்கை

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியைக் கண்டித்தும் உச்சநீதிமன்ற நீதிபதிகளைப் பாராட்டியும் ஆசிரியர் அவர்கள்நுட்பமான, பொருள் பொதிந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

“அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியின் ஆணையை நாளேடுகளில் பார்த்ததும், தாங்களாகவே முன்வந்து (Suo Moto) நடவடிக்கை மேற்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவு பாராட்டுக்குரியதாகும்.

இந்திய அரசமைப்புச் சடடத்தின் மீதுதான் எல்லா நீதிபதிகளும் பதவிப் பிரமாணம் எடுக்கிறார்கள்.
அதில் ‘‘அடிப்படைக் கடமைகள்’’ (Fundamental Duties)என்ற தலைப்பில் 51-ஏ (எச்) பிரிவு 1976 முதலே இணைக்கப் பட்டுள்ளது!

ஒரு பிரிவு மிகத் தெளிவாக,

‘‘It shall be the duty of every citizen of India to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform’’ என்று கூறுகிறது.

‘‘அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், புலனறிவு மற்றும் சீர்திருத்த உணர்வை வளர்ப்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையாகும்’’ என்பது அதன் தமிழாக்கம் ஆகும்.

வாஜ்பேயி ஆட்சிக்காலத்தில் பல்கலைக் கழகங்களில் மூடத்தனத்தைப் படிப்பாக்கினர்!

சோதிடம் என்பது அறிவியல் அடிப்படையைக் கொண்டதல்ல; மாறாக, ‘‘போலி அறிவியல் (விஞ்ஞானம்)’’ (ழிஷீt ஷிநீவீமீஸீநீமீ தீut றிsமீuபீஷீ ஷிநீவீமீஸீநீமீ) என்றாலும், பா.ஜ.க. ஆட்சியில் முரளி மனோகர் ஜோஷி மனிதவளத் துறை அமைச்சராக, வாஜ்பேயி தலைமையிலான ஒன்றிய அரசில் இருந்தபோது, பல்கலைக் கழகங்களில் இப்படி ஒரு மூடத்தனத்தைப் படிப்பாக ஆக்கி, விருப்பத்தைத் தூண்ட, அப்பல்கலைக் கழகங்களுக்கு நிதி உதவி உண்டு என்றும் நாக்கில் தேனைத் தடவினர்.

அதன் தீய விளைவு நாட்டில் பல பல்கலைக் கழகங்களில் இந்தப் போலி அறிவியல் துறையும் ஏற்படுத்தப்பட்டு இயங்குகிறது!
எவ்வகையில் சரியானது?

அது ஒருபுறமிருந்தாலும், உயர்நீதிமன்ற நீதிபதி இப்படி அறிவியல் மனப்பாங்குக்கு முரணான வகையில், அடிப்படைக் கடமையைச் செய்யாது இப்படி மூடத்தனத்திற்கு போலி விஞ்ஞானத்திற்குப் புத்தாக்கம் தருவதுபோல் நடந்து கொள்ளுவது எவ்வகையில் சரியானது?
இது அவர் எடுத்த அரசமைப்புச் சட்ட உறுதிமொழிக்கு முற்றிலும் முரண் அல்லவா?

உயர்ஜாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு வழக்கில் 3 இல் 2 என்று தீர்ப்பு வந்த அமர்வில், தீர்ப்பு எழுதிய ஒரு நீதிபதி (உச்சநீதிமன்றத்தில்) ‘‘டாக்டர் அம்பேத்கர் இட ஒதுக்கீடு 10 ஆண்டுகள் இருந்தால் போதும் என்று கூறியிருந்தார்’’ என்று எழுதியுள்ளார்!

அரசியல் ரிசர்வேஷன் வேறு; கல்வி, உத்தியோக இடஒதுக்கீடு வேறு என்ற வேறுபாடுகூட அறியாமல் இப்படி தீர்ப்பில் எழுதியது, ஏனோ புரியவில்லை!

நீதி இப்படி திரிபுகளுக்கு இரையாகக் கூடாது என்பதே பகுத்தறிவாளர்களின் கவலை!

இப்படிப்பட்ட சூழலில், தங்கள் ஆணையின் மூலம் மனிதம் தழைக்கச் செய்தார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள்!
மனிதர்கள், செவ்வாய்க் கிரகத்திற்குச் சென்று ஆய்வு (விண்வெளி ஆய்வு) நடத்திடும் இந்த அறிவியல் யுகத்தில், இப்படி ஒரு விசித்திர ஆணை அலகாபாத் உயர்நீதிமன்றத்திலிருந்து கிளம்பியது குறித்து வேதனைப்பட்டாலும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதனை உணர்ந்து, உடனே தடையாணை வழங்கியது, நீதியை மட்டும் காப்பாற்றிடவில்லை; கூடுதலாக அறிவியல் மனப்பாங்குக்கும் பாதுகாப்பு அளித்து ‘‘மனிதம்‘’ தழைக்க உதவியுள்ளார்கள்.அவர்களுக்கு பாராட்டுகள்!’’ என்று ஆசிரியர் அவர்கள் தமது அறிக்கையில் கூறியுள்ளார்கள்.

எனவே, அரசியல் சாசனப்படி பதவியேற்றுக்கொண்டுள்ள நீதிபதிகள், அரசியல் சட்டத்தை மதித்து, அறிவியல் அடிப்படையில் செயல்படவேண்டியது கட்டாயக் கடமையாகும். சமூக நம்பிக்கை என்பது வேறு; சட்டப் பார்வை வேறு என்பதை நீதிபதிகள் அறிந்து செயல்பட வேண்டியது கட்டாயக் கடமையாகும்.♦


சனி, 8 ஜூன், 2024

கிரகணத்தைப் பார்த்தால் ஆபத்தா?


அறிவியல் : 

த.வி.வெங்கடேஸ்வரன்

முதுநிலை விஞ்ஞானி, புதுடில்லி
முந்தைய சூரிய சந்திர கிரகணங்களின் போது ஒவ்வொருமுறையும் உண்மையில்லாச் செய்திகள் பரப்பியது போலவே, அக்டோபர் 25ஆம் தேதி நிகழ்ந்த சூரிய கிரகணம் குறித்தும் பரப்பி வருகின்றனர்.
தவறான செய்திகளை சூரிய கிரகணம் ஏற்படும் என்பது பாரம்பரியப்
பஞ்சாங்கம் கணித்தபடி நடக்கிறது, மேலும் கிரகணக் காலங்களை மிகச்சரியாக நம்
பஞ்சாங்கங்கள் கணித்து உள்ளன என்றும் கூறிக் கொள்கின்றனர்.

கிரகணச் சமயத்தில் கர்ப்பிணிப் பெண்கள் வெளியே வரவேண்டாம் எனவும் வாட்ஸ்ஆப் செய்திகள் காட்டுத் தீ போலப் பரவி வருகிறது.
ஆனால், மிகத் துல்லியமாக பஞ்சாங்கம் கணிப்பது இல்லை என்பதோடு, கிரகணத்தின் போது எந்தவிதமான மர்மக் கதிர்களும் வெளிப்படுவதும் இல்லை. இந்த அறிவியல் உண்மையை நாம் உரக்கச் சொல்ல வேண்டி இருக்கிறது.

பிழைபட்ட பஞ்சாங்கக் கணிப்பு
சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே உள்ள கோணம் தான் திதி. சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே 12 பாகை (டிகிரி) கொண்டது ஒரு திதி. சுக்லபட்ச பிரதமை எனும் முதல் திதி 0_12 பாகை [அதாவது வளர்பிறை கால முதல் திதி என்றே பொருள்]; சுக்லபட்ச துவிதியை எனும் இரண்டாம் திதி 12_24 டிகிரி என அடுத்தடுத்த திதிகள் அமையும். இறுதி 348_360 பாகை வரை அமாவாசை திதி ஆகும்.
நிலவு, பூமி, சூரியன் என்ற வரிசையில் ஒரே தளத்தில் அமையும்போது பவுர்ணமி திதி முடிவுக்கு வரும். அடுத்த திதியான கிருஷ்ண பட்ச பிரதமை (தேய் பிறைக் கால முதல் திதி) துவங்கும்.
அதேபோல பூமி, நிலவு, சூரியன் என்ற வரிசையில் ஒரே தளத்தில் அமையும்போது அமாவாசை திதி முடிந்து அடுத்த திதியான சுக்லபட்ச பிரதமை துவங்கும் (முதலாம் வளர் பிறை). அதாவது சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே பூச்சியம் பாகை அமையும்போது அமாவாசை திதி முடிவுக்கு வரும்.
எனவே, சூரிய கிரகணம் ஏற்பட்டால் அமாவாசை முடிவுறும் நிலையில் தான் உச்சபட்ச கிரகணம் _ அதிகபட்ச மறைப்பு _ ஏற்படவேண்டும்.
அதாவது, அக்டோபர் 25 அன்று நிகழும் சூரிய கிரகணத்தின் போது, சென்னையில் உச்சபட்ச சூரிய கிரகணம் 17:42 மணிக்கு நிகழும்.
ஆனால், சென்னையில் அமாவாசை திதி முடியும் காலம் 16:18 என வாக்கியப்
பஞ்சாங்கமும், 16:19 என திருக்கணிதப்
பஞ்சாங்கமும் கூறுகிறது. இது சரியல்ல. எனவே, இந்த இரண்டு வகைப் பஞ்சாங்கங்கள் கூறுவதும் பிழையானது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

பஞ்சாங்கம் என்றால் என்ன?
பஞ்சாங்கம் என்பது பல்லி விழுந்த பலன் போலக் குறி சொல்லும் புத்தகம் எனவும், கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் நம் வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை வெளிப்படுத்தும் கணிதம் எனவும் கருதப்படுகிறது.
நவீன நாள்காட்டிகள் உருவாக்குவதற்கு முன்னர் இருந்த நாள்காட்டி தான் பஞ்சாங்கம். பஞ்ச +அங்கம் அதாவது வாரம், திதி (நிலவின் பிறை), நட்சத்திரம் (அன்றைய வானில் நிலவின் நிலை), கர்ணம் (திதியின் இரண்டு பகுதி),யோகம்(நிலவு மற்றும் சூரிய நிலையின் கோணத்தின் கூட்டு) ஆகிய அய்ந்து வானியல் நிலைகளைக் கொண்டுள்ள பட்டியல்.
குறிப்பிட்ட நாளில் நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் என்ன திதி இருக்கும், என்ன நட்சத்திரம் இருக்கும் என்பது போல, பஞ்ச + அங்கம் பட்டியல் செய்வது ஆகும்.

பஞ்சாங்கக் குளறுபடி
நவீன அறிவியல்படி நட்சத்திர ஆண்டு சுமார் 365.25636 நாள்கள் ஆகும். ஆனால், ஆரியபட்டரின் சித்தாந்தத்தின் படி இது 365. 258681 நாள்கள், சூரிய சித்தாந்தத்தின்படி இது 365.258756 நாள்கள்.
வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 248 நாள்-களுக்கு ஒருமுறை நிலவு தன் நிலையை வானில் மறுபடி துல்லியமாக எட்டும். ஆனால், நவீன அறிவியலின்படி 247.99095 நாள்களுக்கு ஒரு முறை எட்டிவிடும்.
பஞ்சாங்கக் கணிதம் உருவானது ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்; அப்போது இந்தப் பிழைகள் பெரிதும் பாதிப்பு தரவில்லை. ஆனால், காலப்போக்கில் இந்தச் சிறுசிறு பிசிறுகள் ஒன்று சேர்ந்து பெரும் பிழையாக மாறிவிட்டது.
இடைக்காலத்தில் ஏற்பட்ட சமூக இறுக்கத்தின் தொடர்ச்சியாக வாக்கியக் கரணம் போன்ற நூல்களை “கடவுள் அருளிச் செய்தது” எனக் கூறத் துவங்கினர்.
எனவே, கடவுளின் வாக்காக வாக்கியங்கள் கருதப்பட்டுப் பிழை திருத்தப்படவில்லை. இதன் தொடர்ச்சியாக இன்று பஞ்சாங்கக் கணிப்புக்கும் வான் பொருள்களின் மெய்யான நிலைக்கும் பெரும் வேறுபாடு உள்ளது.
இவ்வாறு பஞ்சாங்கத்தின் பற்பல அபத்தமான பிழைகள் வானவியல் அறிந்தவர்-களுக்கு வெள்ளிடை மலை போல் விளங்கும்.

குட்டு வெளிப்படும்!
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட சூத்திரங்கள் பலநூறு ஆண்டுகளாக உண்மை கிரக நிலையுடன் ஒப்பிட்டுத் திருத்தம் செய்யாமல் அப்படியே பயன்படுத்துவதால் பஞ்சாங்கத் தகவல்கள் உண்மையான கிரக நிலையிலிருந்து வேறுபட்டு அமைகின்றன.
கிரகணம் போன்ற வெறும் கண்களால் எளிதில் காணக்கூடிய நிகழ்வுகள் பிழையாக இருந்தால் ஊர்மக்கள் கைகொட்டிச் சிரிப்பார்கள் என்பதால், பஞ்சாங்கம் பிரசுரம் செய்பவர்கள் தங்கள் கணிப்பை ஒதுக்கி வைத்துவிட்டு அறிவியல் நிறுவனமான வான்பொருள் நிலை கணிப்பு மய்யம், கொல்கத்தா (Positional Astronomy Centre, Kolkata)  கணிக்கும் தரவுகளை அப்படியே தங்களது பதிப்பில் பிரசுரம் செய்து விடுகிறார்கள்.
எனவேதான், கிரகணத்தின் துவக்கம் முடிவு போன்றவை ஒத்து வருவது போல நமக்குப் புலப்படுகின்றன. ஆனால், திதி போன்ற அம்சங்களைப் பாரம்பரியச் சூத்திரம் கொண்டு கணிக்கிறார்கள். எனவே தான் அக்டோபர் 25 அன்று சென்னையில் 17:42 மணிக்கு முடியும் அமாவாசையை 16:18 என வாக்கியப் பஞ்சாங்கமும், 16:19 என திருக்கணிதப் பஞ்சாங்கமும் பிழையாகக் கூறுகின்றன.
இரவு வானில் நிலவு அற் று இருக்கும்போது அந்த நாள் அமாவாசை இரவு என எளிதில் காணலாம். ஆனால் மிகச் சரியாக பூமி, நிலவு, சூரியன் ஒரே தளத்தில் நின்று அமாவாசை திதி முடிவுறுவதை வெறும் கண்களால் காணவியலாது.
கிரகணம் குறித்த விவரங்களை மேலோட்ட-மாகப் பார்த்தால் பஞ்சாங்கம் சரியாகத்தானே கூறுகிறது எனக் கருதத் துணிவோம். ஆனால், பஞ்சாங்கக் கணித விவரங்களை உற்றுநோக்கினால் குட்டு வெளிப்பட்டு விடும்.

மர்மக் கதிர்கள்
வெயிலில் குடையைக் கொண்டு சூரியனை மறைத்து நிழல் ஏற்படுவது போல, நிலவு, சூரியனுக்கு முன்புறமாகச் செல்லும்போது சில மணித்துளிகள் சூரியனை மறைக்கிறது. இதுவே கிரகணம்.
அதாவது குடை, மரம், கட்டடம் போல நிலவு ஏற்படுத்தும் வெறும் நிழல் தான் கிரகணம்.
கிரகணச் சமயத்தில் சூரியனில் எந்தவொரு சிறப்பு மாற்றமும் ஏற்படுவதில்லை. எப்போதும் போல நாற்புறமும் தன் ஒளியை வீசிக்கொண்டு இருக்கிறது. வேறு எந்த சிறப்பு மர்மக் கதிர்களும் வெளிப்படுவது இல்லை.
பூமி இருக்கும் திசையில் இடையில் நிலவு வந்து மறைத்து விடுவதால் பூமியில் சில பகுதிகளில் சூரிய முகம் மறைக்கப்படுகிறது. அந்தப் பகுதியில் மட்டும் கிரகணம் தென்படும்.
உலகில் வேறெங்கும் கிரகணத்தைக் கண்டு கர்ப்பிணிப் பெண்கள் ஓடி ஒளிந்து கொள்வதில்லை. அங்கெல்லாம் கர்ப்பிணிப் பெண்களுக்கும் வயிற்றில் வளரும் குழந்தை-களுக்கும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படுவதில்லை.
கருக்கொண்ட பூச்சிகள் முதல் விலங்குகள் வரை அதன் போக்கில் கிரகணத்தின் போது வெளியே திரிந்து கொண்டுதான் உள்ளன. அவற்றுக்கும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படுவதில்லை.

பாதுகாப்பாகக் காண்போம்!
சூரிய சந்திர கிரகணம் என்பது அற்புதமான வானக்காட்சி. இயற்கையின் இந்த விளையாட்டைப் பாதுகாப்பாகக் கண்டு களிக்க வேண்டும். வெறும் நிழலைக் கண்டு அச்சப்படுவது பேதைமை.
தமிழ்நாடு அறிவியல் மய்யம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்ற பல்வேறு அரசு மற்றும் தன்னார்வ அறிவியல் பிரச்சார அமைப்புகள் பொதுமக்கள் பாதுகாப்பாக கிரகணத்தைக் கண்டுகளிக்கும் வண்ணம் வெவ்வேறு இடங்களில் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.
உங்கள் பகுதியில் நடைபெறும் நிகழ்வு-களைக் கண்டறிந்து பங்கேற்க வேண்டும்.


செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

நாடி ஜோதிடம் உண்மையா?-2

மூடநம்பிக்கை : 

2022 ஆகஸ்ட் 01-15 2022 மற்றவர்கள்

ஒளிமதி

மேலே கூறப்பட்டவை, மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கூறியதாகக் கண்ணதாசன் குறிப்பிட்டவை-யாகும்.
நல்லவேளை மதுரை ஆதீனகர்த்தர் நாடி ஜோதிடம் பார்க்கப் போகவில்லை. போயிருந்தால் நாடி ஜோதிடன் தவித்துப் போயிருப்பான்.
“ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்’’ என்ற இவ்வளவு நீட்டுப் பெயருக்கு எப்படிச் சமாளிப்பது? ஏகப்பட்ட ‘கப்சாக்கள்’ அல்லவா அடிக்க வேண்டும்.
கோவை கவுமார மடத்தின் நிறுவனர் இராமக்குட்டிக்கு பிற்காலத்தில் பெயர் ‘இராமானந்தர்’ என்று மாறும் என்று நாடி ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகச் சொல்கிறார்.
அப்படியென்றால், நம்ம ஜெயலலிதா நாடி ஜோதிடம் பார்க்கப் போயிருந்தால், புரட்சித்தலைவி, புரட்சித்தாய், தமிழ்த்தாய், காவிரித்தாய், தெய்வத்தாய், அன்னைமேரி, கன்னிமேரி, இதயத்தாய், காவல்தாய், சமூகநீதி காத்த வீராங்கனை… என்றெல்லாம் பெயர் நாடி ஏட்டில் கண்டிருந்திருக்குமா?
இன்றைக்கு அப்பன் ஆத்தாள் பெயர் தெரியாமல் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இருக்கிறார்களே, அவர்களை நாடி ஜோதிடக்காரனிடம் அழைத்துச் சென்று அப்பா பெயர், ஆத்தாள் பெயர், ஊர்ப் பெயர் கேட்டால் சொல்வானா?

பெயர் என்ன என்று கேட்டால், நேரடியாக ஜான் என்று சொல்ல வேண்டியதுதானே? அதை விடுத்து ‘முழத்தில் பாதி’ என்று ஏன் குறிப்பிட வேண்டும்?
‘ஜான்’ என்பது இரண்டெழுத்து. ‘முழத்தில் பாதி’ என்பது ஏழு எழுத்து. எப்படிச் சொல்வது சுருக்கம்?
மூக்கு என்று சொல்வதை விட்டுவிட்டு நெத்திக்குக் கீழே கண்களுக்கு நடுவே, உதட்டுக்கு மேலே உள்ள உறுப்பு என்றால் அது எவ்வளவு பைத்தியக்காரத்தனமோ அவ்வளவு பைத்தியக்காரத்தனம் இது!
அது மட்டுமல்ல, முழத்தில் பாதி என்றால் ஜாண்; ‘ஜான்’ என்பதற்கு ‘ன்’ இரண்டு சுழி. ஆனால், ஜாண் என்பதற்கு ‘ண்’ மூன்று சுழி.
நாடி சாஸ்திரமெல்லாம் பரமசிவன் பார்வதிக்குச் சொன்னது என்று கூறப்படுகிற போது, பிழைபடச் சொல்லியிருப்பார்களோ?
பீட்டர், மேரி, இன்குலாப், அய்சக், உட்ஸ் என்ற பெயரெல்லாம் நாடி சாஸ்திரத்தில் இருக்கிறதா?

அய்ந்தும் ஒன்றும் வதனமெனப் பெயர் சூட்டி என்றால், அய்ந்து + ஒன்று = ஆறு என்று மட்டுந்தான் பொருள் கொள்ள முடியுமா? 51 என்று பொருள் கொள்ள முடியாதா?
‘அய்ந்தும் ஒன்றும் வதனம்’’ என்பதற்கு அய்ந்தும் ஒன்றிய (ஒன்று சேர்ந்த) வதனம் அதாவது அய்ந்து முகம் என்று ஏன் பொருள் கொள்ளக் கூடாது? அய்ந்து முகம் உடைய சிவபெருமான் பெயராக ஏன் இருக்கக் கூடாது? சிவனுக்கு அய்ந்து முகம் என்பது புராணம்.
‘அய்ந்தும் ஒன்றும் வதனம்’ என்பதற்கு ஆறுமுகம் என்று மட்டுந்தான் அர்த்தமா? சண்முகம் என்று பொருள் இல்லையா? சண்முகம் என்பதன் பொருள் ஆறுமுகந்தானே?
அதாவது பலருக்கும் பொருந்தும்படி திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்டவை நாடி சாஸ்திர ஏடுகள் என்பது இதிலிருந்து விளங்குகிறது அல்லவா?
எந்த நாடி ஜோதிடனும் உடனே ஏடு கொடுப்பதில்லை. தேடி எடுக்க வேண்டும் என்றுதான் சொல்லுவான். காலஅவகாசம் எடுப்பான். காரணம், அதற்குள் பழைய ஓலைகள் தயார் செய்துகொள்ள.

இந்துவைப் போல மாறுவேடத்தில் சென்ற முஸ்லிம் பெயர் அப்துல் ரஹ்மான் என்று இருந்ததாம். இந்தப் பெயர் மட்டும் எப்படி ஓலையில் நேரடியாக எழுதப்பட்டிருந்தது? ‘ஜான்’ என்ற பெயருக்கு ‘முழத்தில் பாதி’ என்று இருந்தது போல். இதற்கும் மீட்டர், கெஜக்கோல் என்று ஏதாவது எழுதப்பட்டிருக்க வேண்டாமா?
அப்துல் ரஹ்மான் என்ற நீண்ட பெயரே நேரடியாக நாடி ஏட்டில் எழுதப்பட்டிருக்கும் போது ‘சூசை’ என்ற சுருக்கமான பெயர் நேரடியாக எழுதப்பட்டிருக்கலாமே? அதைவிட்டு, சாவில் ஆறும் சாவில் ஒன்பதும் என்று ஏன் வளர்த்தலாக, மறைமுகமாகச் சொல்லப்பட வேண்டும்? சூசை என்பது தமிழ் வார்த்தை அல்ல. அப்படியிருக்க தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை எப்படிப் பொருந்தும்?

எல்லாம் மோசடிக்காகத்தான் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?இந்த ஏடுகளைக் கண்டுபிடிக்க மதுரை ஆதினகர்த்தர் 20 ஆண்டுகளுக்கு முன்னே ஒரு லட்சம் ரூபாய் வரை செலவிட்டாராம். எதற்கு? ஏடு கண்டு பிடிக்கவா? ‘ஏடு’ செட்டப் செய்யவா? வாசகர்கள் முடிவு செய்துகொள்ள விரும்புகிறேன்.
“புயலாடு புலவன் சரலில் பூமகள் மதிகோலாக
வெயில் மகன் போகி நண்டில், வேதியன் தேள் மீதாக
செயுமிக்கோள் நிலையில் தோற்றும் சேயாறார்க்குயிர் – சியத்தே
பயன்தரு மிலனின் ஜென்மம், பாண்டியன் நாட்டுக்குள்ளே’’
அதாவது இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள கிரக நிலையில் பிறக்கின்றவன் பாண்டியன் நாட்டுக்குள்ளே பிறப்பான் என்பதாகும்.

(ஆதாரம்: வேலு அவர்கள் எழுதிய ‘கவுமார ஜோதிடப் புரட்டு’ என்னும் கட்டுரை)
சேர, சோழ, பாண்டிய நாடு என்னும் பிரிவு இடைக்காலத்தில் ஏற்பட்ட ஒரு பிரிவாகும். ஆனால், நாடி ஜோதிடமோ ஆதிநாளில் இறைவனால் கூறப்பட்டது என்று சொல்லப்படுகிறது. அதாவது சேர, சோழ, பாண்டிய நாட்டுப் பிரிவுகள் ஏற்படாத காலத்தில் எழுதப்பட்டதாகச் சொல்லப்-படுகிறது. அப்படியென்றால்பாண்டிய நாட்டுப் பிரிவுகள் தோன்றாத காலத்தில் அந்தக் கிரக நிலையில் பிறந்தவர்கள் எந்தப் பகுதியில் பிறப்பார்கள்? அப்போது பாண்டிய நாடு இல்லையே!
அது மட்டுமல்ல. இப்போது தமிழ்நாடு என்றாகி மதுரை மாவட்டம், விருதுநகர் மாவட்டம், நெல்லை மாவட்டம் என்று புதிய பெயர்கள் தோன்றிய பின் அந்தக் கிரக நிலையில் இன்றைக்குப் பிறக்கிறவன் எப்படிப் பாண்டிய நாட்டில் பிறக்க முடியும்?
இந்த நாடி ஜோதிடப் பாடல் பாண்டிய நாடு நடைமுறையில் இருந்த காலத்தில் எழுதப்பட்டது. அதனால்தான் அதற்கு முந்திய காலத்திற்கும் பிந்திய காலத்திற்கும் பொருந்தவில்லை.
எனவே, நாடி ஜோதிடப் பாடல்கள் இறைவனால் எழுதப்பட்டவை அல்ல என்பதும், அது காலத்திற்கு ஏற்ப மோசடிப் பேர்வழிகளால் எழுதிக் கொள்ளப்படுவது என்பதும் தெளிவாகிறது.


திங்கள், 17 ஏப்ரல், 2023

ஜோதிடம் உண்மையா?

மூடநம்பிக்கை : ஜோதிடம் உண்மையா?

2022 மற்றவர்கள் ஜுலை 01-15 2022

ஒளிமதி

உலகில் நடைபெறுகின்ற மோசடிகள் அனைத்தும் மனிதனிடமுள்ள பலவீனத்தை அடிப்படையாக வைத்தே செய்யப்படுகின்றன. அவ்வாறே ஜோதிட மோசடியும் மனிதனின் இயல்பறிந்து செய்யப்படுகிறது.
மறைக்கப்படுகின்ற எந்தவொன்றையும் காண வேண்டும் என்கிற ஆசை எழுவது மனிதனுக்கு இயல்பு.
எனவே, நடக்கப் போவதை அறிவிக்கிறேன் என்று யாராவது கூறியவுடன் ஆவலோடு அங்குச் செல்கிறான். அதற்காகச் செலவிடவும் தயாராக இருக்கிறான். இந்த மனநிலையைப் பயன்படுத்திக் காசு பறிக்கக் கையாளப்படுகின்ற யுக்தியே ஜோதிடம்.
இவ்வாறு நாம் கூறியவுடன், “ஜோதிடம் என்பது மூடநம்பிக்கைகளைப் போல அல்ல; இது அறிவியல் சார்ந்தது. கிரகங்களின் இயக்கத்திற்கும் மனித நடவடிக்கைகளுக்கும் சம்பந்தம் உண்டு. அந்த அடிப்படையில் கணிக்கப்படுவதே ஜோதிடம்’’ என்று சிலர் கூறுகின்றனர்.
எனவே, கிரகங்களின் இயக்கத்திற்கும் மனித வாழ்க்கை அமைவதற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்பதை முதலில் ஆராய வேண்டும்.
ஒரு குழந்தை பிறக்கும்போது, அமைந்துள்ள கிரகங்களின் நிலைக்கேற்பவே. அக்குழந்தையின் வாழ்க்கை அமைகிறது என்பதே ஜோதிடத்தின் அடிப்படைத் தத்துவம்.
இத்தத்துவம் சரியென்றால் ஜோதிடம் என்பது சரி _ உண்மை; இத்தத்துவம் தவறு என்றால் ஜோதிடம் என்பதும் தவறு _ பொய்.
ஒரு குழந்தை பிறக்கும்போது இருக்கின்ற கிரகங்களின் நிலைக்கு ஏற்பவே. அக்குழந்தை-யின் வாழ்க்கை அமையும் என்றால், அதே நேரத்தில் பிறக்கின்ற அத்தனை குழந்தைகளின் வாழ்க்கையும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் அல்லவா? ஆனால், அவ்வாறு இருக்கிறதா என்றால் இல்லை.
ஒரு நொடிப்பொழுதில் உலகில் நூற்றுக்-கணக்கான குழந்தைகள் பிறக்கின்றன. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கின்ற குழந்தை இறந்தால், ஜோதிடத் தத்துவப்படி. அந்த நேரத்தில் பிறக்கின்ற அத்தனை குழந்தைகளும் பிறந்தவுடன் இறந்து போக வேண்டும். ஆனால், அவ்வாறு இறந்து போகின்றனவா? இல்லையே!
பிறக்கின்ற நேரத்தில் இருக்கின்ற கிரக நிலைக்கேற்பவே வாழ்நாள் அமையும் என்றால், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பிறக்கின்ற நாய், பன்றி, ஈ, கொசு, யானை, சிங்கம் இவற்றின் வாழ்க்கைகூட ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும். இருக்கின்றதா? இல்லையே!
பிறக்கின்ற இடத்தையும் பார்க்க வேண்டும் என்று சிலர் கூறுவர். அப்படியே பார்த்தாலும் ஒரு குறிப்பிட்ட நாட்டில் பிறக்கின்ற அத்தனை குழந்தைகளும் ஒரே மாதிரி வாழ்கின்றனவா? இல்லையே!
எனவே, ஜோதிடத்தின் அடிப்படைத் தத்துவமே பொய் என்பது புரிகிறதல்லவா? அடிப்படையே பொய் என்றால், அதன் மீது புனையப்படும் மற்ற ஜோதிட அளப்புகள் அனைத்தும் அசல் பொய்தானே?
மேலும், கிரகங்களின் இயக்கத்திற்கும், மனித வாழ்க்கை அமைவதற்கும் தொடர்பு இருப்பதாகவும், அதனடிப்படையில் கணிக்கப்-படும் ஜோதிடம் அறிவியல் சார்ந்தது என்றும் நம்பப்படுவது எவ்வளவு அறியாமை!
“நாயாய்ப் பிறந்தாலும் நல்ல நேரத்தில் பிறக்க வேண்டும்!’’ என்று, பிறக்கின்ற நேரத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் எவ்வளவு பிதற்றலானது! நன்றாகச் சிந்திக்க வேண்டும்.
அறிவியல் உண்மைப்படி சூரியன் இடம் பெயராமல் ஒரே இடத்தில் தன்னைத்தானே சுழற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால், ஜோதிடம் சூரியன் இடம் பெயர்வதாகக் கூறுகிறது. அப்படியிருக்க ஜோதிடத்தின் அடிப்படையே தவறு. அறிவியலுக்கு முரண். எனவே, ஜோதிடம் அறிவியல் அல்லவே.
மேலும் இப்போது புதுப்புது கிரகங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அப்படியிருக்க 9 கிரகங்களை மட்டும் வைத்து ஜோதிடம் சொல்வது எப்படிச் சரியாகும்? ஆக கிரகங்கள் எல்லாவற்றையும் கணக்கில் கொள்ளாத ஜோதிடம் மோசடியல்லவா? பொய் அல்லவா?
இனி, ஜோதிடத் தத்துவப்படியே, ஜோதிடக் கணிப்பு சரியா என்பதை ஆராய்வோம்.
பிறந்த நேரம் எது?
பிறந்த நேரத்தை வைத்தே ஜோதிடம் கணிக்கப்படுவதால் ஜோதிடத்திற்கு அடிப்படை பிறந்த நேரமேயாகும். ஆனால், பிறந்த நேரம் எது என்பதில் தெளிவு இருக்கிறதா?
குழந்தைக்கான ‘கரு’ உருவான (பிறந்த) நேரமா? பிறக்கும் குழந்தையின் தலை வெளியில் தெரியும் நேரமா? குழந்தை முழுவதும் வெளியில் வந்த நேரமா? அல்லது தொப்புள் கொடி துண்டிக்கப்பட்டுத் தாயின் தொடர்பு துண்டிக்கப்பட்ட நேரமா? அறுவைச் சிகிச்சையெனில், வயிற்றைப் பிளந்து வெளியே எடுத்த நேரமா? அப்படி பிளந்து எடுப்பது இயற்கைக்கு முரண் என்பதால் அதற்கு ஜாதகம் பொருந்தி வராதே! அப்படிப்பட்ட குழந்தைகள் தானே இன்று அதிகம். அக்குழந்தைகளுக்கு ஜாதகம் கிடையாதா?
குறைப் பிரசவத்தில் (மிஸீநீuதீணீtவீஷீஸீ) கருவியில் வைத்திருக்கிறார்களே அதில் பிறந்த நேரம் எது? தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட நேரமா? அல்லது கருவியை விட்டு வெளியே எடுக்கும் நேரமா?
எது?
லக்கினம் மற்றும் நட்சத்திரக் கணக்கு:
ஜோதிடம் என்பது நேரம், கிழமை, தேதி, மாதம், வருடம், லக்கினம், நட்சத்திரம் ஆகியவற்றைக் கொண்டே கணக்கிடப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட லக்கினத்தில் நட்சத்திரத்-தில் நாட்டில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பிறக்கின்றன.
ஒரு லக்கினத்திற்கு 4லு முதல் 5லு நாழிகை வரை கால அளவு. ஒரு நட்சத்திரத்திற்கு 60 நாழிகை.
உதாரணமாக விருச்சிக லக்கினத்திற்கு 5ரு நாழிகை அதாவது 126 நிமிடம். சுமார் இரண்டு மணி நேரம். அந்த இரண்டு மணி நேரத்தில் நாட்டில் எத்தனை நூறு குழந்தைகள் பிறக்கும். அந்தக் குழந்தைகள் எல்லாவற்றிற்கும் வாழ்வு ஒரே மாதிரியாக அமையுமா? அமைவ-தில்லையே!
அந்த நேரத்தில் பிறந்த ஒரு சில குழந்தைகள் இறந்து, மற்ற குழந்தைகள் உயிருடன் இருந்தாலே ஜோதிடம் பொய்-யென்றாகி விடும் அல்லவா?
முரண்பாடான நம்பிக்கை:
பிறக்கின்ற நேரத்தில், கிரகங்கள் இருக்கின்ற நிலைக்கேற்பத்தான் வாழ்க்கை என்றால், கடவுளுக்கும், விதிக்கும், பூர்வ ஜென்ம பலன்களுக்கும் என்ன வேலை?
பிறந்த நேரக் கிரக நிலைக்கேற்பத்தான் வாழ்வு என்றால், நாம் பிறந்தபோதே நமது வாழ்வு இப்படித்தான் என்று தீர்மானம் ஆகிவிடுகிறது. பிறகு கடவுள் பிரார்த்தனை ஏன்? கணக்கற்ற முயற்சிகள் ஏன்? இவற்றால் அதை மாற்ற முடியுமா?
பிறந்தபோதே நம் வாழ்வு இப்படித்தான் அமையப் போகிறது என்று தீர்மானம் ஆகிவிட்ட பிறகு, ஒவ்வொரு கட்டத்திலும் நேரங்காலம் பார்த்து ஏன் காரியம் செய்ய வேண்டும்? இராகு காலம், எமகண்டம், அஷ்டமி, நவமி இவை ஏன் பார்க்க வேண்டும்?
இவற்றைப் பார்த்து நடந்தால் நமது வாழ்வு மாறி விடுமா? மாறிவிடும் என்றால், பிறந்த நேரத்தின்படி வாழ்வு அமையும் என்ற ஜோதிட நம்பிக்கை தவறாகி விடாதா?
கிரகத்தின் நிலைக்கேற்ப வாழ்வு அமையும் என்றால் விதியை நம்பக் கூடாது; பூர்வ ஜென்ம பலனை நம்பக் கூடாது; கடவுளை நம்பக் கூடாது.
காரணம், கிரக நிலைப்படிதான் வாழ்வு என்றால் கடவுளுக்கு நம் வாழ்வில் என்ன பங்கு? ஒன்றும் இல்லையே!
(தொடரும்…)

ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

நாடி ஜோதிடம் உண்மையா?

 

மூடநம்பிக்கை : நாடி ஜோதிடம் உண்மையா?

2022 மற்றவர்கள் ஜுலை 16-31 2022

ஒளிமதி

ஜோதிடத்தையும் நம்பி, கடவுள், விதி, பிறவி இவற்றையும் நம்புவது முரண்பட்ட நிலையாகும்.
இப்படிச் சொன்னால், சிலர் சாமர்த்தியமாக, கடவுள் பூர்வஜென்ம பலனுக்கு ஏற்ப நம் விதியை அமைத்து அதற்கேற்ற கிரகச் சூழ்நிலையில் நம்மைப் பிறக்கச் செய்கிறான்; அந்த விதியை நம் கையில் ரேகையாகப் பதித்து வைத்திருக்கிறான் என்று கூறி, கடவுள் நம்பிக்கையோடு ஜோதிட நம்பிக்கையையும் இணைத்து முடிச்சுப் போட்டுப் பேசுவர்.
மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவ்வாறு கூறியும் உள்ளார்.
“ஒருவரை ஆணாகவோ பெண்ணாகவோ பிறக்கச் செய்ய வேண்டிய தகப்பனாருடைய உடலில், அதற்குரிய அணுப் பிரமாணமுள்ள அதிசூக்குமமான வித்தைச் செலுத்தி, முன்னர் அவருடைய வினைகளுக்குத் தகுந்த தலையெழுத்தை ஆணுக்கு வலது உள்ளங்கையிலும், பெண்ணுக்கு இடது உள்ளங்கையிலும் சுருக்கெழுத்துப் போன்ற ரேகைகளாகப் பொறித்து, இன்ன ஊரில், இன்ன ஜாதியில், இன்ன பெற்றோருக்கு, இன்ன பெயரோடு, இன்ன விநாடியில் இன்னின்ன கிரகநிலையில் பிறக்க வேண்டும் என்று கடவுளே தீர்மானித்து அதன்படி பிறக்கச் செய்து, அவர் இட்ட பெயரையே இடும்படியாகவும், அவரவர் செய்த புண்ணிய பாவத்திற்கேற்ப இன்ன இன்ன இன்ப துன்பம் அனுபவித்து வருமாறும் ஆட்சிபுரிந்து வருகிறார்’’ என்று மதுரை ஆதினகர்த்தர் கூறுகிறார். (அர்த்தமுள்ள இந்துமதம், பாகம்_1, பக்கம்_118, 119)
முற்பிறவி கர்மவினைக்கேற்ப கடவுள் அமைக்கும் விதியின்படியே ஒருவர் வாழ்வு அமையும் என்ற கடவுள் கோட்பாட்டிற்கு, பிறக்கும் கிரக நிலைக்கேற்ப ஒருவர் வாழ்வு அமையும் என்ற ஜோதிடக் கோட்பாடு முரண் என்பதால் இரண்டையும் இணைத்து இவர் கூறியுள்ள கருத்து முற்றிலும் தவறு ஆகும்.
எனவே, ஜோதிட நம்பிக்கையோடு கடவுள், விதி, பிறவி, நம்பிக்கையை இணைப்பது தவறு.
கிரகங்களின் இயக்கத்திற்கு ஏற்பவே வாழ்வு அமைகிறது என்றால், கிரகங்கள் ஒரே மாதிரியாகக் காலங்காலமாய் இயங்கிக் கொண்டிருக்கும்போது, மனித வாழ்வும் ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், மனித வாழ்வு காலத்திற்குக் காலம் மாறிக் கொண்டிருக்கிறதே!
சமைத்துண்ணத் தெரியாது, விலங்கு போல மனிதன் வாழ்ந்த காலத்தில் எப்படிக் கிரகங்கள் இயங்கினவோ அப்படியே இன்றைக்கும் இயங்குகின்றன. ஆனால், மனிதன் அப்படியா வாழ்கிறான்?

எத்தனையோ மாற்றம்! எத்தனையோ புதுமை! எத்தனையோ புரட்சி! ஏன், அந்தக் கிரகங்களுக்கே கூட மனிதன் செல்கிறான்!
எனவே, கிரகங்களின் இயக்கத்திற்கும் மனித வாழ்க்கை அமைவதற்கும் சம்பந்தமே இல்லை.
ஒருவன் கொலை செய்கிறான் என்றால், அதற்குக் கிரக இயக்கம் காரணம் என்றால் அந்த நேரத்தில் பிறந்த அத்தனை பேருமா கொலை செய்கிறார்கள்?
அதேபோல், ஒருவர் கொலை செய்யப்படுகிறார் என்றால், கொலையுண்டவர் பிறந்த நேரத்தில் பிறந்த அனைவரும் கொலை செய்யப்படுவதில்லையே?
ஒருவன் கொலை செய்கிறான் என்றால், அவன் ஜாதகத்தில், இவன் இன்னாரை, இன்ன நாளில் கொலை செய்வான் என்று இருக்கிறதா?
இன்னாரால் இவன் இன்ன நாளில் கொலை செய்யப்படுவான் என்று கொலை செய்யப்பட்டவனின் ஜாதகத்தில் அமைப்பு இருக்குமா?
இன்னாரால் கொலைசெய்யப்படுவோம் என்று தன் ஜாதகத்தைப் பார்த்துத் தெரிந்து கொண்டு அவனிடமிருந்து இவன் தப்பிக்க முடியுமா?
அப்படித் தப்பிக்க முடியுமென்றால், அந்தக் கிரகத்தின்படி கொலை நிகழாமல் எப்படியிருக்க முடியும்? கொலை நிகழாமல் தவிர்த்துவிட்டால் ஜாதகம் பொய்யென்று ஆகிவிடாதா?
ஒருவன் பாம்பு கடித்து இறக்க வேண்டும் என்று ஜோதிட அமைப்பு இருந்தால், ஆயிரம் பாதுகாப்பு இருந்தாலும் அவன் பாம்புக் கடியிலிருந்து தப்ப முடியுமா?
தப்ப முடியாது எனில், ஜோதிடப்படிதான் நடக்கும் எனில், நாம் ஏன் வாழ்வைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்? பாதுகாப்பாக வாழ ஏன் முயற்சிக்க வேண்டும்?
நம்மால் எதையும் மாற்றியமைக்க முடியாது எனில், ஜோதிடம் ஏன் பார்க்க வேண்டும்?
சுருங்கச் சொன்னால், பிறக்கின்றபோது உள்ள கிரக நிலைப்படி வாழ்க்கை அமைகிறது என்றால், உலகில் ஒரே மாதிரி வாழ்வு கொண்ட பலர் இருக்க வேண்டும். அவ்வாறு யாரும் இருப்பதில்லை.

எனவே, கிரக நிலையை வைத்துக் கணிக்கப்படுகின்ற ஜோதிடம் தவறானது. அது மட்டுமல்ல; ஜோதிட நம்பிக்கையும் கடவுள் பிரார்த்தனையும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட நம்பிக்கைகள். ஜோதிடப்படிதான் வாழ்வு என்றால், பிரார்த்தனையால் எப்படி மாற்ற முடியும்? பின் ஏன் கடவுள் வழிபாடு? கிரக நிலைக்கேற்பத்தான் வாழ்வு என்றால் கடவுளுக்கு என்ன வேலை? ஜோதிடத்தை நம்புகின்றவர் கடவுளை நம்பக் கூடாது.
பரிகாரம் மோசடியல்லவா?
கிரக நிலைக்கு ஏற்ப வாழ்வு அமைகிறது என்று சொல்லிவிட்டு, பின் பரிகாரங்கள் கூறுவது மோசடியல்லவா? பரிகாரம் செய்தால் கிரக அமைப்பு எப்படி மாறும்? சிந்திக்க வேண்டாமா?

நாடி ஜோதிடம்:
ஜோதிட மோசடியின் உச்சகட்டம் நாடி ஜோதிடம். ஓலைச் சுவடியில் ஒவ்வொருவரைப் பற்றிய குறிப்பும் எழுதி வைக்கப்-பட்டிருப்-பதாகக் கூறி, அவற்றுள் பொருத்தமானதைத் தேடியெடுத்து, படித்துக் காட்டி ஜோதிடம் சொல்வது நாடி ஜோதிட முறையாகும்.
இதில் கந்தர் நாடி, காக்கையர் நாடி, கவுசிகர் நாடி, சிவசிந்தாமணி, புஜண்டர் மகாவாக்கியம், கன்ம காண்டம், சப்தரிஷி நாடி, அநாகத வேதம் என்ற பல பிரிவுகள் உண்டு.
நாடி ஜோதிடத்தின் அடிப்படைத் தந்தி

அறிவியலுக்கும் நடைமுறைக்கும் ஏற்றதா வாஸ்து?

 

மூடநம்பிக்கை : அறிவியலுக்கும் நடைமுறைக்கும் ஏற்றதா வாஸ்து?

2022 மே 16-31 2022

ஒளிமதி

ஆரியப் பார்ப்பனர்கள் சிறுபான்மையினர் என்பதால், பெரும்பான்மை மக்களை அடக்கி, அடிமைப்படுத்தி, ஆதிக்கம் செலுத்த அம்மக்-களின் மூளையில் மூடநம்பிக்கைகளைத் தொடர்ந்து புகுத்தி, மூளைச் சலவை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்படிப் புகுத்தப்பட்ட மூடநம்பிக்கைகளில் ஒன்றுதான் வாஸ்து.
ஆரியப் பார்ப்பனர்கள் புகுத்திய மூடநம்பிக்கைகள், அறிவியல் வளர்ச்சி-யினாலும், அறிவு வளர்ச்சியினாலும் மக்களால் புறக்கணிக்கப்-படும் நிலை வந்ததும், அதைத் தடுத்து, மக்களுக்குத் தொடர்ந்து அவற்றின் மீது நம்பிக்கை இருக்கும்படி செய்ய, அவர்கள் புகுத்திய மூடநம்பிக்கைகளுக்கெல்லாம் அறிவியல் அடிப்படை இருப்பதாக தற்காலத்தில் கூறி வருகின்றனர்.
அவ்வகையில் வாஸ்துவும் அறிவியல் அடிப்படையிலானது. அதுவும் ஓர் அறிவியல்-தான் என்று வாதிடுகின்றனர். எனவே, வாஸ்து அறிவியலா? அது அறிவியல் அடிப்படையில் உருவாக்கப்பட்டதா? சில நூற்றாண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட வாஸ்து இன்றைய உலக வளர்ச்சிக்கும், நடைமுறைக்கும் ஏற்றதா? என்பதை இனி ஆராய்வோம்.
அஸ்திவாரம் இல்லாத வாஸ்து:
வாஸ்து சாஸ்திரம் கட்டடக் கலை சார்ந்தது என்கிறார்கள். மேல் கட்டுமானம் பற்றிச் சொல்லுகின்ற வாஸ்து சாஸ்திரத்தில் கட்டடத்தின் மிக முக்கியமான அஸ்திவார அமைப்பு, ஆழங்கள் அமைப்பு பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. அஸ்திவாரம் இல்லாமல் வீடு ஏது? அஸ்திவாரம் இல்லாத கட்டடத்-திற்கு வாஸ்து பூமி பூஜை போடலாமா? கட்டடக் கலை ஒரு முழுமையான அறிவியலாக வளர்ந்துள்ள இந்த நவீன உலகில் வாஸ்துவை நம்பி அஸ்திவாரம் இல்லாமல் பூஜை போட்டுக் காட்டுவார்களா? அஸ்திவாரம் போட்டுக் கட்டப்படும் கட்டடங்கள் அனைத்தும் வாஸ்துவுக்கு எதிரானதுதானே?
வாஸ்து உருவான காலத்தில் அஸ்திவாரம் எடுத்து வீடு கட்டும் முறை இல்லை. பழைய ஊர்களில் பழைய மண்சுவர் வீடுகளுக்கு பெரும்பாலும் அஸ்திவாரம் இருக்காது. மாறாக, அடிப்பாகம் அகன்றும் மேல் பாகம் குறுகியும் இருக்கும்! குறுக்குச் சுவரும் சேர்ந்து இருக்கும். கட்டட அறிவு வளராத காலத்தில் உருவாக்கப்-பட்ட வாஸ்துவை இக்காலத்தில் ஏற்க முடியுமா?

இக்காலத் தேவைகள் வாஸ்துவில் உண்டா?
இன்றைய நவீன காலத் தேவைகளான _ மேல்நிலைத் தொட்டி, கீழ்நிலைத் தொட்டி, செப்டிக் டேங்க், கழிவறை, அடுக்கு மாடிக் கட்டடங்கள், பாலங்கள், அணைகள், மேம்பாலங்கள், பாதாளக் கட்டமைப்புகள், குளிர்பதன அமைப்பு முறை, கட்டடங்களுக்கு வர்ணம் பூசுதல், மின் கட்டமைப்பு ஏற்படுத்துதல், குடிநீர் குழாய்க் கட்டமைப்பு, எரிவாயு கட்டமைப்பு, எதிர் ஒலி கேட்காத உள்ளமைப்பு போன்றவை பற்றி எந்தக் குறிப்பாவது வாஸ்துவில் உண்டா? வாஸ்து உருவான அக்காலச் சூழலில் இத்தகைய தேவைகள் _ வளர்ச்சிகள் இல்லையே!
ஆனால், இன்றைய நவீனத் தேவைகள் அனைத்துக்கும் வாஸ்துப்படி வல்லுநர்கள் வழிகாட்டுகின்றனர். தங்கள் வருமானம் பெருக்க எல்லாவற்றுக்கும் தீர்வும் பரிகாரமும் கூறுகிறார்கள். வாஸ்து வல்லுநர்கள் ஒரே மாதிரி பரிந்துரையும், பரிகாரமும் சொல்வதில்லை. பல வாஸ்து மேதைகளின் பரிந்துரைப்படி வீடுகளின் கட்டமைப்பில் மாற்றங்கள் செய்து செய்து நிலைகுலைந்து போனவர்களின் சோகக் கதைகள்தான் ஏராளம்.
இதிகாசக் காலம் தொட்டு இன்று வரை வாஸ்துவை நம்பி கெட்டுப் போனவர்களின் பட்டியல் சொன்னால், ‘அது விதிப்பயன் யாராலும் அதை தடுக்க முடியாது’ என்று நழுவுகின்றனர். வாஸ்துவைவிட விதி கர்மா தான் வலுவானது என்றால், வாஸ்துவை நாடி ஏன் போக வேண்டும்? வாஸ்துப்படி பரிகாரம் காண முடியும் என்பது ஏமாற்றுதானே! வாஸ்து வழிமுறைகள் நம்மை வாழ வைப்பதில்லை. வாஸ்து, சோதிடர்களை மட்டுமே வாழ வைக்கும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
வாஸ்து, கடவுள் நம்பிக்கைக்கும் விதி நம்பிக்கைக்கும் எதிரானது. கடவுள் அமைத்த விதிப்படி வாழ்க்கை என்றால், வாயிற்படியையும், சன்னலையும் மாற்றினால் வாழ்க்கை மாறும் என்பது கடவுளையும் விதியையும் மறுப்பதாகத்தானே பொருள்? எனவே, கடவுளை நம்புகின்றவன் வாஸ்துவை நம்பக் கூடாது!

தேவைக்கும் வசதிக்கும் ஏற்பவே வீடு வேண்டும்
1. நல்ல காற்றோட்டம்
2. நல்ல சூரிய வெளிச்சம்
3. போதுமான தண்ணீர் வசதி
4. போதுமான கழிவு வெளியேற்றும் வசதி
இவை அடிப்படைத் தேவைகள்.
இன்று காற்றும், நீரும், மண்ணும் மாசுபடுத்தப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் மாசுபடாத நிலைதான் மிக மிக முக்கியம். அத்தகைய இடம் தேடி வீட்டு மனை வாங்குவதும், வீடு கட்டுவதும்தான் அறிவுடைமை. காற்றும், நீரும், மண்ணும் மாசுபடாத சூழலில் நாம் கட்டடம் கட்ட வேண்டும். மாறாக, வாஸ்துப்படியாக என்று நலக்கேடாக வீடு கட்டக் கூடாது.
உலக மயமாக்கல் தாராள மயமாக்கல், தனியார் மயமாக்கல், சிக்கனச் செலவு, வாக்கு அரசியல், ஆடம்பர ஆர்ப்பாட்டம் என்று ஆகிவிட்ட நிலையில், வேலையின்மை, வருவாய் இன்மை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று எத்தனையோ இன்றைய உலகில் எதிர்கொள்ள வேண்டிய நிலையில், அதற்கேற்ப சிந்தித்து தீர்வு கண்டு, நல்வாழ்வை உருவாக்குவதே அறிவுடைமை! மாறாக, வாஸ்து எல்லாவற்றிற்கும் தீர்வு என்று எண்ணுவதும் வாஸ்துவைப் பின்பற்றுவதும் மடமை.
வயிற்று வலிக்கு எது காரணம் என்று கண்டு சிகிச்சை அளிக்க வேண்டும். மாறாக, கட்டிலை மாற்றி போட்டுப் படுப்பதும், தலையணையை மாற்றிப் போட்டுப் படுப்பதும் வயிற்று வலியைத் தீர்க்காது. எனவே, வாஸ்து என்ற மடமையைப் புறந்தள்ளி, அறிவியல் அடிப்படையில் வீடு அமைப்பதே சரியான செயல் ஆகும்.
(தொடரும்…)