பக்கங்கள்

செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

நாடி ஜோதிடம் உண்மையா?-2

மூடநம்பிக்கை : 

2022 ஆகஸ்ட் 01-15 2022 மற்றவர்கள்

ஒளிமதி

மேலே கூறப்பட்டவை, மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கூறியதாகக் கண்ணதாசன் குறிப்பிட்டவை-யாகும்.
நல்லவேளை மதுரை ஆதீனகர்த்தர் நாடி ஜோதிடம் பார்க்கப் போகவில்லை. போயிருந்தால் நாடி ஜோதிடன் தவித்துப் போயிருப்பான்.
“ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்’’ என்ற இவ்வளவு நீட்டுப் பெயருக்கு எப்படிச் சமாளிப்பது? ஏகப்பட்ட ‘கப்சாக்கள்’ அல்லவா அடிக்க வேண்டும்.
கோவை கவுமார மடத்தின் நிறுவனர் இராமக்குட்டிக்கு பிற்காலத்தில் பெயர் ‘இராமானந்தர்’ என்று மாறும் என்று நாடி ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகச் சொல்கிறார்.
அப்படியென்றால், நம்ம ஜெயலலிதா நாடி ஜோதிடம் பார்க்கப் போயிருந்தால், புரட்சித்தலைவி, புரட்சித்தாய், தமிழ்த்தாய், காவிரித்தாய், தெய்வத்தாய், அன்னைமேரி, கன்னிமேரி, இதயத்தாய், காவல்தாய், சமூகநீதி காத்த வீராங்கனை… என்றெல்லாம் பெயர் நாடி ஏட்டில் கண்டிருந்திருக்குமா?
இன்றைக்கு அப்பன் ஆத்தாள் பெயர் தெரியாமல் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இருக்கிறார்களே, அவர்களை நாடி ஜோதிடக்காரனிடம் அழைத்துச் சென்று அப்பா பெயர், ஆத்தாள் பெயர், ஊர்ப் பெயர் கேட்டால் சொல்வானா?

பெயர் என்ன என்று கேட்டால், நேரடியாக ஜான் என்று சொல்ல வேண்டியதுதானே? அதை விடுத்து ‘முழத்தில் பாதி’ என்று ஏன் குறிப்பிட வேண்டும்?
‘ஜான்’ என்பது இரண்டெழுத்து. ‘முழத்தில் பாதி’ என்பது ஏழு எழுத்து. எப்படிச் சொல்வது சுருக்கம்?
மூக்கு என்று சொல்வதை விட்டுவிட்டு நெத்திக்குக் கீழே கண்களுக்கு நடுவே, உதட்டுக்கு மேலே உள்ள உறுப்பு என்றால் அது எவ்வளவு பைத்தியக்காரத்தனமோ அவ்வளவு பைத்தியக்காரத்தனம் இது!
அது மட்டுமல்ல, முழத்தில் பாதி என்றால் ஜாண்; ‘ஜான்’ என்பதற்கு ‘ன்’ இரண்டு சுழி. ஆனால், ஜாண் என்பதற்கு ‘ண்’ மூன்று சுழி.
நாடி சாஸ்திரமெல்லாம் பரமசிவன் பார்வதிக்குச் சொன்னது என்று கூறப்படுகிற போது, பிழைபடச் சொல்லியிருப்பார்களோ?
பீட்டர், மேரி, இன்குலாப், அய்சக், உட்ஸ் என்ற பெயரெல்லாம் நாடி சாஸ்திரத்தில் இருக்கிறதா?

அய்ந்தும் ஒன்றும் வதனமெனப் பெயர் சூட்டி என்றால், அய்ந்து + ஒன்று = ஆறு என்று மட்டுந்தான் பொருள் கொள்ள முடியுமா? 51 என்று பொருள் கொள்ள முடியாதா?
‘அய்ந்தும் ஒன்றும் வதனம்’’ என்பதற்கு அய்ந்தும் ஒன்றிய (ஒன்று சேர்ந்த) வதனம் அதாவது அய்ந்து முகம் என்று ஏன் பொருள் கொள்ளக் கூடாது? அய்ந்து முகம் உடைய சிவபெருமான் பெயராக ஏன் இருக்கக் கூடாது? சிவனுக்கு அய்ந்து முகம் என்பது புராணம்.
‘அய்ந்தும் ஒன்றும் வதனம்’ என்பதற்கு ஆறுமுகம் என்று மட்டுந்தான் அர்த்தமா? சண்முகம் என்று பொருள் இல்லையா? சண்முகம் என்பதன் பொருள் ஆறுமுகந்தானே?
அதாவது பலருக்கும் பொருந்தும்படி திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்டவை நாடி சாஸ்திர ஏடுகள் என்பது இதிலிருந்து விளங்குகிறது அல்லவா?
எந்த நாடி ஜோதிடனும் உடனே ஏடு கொடுப்பதில்லை. தேடி எடுக்க வேண்டும் என்றுதான் சொல்லுவான். காலஅவகாசம் எடுப்பான். காரணம், அதற்குள் பழைய ஓலைகள் தயார் செய்துகொள்ள.

இந்துவைப் போல மாறுவேடத்தில் சென்ற முஸ்லிம் பெயர் அப்துல் ரஹ்மான் என்று இருந்ததாம். இந்தப் பெயர் மட்டும் எப்படி ஓலையில் நேரடியாக எழுதப்பட்டிருந்தது? ‘ஜான்’ என்ற பெயருக்கு ‘முழத்தில் பாதி’ என்று இருந்தது போல். இதற்கும் மீட்டர், கெஜக்கோல் என்று ஏதாவது எழுதப்பட்டிருக்க வேண்டாமா?
அப்துல் ரஹ்மான் என்ற நீண்ட பெயரே நேரடியாக நாடி ஏட்டில் எழுதப்பட்டிருக்கும் போது ‘சூசை’ என்ற சுருக்கமான பெயர் நேரடியாக எழுதப்பட்டிருக்கலாமே? அதைவிட்டு, சாவில் ஆறும் சாவில் ஒன்பதும் என்று ஏன் வளர்த்தலாக, மறைமுகமாகச் சொல்லப்பட வேண்டும்? சூசை என்பது தமிழ் வார்த்தை அல்ல. அப்படியிருக்க தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை எப்படிப் பொருந்தும்?

எல்லாம் மோசடிக்காகத்தான் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?இந்த ஏடுகளைக் கண்டுபிடிக்க மதுரை ஆதினகர்த்தர் 20 ஆண்டுகளுக்கு முன்னே ஒரு லட்சம் ரூபாய் வரை செலவிட்டாராம். எதற்கு? ஏடு கண்டு பிடிக்கவா? ‘ஏடு’ செட்டப் செய்யவா? வாசகர்கள் முடிவு செய்துகொள்ள விரும்புகிறேன்.
“புயலாடு புலவன் சரலில் பூமகள் மதிகோலாக
வெயில் மகன் போகி நண்டில், வேதியன் தேள் மீதாக
செயுமிக்கோள் நிலையில் தோற்றும் சேயாறார்க்குயிர் – சியத்தே
பயன்தரு மிலனின் ஜென்மம், பாண்டியன் நாட்டுக்குள்ளே’’
அதாவது இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள கிரக நிலையில் பிறக்கின்றவன் பாண்டியன் நாட்டுக்குள்ளே பிறப்பான் என்பதாகும்.

(ஆதாரம்: வேலு அவர்கள் எழுதிய ‘கவுமார ஜோதிடப் புரட்டு’ என்னும் கட்டுரை)
சேர, சோழ, பாண்டிய நாடு என்னும் பிரிவு இடைக்காலத்தில் ஏற்பட்ட ஒரு பிரிவாகும். ஆனால், நாடி ஜோதிடமோ ஆதிநாளில் இறைவனால் கூறப்பட்டது என்று சொல்லப்படுகிறது. அதாவது சேர, சோழ, பாண்டிய நாட்டுப் பிரிவுகள் ஏற்படாத காலத்தில் எழுதப்பட்டதாகச் சொல்லப்-படுகிறது. அப்படியென்றால்பாண்டிய நாட்டுப் பிரிவுகள் தோன்றாத காலத்தில் அந்தக் கிரக நிலையில் பிறந்தவர்கள் எந்தப் பகுதியில் பிறப்பார்கள்? அப்போது பாண்டிய நாடு இல்லையே!
அது மட்டுமல்ல. இப்போது தமிழ்நாடு என்றாகி மதுரை மாவட்டம், விருதுநகர் மாவட்டம், நெல்லை மாவட்டம் என்று புதிய பெயர்கள் தோன்றிய பின் அந்தக் கிரக நிலையில் இன்றைக்குப் பிறக்கிறவன் எப்படிப் பாண்டிய நாட்டில் பிறக்க முடியும்?
இந்த நாடி ஜோதிடப் பாடல் பாண்டிய நாடு நடைமுறையில் இருந்த காலத்தில் எழுதப்பட்டது. அதனால்தான் அதற்கு முந்திய காலத்திற்கும் பிந்திய காலத்திற்கும் பொருந்தவில்லை.
எனவே, நாடி ஜோதிடப் பாடல்கள் இறைவனால் எழுதப்பட்டவை அல்ல என்பதும், அது காலத்திற்கு ஏற்ப மோசடிப் பேர்வழிகளால் எழுதிக் கொள்ளப்படுவது என்பதும் தெளிவாகிறது.


திங்கள், 17 ஏப்ரல், 2023

ஜோதிடம் உண்மையா?

மூடநம்பிக்கை : ஜோதிடம் உண்மையா?

2022 மற்றவர்கள் ஜுலை 01-15 2022

ஒளிமதி

உலகில் நடைபெறுகின்ற மோசடிகள் அனைத்தும் மனிதனிடமுள்ள பலவீனத்தை அடிப்படையாக வைத்தே செய்யப்படுகின்றன. அவ்வாறே ஜோதிட மோசடியும் மனிதனின் இயல்பறிந்து செய்யப்படுகிறது.
மறைக்கப்படுகின்ற எந்தவொன்றையும் காண வேண்டும் என்கிற ஆசை எழுவது மனிதனுக்கு இயல்பு.
எனவே, நடக்கப் போவதை அறிவிக்கிறேன் என்று யாராவது கூறியவுடன் ஆவலோடு அங்குச் செல்கிறான். அதற்காகச் செலவிடவும் தயாராக இருக்கிறான். இந்த மனநிலையைப் பயன்படுத்திக் காசு பறிக்கக் கையாளப்படுகின்ற யுக்தியே ஜோதிடம்.
இவ்வாறு நாம் கூறியவுடன், “ஜோதிடம் என்பது மூடநம்பிக்கைகளைப் போல அல்ல; இது அறிவியல் சார்ந்தது. கிரகங்களின் இயக்கத்திற்கும் மனித நடவடிக்கைகளுக்கும் சம்பந்தம் உண்டு. அந்த அடிப்படையில் கணிக்கப்படுவதே ஜோதிடம்’’ என்று சிலர் கூறுகின்றனர்.
எனவே, கிரகங்களின் இயக்கத்திற்கும் மனித வாழ்க்கை அமைவதற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்பதை முதலில் ஆராய வேண்டும்.
ஒரு குழந்தை பிறக்கும்போது, அமைந்துள்ள கிரகங்களின் நிலைக்கேற்பவே. அக்குழந்தையின் வாழ்க்கை அமைகிறது என்பதே ஜோதிடத்தின் அடிப்படைத் தத்துவம்.
இத்தத்துவம் சரியென்றால் ஜோதிடம் என்பது சரி _ உண்மை; இத்தத்துவம் தவறு என்றால் ஜோதிடம் என்பதும் தவறு _ பொய்.
ஒரு குழந்தை பிறக்கும்போது இருக்கின்ற கிரகங்களின் நிலைக்கு ஏற்பவே. அக்குழந்தை-யின் வாழ்க்கை அமையும் என்றால், அதே நேரத்தில் பிறக்கின்ற அத்தனை குழந்தைகளின் வாழ்க்கையும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் அல்லவா? ஆனால், அவ்வாறு இருக்கிறதா என்றால் இல்லை.
ஒரு நொடிப்பொழுதில் உலகில் நூற்றுக்-கணக்கான குழந்தைகள் பிறக்கின்றன. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கின்ற குழந்தை இறந்தால், ஜோதிடத் தத்துவப்படி. அந்த நேரத்தில் பிறக்கின்ற அத்தனை குழந்தைகளும் பிறந்தவுடன் இறந்து போக வேண்டும். ஆனால், அவ்வாறு இறந்து போகின்றனவா? இல்லையே!
பிறக்கின்ற நேரத்தில் இருக்கின்ற கிரக நிலைக்கேற்பவே வாழ்நாள் அமையும் என்றால், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பிறக்கின்ற நாய், பன்றி, ஈ, கொசு, யானை, சிங்கம் இவற்றின் வாழ்க்கைகூட ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும். இருக்கின்றதா? இல்லையே!
பிறக்கின்ற இடத்தையும் பார்க்க வேண்டும் என்று சிலர் கூறுவர். அப்படியே பார்த்தாலும் ஒரு குறிப்பிட்ட நாட்டில் பிறக்கின்ற அத்தனை குழந்தைகளும் ஒரே மாதிரி வாழ்கின்றனவா? இல்லையே!
எனவே, ஜோதிடத்தின் அடிப்படைத் தத்துவமே பொய் என்பது புரிகிறதல்லவா? அடிப்படையே பொய் என்றால், அதன் மீது புனையப்படும் மற்ற ஜோதிட அளப்புகள் அனைத்தும் அசல் பொய்தானே?
மேலும், கிரகங்களின் இயக்கத்திற்கும், மனித வாழ்க்கை அமைவதற்கும் தொடர்பு இருப்பதாகவும், அதனடிப்படையில் கணிக்கப்-படும் ஜோதிடம் அறிவியல் சார்ந்தது என்றும் நம்பப்படுவது எவ்வளவு அறியாமை!
“நாயாய்ப் பிறந்தாலும் நல்ல நேரத்தில் பிறக்க வேண்டும்!’’ என்று, பிறக்கின்ற நேரத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் எவ்வளவு பிதற்றலானது! நன்றாகச் சிந்திக்க வேண்டும்.
அறிவியல் உண்மைப்படி சூரியன் இடம் பெயராமல் ஒரே இடத்தில் தன்னைத்தானே சுழற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால், ஜோதிடம் சூரியன் இடம் பெயர்வதாகக் கூறுகிறது. அப்படியிருக்க ஜோதிடத்தின் அடிப்படையே தவறு. அறிவியலுக்கு முரண். எனவே, ஜோதிடம் அறிவியல் அல்லவே.
மேலும் இப்போது புதுப்புது கிரகங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அப்படியிருக்க 9 கிரகங்களை மட்டும் வைத்து ஜோதிடம் சொல்வது எப்படிச் சரியாகும்? ஆக கிரகங்கள் எல்லாவற்றையும் கணக்கில் கொள்ளாத ஜோதிடம் மோசடியல்லவா? பொய் அல்லவா?
இனி, ஜோதிடத் தத்துவப்படியே, ஜோதிடக் கணிப்பு சரியா என்பதை ஆராய்வோம்.
பிறந்த நேரம் எது?
பிறந்த நேரத்தை வைத்தே ஜோதிடம் கணிக்கப்படுவதால் ஜோதிடத்திற்கு அடிப்படை பிறந்த நேரமேயாகும். ஆனால், பிறந்த நேரம் எது என்பதில் தெளிவு இருக்கிறதா?
குழந்தைக்கான ‘கரு’ உருவான (பிறந்த) நேரமா? பிறக்கும் குழந்தையின் தலை வெளியில் தெரியும் நேரமா? குழந்தை முழுவதும் வெளியில் வந்த நேரமா? அல்லது தொப்புள் கொடி துண்டிக்கப்பட்டுத் தாயின் தொடர்பு துண்டிக்கப்பட்ட நேரமா? அறுவைச் சிகிச்சையெனில், வயிற்றைப் பிளந்து வெளியே எடுத்த நேரமா? அப்படி பிளந்து எடுப்பது இயற்கைக்கு முரண் என்பதால் அதற்கு ஜாதகம் பொருந்தி வராதே! அப்படிப்பட்ட குழந்தைகள் தானே இன்று அதிகம். அக்குழந்தைகளுக்கு ஜாதகம் கிடையாதா?
குறைப் பிரசவத்தில் (மிஸீநீuதீணீtவீஷீஸீ) கருவியில் வைத்திருக்கிறார்களே அதில் பிறந்த நேரம் எது? தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட நேரமா? அல்லது கருவியை விட்டு வெளியே எடுக்கும் நேரமா?
எது?
லக்கினம் மற்றும் நட்சத்திரக் கணக்கு:
ஜோதிடம் என்பது நேரம், கிழமை, தேதி, மாதம், வருடம், லக்கினம், நட்சத்திரம் ஆகியவற்றைக் கொண்டே கணக்கிடப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட லக்கினத்தில் நட்சத்திரத்-தில் நாட்டில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பிறக்கின்றன.
ஒரு லக்கினத்திற்கு 4லு முதல் 5லு நாழிகை வரை கால அளவு. ஒரு நட்சத்திரத்திற்கு 60 நாழிகை.
உதாரணமாக விருச்சிக லக்கினத்திற்கு 5ரு நாழிகை அதாவது 126 நிமிடம். சுமார் இரண்டு மணி நேரம். அந்த இரண்டு மணி நேரத்தில் நாட்டில் எத்தனை நூறு குழந்தைகள் பிறக்கும். அந்தக் குழந்தைகள் எல்லாவற்றிற்கும் வாழ்வு ஒரே மாதிரியாக அமையுமா? அமைவ-தில்லையே!
அந்த நேரத்தில் பிறந்த ஒரு சில குழந்தைகள் இறந்து, மற்ற குழந்தைகள் உயிருடன் இருந்தாலே ஜோதிடம் பொய்-யென்றாகி விடும் அல்லவா?
முரண்பாடான நம்பிக்கை:
பிறக்கின்ற நேரத்தில், கிரகங்கள் இருக்கின்ற நிலைக்கேற்பத்தான் வாழ்க்கை என்றால், கடவுளுக்கும், விதிக்கும், பூர்வ ஜென்ம பலன்களுக்கும் என்ன வேலை?
பிறந்த நேரக் கிரக நிலைக்கேற்பத்தான் வாழ்வு என்றால், நாம் பிறந்தபோதே நமது வாழ்வு இப்படித்தான் என்று தீர்மானம் ஆகிவிடுகிறது. பிறகு கடவுள் பிரார்த்தனை ஏன்? கணக்கற்ற முயற்சிகள் ஏன்? இவற்றால் அதை மாற்ற முடியுமா?
பிறந்தபோதே நம் வாழ்வு இப்படித்தான் அமையப் போகிறது என்று தீர்மானம் ஆகிவிட்ட பிறகு, ஒவ்வொரு கட்டத்திலும் நேரங்காலம் பார்த்து ஏன் காரியம் செய்ய வேண்டும்? இராகு காலம், எமகண்டம், அஷ்டமி, நவமி இவை ஏன் பார்க்க வேண்டும்?
இவற்றைப் பார்த்து நடந்தால் நமது வாழ்வு மாறி விடுமா? மாறிவிடும் என்றால், பிறந்த நேரத்தின்படி வாழ்வு அமையும் என்ற ஜோதிட நம்பிக்கை தவறாகி விடாதா?
கிரகத்தின் நிலைக்கேற்ப வாழ்வு அமையும் என்றால் விதியை நம்பக் கூடாது; பூர்வ ஜென்ம பலனை நம்பக் கூடாது; கடவுளை நம்பக் கூடாது.
காரணம், கிரக நிலைப்படிதான் வாழ்வு என்றால் கடவுளுக்கு நம் வாழ்வில் என்ன பங்கு? ஒன்றும் இல்லையே!
(தொடரும்…)

ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

நாடி ஜோதிடம் உண்மையா?

 

மூடநம்பிக்கை : நாடி ஜோதிடம் உண்மையா?

2022 மற்றவர்கள் ஜுலை 16-31 2022

ஒளிமதி

ஜோதிடத்தையும் நம்பி, கடவுள், விதி, பிறவி இவற்றையும் நம்புவது முரண்பட்ட நிலையாகும்.
இப்படிச் சொன்னால், சிலர் சாமர்த்தியமாக, கடவுள் பூர்வஜென்ம பலனுக்கு ஏற்ப நம் விதியை அமைத்து அதற்கேற்ற கிரகச் சூழ்நிலையில் நம்மைப் பிறக்கச் செய்கிறான்; அந்த விதியை நம் கையில் ரேகையாகப் பதித்து வைத்திருக்கிறான் என்று கூறி, கடவுள் நம்பிக்கையோடு ஜோதிட நம்பிக்கையையும் இணைத்து முடிச்சுப் போட்டுப் பேசுவர்.
மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவ்வாறு கூறியும் உள்ளார்.
“ஒருவரை ஆணாகவோ பெண்ணாகவோ பிறக்கச் செய்ய வேண்டிய தகப்பனாருடைய உடலில், அதற்குரிய அணுப் பிரமாணமுள்ள அதிசூக்குமமான வித்தைச் செலுத்தி, முன்னர் அவருடைய வினைகளுக்குத் தகுந்த தலையெழுத்தை ஆணுக்கு வலது உள்ளங்கையிலும், பெண்ணுக்கு இடது உள்ளங்கையிலும் சுருக்கெழுத்துப் போன்ற ரேகைகளாகப் பொறித்து, இன்ன ஊரில், இன்ன ஜாதியில், இன்ன பெற்றோருக்கு, இன்ன பெயரோடு, இன்ன விநாடியில் இன்னின்ன கிரகநிலையில் பிறக்க வேண்டும் என்று கடவுளே தீர்மானித்து அதன்படி பிறக்கச் செய்து, அவர் இட்ட பெயரையே இடும்படியாகவும், அவரவர் செய்த புண்ணிய பாவத்திற்கேற்ப இன்ன இன்ன இன்ப துன்பம் அனுபவித்து வருமாறும் ஆட்சிபுரிந்து வருகிறார்’’ என்று மதுரை ஆதினகர்த்தர் கூறுகிறார். (அர்த்தமுள்ள இந்துமதம், பாகம்_1, பக்கம்_118, 119)
முற்பிறவி கர்மவினைக்கேற்ப கடவுள் அமைக்கும் விதியின்படியே ஒருவர் வாழ்வு அமையும் என்ற கடவுள் கோட்பாட்டிற்கு, பிறக்கும் கிரக நிலைக்கேற்ப ஒருவர் வாழ்வு அமையும் என்ற ஜோதிடக் கோட்பாடு முரண் என்பதால் இரண்டையும் இணைத்து இவர் கூறியுள்ள கருத்து முற்றிலும் தவறு ஆகும்.
எனவே, ஜோதிட நம்பிக்கையோடு கடவுள், விதி, பிறவி, நம்பிக்கையை இணைப்பது தவறு.
கிரகங்களின் இயக்கத்திற்கு ஏற்பவே வாழ்வு அமைகிறது என்றால், கிரகங்கள் ஒரே மாதிரியாகக் காலங்காலமாய் இயங்கிக் கொண்டிருக்கும்போது, மனித வாழ்வும் ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், மனித வாழ்வு காலத்திற்குக் காலம் மாறிக் கொண்டிருக்கிறதே!
சமைத்துண்ணத் தெரியாது, விலங்கு போல மனிதன் வாழ்ந்த காலத்தில் எப்படிக் கிரகங்கள் இயங்கினவோ அப்படியே இன்றைக்கும் இயங்குகின்றன. ஆனால், மனிதன் அப்படியா வாழ்கிறான்?

எத்தனையோ மாற்றம்! எத்தனையோ புதுமை! எத்தனையோ புரட்சி! ஏன், அந்தக் கிரகங்களுக்கே கூட மனிதன் செல்கிறான்!
எனவே, கிரகங்களின் இயக்கத்திற்கும் மனித வாழ்க்கை அமைவதற்கும் சம்பந்தமே இல்லை.
ஒருவன் கொலை செய்கிறான் என்றால், அதற்குக் கிரக இயக்கம் காரணம் என்றால் அந்த நேரத்தில் பிறந்த அத்தனை பேருமா கொலை செய்கிறார்கள்?
அதேபோல், ஒருவர் கொலை செய்யப்படுகிறார் என்றால், கொலையுண்டவர் பிறந்த நேரத்தில் பிறந்த அனைவரும் கொலை செய்யப்படுவதில்லையே?
ஒருவன் கொலை செய்கிறான் என்றால், அவன் ஜாதகத்தில், இவன் இன்னாரை, இன்ன நாளில் கொலை செய்வான் என்று இருக்கிறதா?
இன்னாரால் இவன் இன்ன நாளில் கொலை செய்யப்படுவான் என்று கொலை செய்யப்பட்டவனின் ஜாதகத்தில் அமைப்பு இருக்குமா?
இன்னாரால் கொலைசெய்யப்படுவோம் என்று தன் ஜாதகத்தைப் பார்த்துத் தெரிந்து கொண்டு அவனிடமிருந்து இவன் தப்பிக்க முடியுமா?
அப்படித் தப்பிக்க முடியுமென்றால், அந்தக் கிரகத்தின்படி கொலை நிகழாமல் எப்படியிருக்க முடியும்? கொலை நிகழாமல் தவிர்த்துவிட்டால் ஜாதகம் பொய்யென்று ஆகிவிடாதா?
ஒருவன் பாம்பு கடித்து இறக்க வேண்டும் என்று ஜோதிட அமைப்பு இருந்தால், ஆயிரம் பாதுகாப்பு இருந்தாலும் அவன் பாம்புக் கடியிலிருந்து தப்ப முடியுமா?
தப்ப முடியாது எனில், ஜோதிடப்படிதான் நடக்கும் எனில், நாம் ஏன் வாழ்வைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்? பாதுகாப்பாக வாழ ஏன் முயற்சிக்க வேண்டும்?
நம்மால் எதையும் மாற்றியமைக்க முடியாது எனில், ஜோதிடம் ஏன் பார்க்க வேண்டும்?
சுருங்கச் சொன்னால், பிறக்கின்றபோது உள்ள கிரக நிலைப்படி வாழ்க்கை அமைகிறது என்றால், உலகில் ஒரே மாதிரி வாழ்வு கொண்ட பலர் இருக்க வேண்டும். அவ்வாறு யாரும் இருப்பதில்லை.

எனவே, கிரக நிலையை வைத்துக் கணிக்கப்படுகின்ற ஜோதிடம் தவறானது. அது மட்டுமல்ல; ஜோதிட நம்பிக்கையும் கடவுள் பிரார்த்தனையும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட நம்பிக்கைகள். ஜோதிடப்படிதான் வாழ்வு என்றால், பிரார்த்தனையால் எப்படி மாற்ற முடியும்? பின் ஏன் கடவுள் வழிபாடு? கிரக நிலைக்கேற்பத்தான் வாழ்வு என்றால் கடவுளுக்கு என்ன வேலை? ஜோதிடத்தை நம்புகின்றவர் கடவுளை நம்பக் கூடாது.
பரிகாரம் மோசடியல்லவா?
கிரக நிலைக்கு ஏற்ப வாழ்வு அமைகிறது என்று சொல்லிவிட்டு, பின் பரிகாரங்கள் கூறுவது மோசடியல்லவா? பரிகாரம் செய்தால் கிரக அமைப்பு எப்படி மாறும்? சிந்திக்க வேண்டாமா?

நாடி ஜோதிடம்:
ஜோதிட மோசடியின் உச்சகட்டம் நாடி ஜோதிடம். ஓலைச் சுவடியில் ஒவ்வொருவரைப் பற்றிய குறிப்பும் எழுதி வைக்கப்-பட்டிருப்-பதாகக் கூறி, அவற்றுள் பொருத்தமானதைத் தேடியெடுத்து, படித்துக் காட்டி ஜோதிடம் சொல்வது நாடி ஜோதிட முறையாகும்.
இதில் கந்தர் நாடி, காக்கையர் நாடி, கவுசிகர் நாடி, சிவசிந்தாமணி, புஜண்டர் மகாவாக்கியம், கன்ம காண்டம், சப்தரிஷி நாடி, அநாகத வேதம் என்ற பல பிரிவுகள் உண்டு.
நாடி ஜோதிடத்தின் அடிப்படைத் தந்தி

அறிவியலுக்கும் நடைமுறைக்கும் ஏற்றதா வாஸ்து?

 

மூடநம்பிக்கை : அறிவியலுக்கும் நடைமுறைக்கும் ஏற்றதா வாஸ்து?

2022 மே 16-31 2022

ஒளிமதி

ஆரியப் பார்ப்பனர்கள் சிறுபான்மையினர் என்பதால், பெரும்பான்மை மக்களை அடக்கி, அடிமைப்படுத்தி, ஆதிக்கம் செலுத்த அம்மக்-களின் மூளையில் மூடநம்பிக்கைகளைத் தொடர்ந்து புகுத்தி, மூளைச் சலவை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்படிப் புகுத்தப்பட்ட மூடநம்பிக்கைகளில் ஒன்றுதான் வாஸ்து.
ஆரியப் பார்ப்பனர்கள் புகுத்திய மூடநம்பிக்கைகள், அறிவியல் வளர்ச்சி-யினாலும், அறிவு வளர்ச்சியினாலும் மக்களால் புறக்கணிக்கப்-படும் நிலை வந்ததும், அதைத் தடுத்து, மக்களுக்குத் தொடர்ந்து அவற்றின் மீது நம்பிக்கை இருக்கும்படி செய்ய, அவர்கள் புகுத்திய மூடநம்பிக்கைகளுக்கெல்லாம் அறிவியல் அடிப்படை இருப்பதாக தற்காலத்தில் கூறி வருகின்றனர்.
அவ்வகையில் வாஸ்துவும் அறிவியல் அடிப்படையிலானது. அதுவும் ஓர் அறிவியல்-தான் என்று வாதிடுகின்றனர். எனவே, வாஸ்து அறிவியலா? அது அறிவியல் அடிப்படையில் உருவாக்கப்பட்டதா? சில நூற்றாண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட வாஸ்து இன்றைய உலக வளர்ச்சிக்கும், நடைமுறைக்கும் ஏற்றதா? என்பதை இனி ஆராய்வோம்.
அஸ்திவாரம் இல்லாத வாஸ்து:
வாஸ்து சாஸ்திரம் கட்டடக் கலை சார்ந்தது என்கிறார்கள். மேல் கட்டுமானம் பற்றிச் சொல்லுகின்ற வாஸ்து சாஸ்திரத்தில் கட்டடத்தின் மிக முக்கியமான அஸ்திவார அமைப்பு, ஆழங்கள் அமைப்பு பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. அஸ்திவாரம் இல்லாமல் வீடு ஏது? அஸ்திவாரம் இல்லாத கட்டடத்-திற்கு வாஸ்து பூமி பூஜை போடலாமா? கட்டடக் கலை ஒரு முழுமையான அறிவியலாக வளர்ந்துள்ள இந்த நவீன உலகில் வாஸ்துவை நம்பி அஸ்திவாரம் இல்லாமல் பூஜை போட்டுக் காட்டுவார்களா? அஸ்திவாரம் போட்டுக் கட்டப்படும் கட்டடங்கள் அனைத்தும் வாஸ்துவுக்கு எதிரானதுதானே?
வாஸ்து உருவான காலத்தில் அஸ்திவாரம் எடுத்து வீடு கட்டும் முறை இல்லை. பழைய ஊர்களில் பழைய மண்சுவர் வீடுகளுக்கு பெரும்பாலும் அஸ்திவாரம் இருக்காது. மாறாக, அடிப்பாகம் அகன்றும் மேல் பாகம் குறுகியும் இருக்கும்! குறுக்குச் சுவரும் சேர்ந்து இருக்கும். கட்டட அறிவு வளராத காலத்தில் உருவாக்கப்-பட்ட வாஸ்துவை இக்காலத்தில் ஏற்க முடியுமா?

இக்காலத் தேவைகள் வாஸ்துவில் உண்டா?
இன்றைய நவீன காலத் தேவைகளான _ மேல்நிலைத் தொட்டி, கீழ்நிலைத் தொட்டி, செப்டிக் டேங்க், கழிவறை, அடுக்கு மாடிக் கட்டடங்கள், பாலங்கள், அணைகள், மேம்பாலங்கள், பாதாளக் கட்டமைப்புகள், குளிர்பதன அமைப்பு முறை, கட்டடங்களுக்கு வர்ணம் பூசுதல், மின் கட்டமைப்பு ஏற்படுத்துதல், குடிநீர் குழாய்க் கட்டமைப்பு, எரிவாயு கட்டமைப்பு, எதிர் ஒலி கேட்காத உள்ளமைப்பு போன்றவை பற்றி எந்தக் குறிப்பாவது வாஸ்துவில் உண்டா? வாஸ்து உருவான அக்காலச் சூழலில் இத்தகைய தேவைகள் _ வளர்ச்சிகள் இல்லையே!
ஆனால், இன்றைய நவீனத் தேவைகள் அனைத்துக்கும் வாஸ்துப்படி வல்லுநர்கள் வழிகாட்டுகின்றனர். தங்கள் வருமானம் பெருக்க எல்லாவற்றுக்கும் தீர்வும் பரிகாரமும் கூறுகிறார்கள். வாஸ்து வல்லுநர்கள் ஒரே மாதிரி பரிந்துரையும், பரிகாரமும் சொல்வதில்லை. பல வாஸ்து மேதைகளின் பரிந்துரைப்படி வீடுகளின் கட்டமைப்பில் மாற்றங்கள் செய்து செய்து நிலைகுலைந்து போனவர்களின் சோகக் கதைகள்தான் ஏராளம்.
இதிகாசக் காலம் தொட்டு இன்று வரை வாஸ்துவை நம்பி கெட்டுப் போனவர்களின் பட்டியல் சொன்னால், ‘அது விதிப்பயன் யாராலும் அதை தடுக்க முடியாது’ என்று நழுவுகின்றனர். வாஸ்துவைவிட விதி கர்மா தான் வலுவானது என்றால், வாஸ்துவை நாடி ஏன் போக வேண்டும்? வாஸ்துப்படி பரிகாரம் காண முடியும் என்பது ஏமாற்றுதானே! வாஸ்து வழிமுறைகள் நம்மை வாழ வைப்பதில்லை. வாஸ்து, சோதிடர்களை மட்டுமே வாழ வைக்கும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
வாஸ்து, கடவுள் நம்பிக்கைக்கும் விதி நம்பிக்கைக்கும் எதிரானது. கடவுள் அமைத்த விதிப்படி வாழ்க்கை என்றால், வாயிற்படியையும், சன்னலையும் மாற்றினால் வாழ்க்கை மாறும் என்பது கடவுளையும் விதியையும் மறுப்பதாகத்தானே பொருள்? எனவே, கடவுளை நம்புகின்றவன் வாஸ்துவை நம்பக் கூடாது!

தேவைக்கும் வசதிக்கும் ஏற்பவே வீடு வேண்டும்
1. நல்ல காற்றோட்டம்
2. நல்ல சூரிய வெளிச்சம்
3. போதுமான தண்ணீர் வசதி
4. போதுமான கழிவு வெளியேற்றும் வசதி
இவை அடிப்படைத் தேவைகள்.
இன்று காற்றும், நீரும், மண்ணும் மாசுபடுத்தப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் மாசுபடாத நிலைதான் மிக மிக முக்கியம். அத்தகைய இடம் தேடி வீட்டு மனை வாங்குவதும், வீடு கட்டுவதும்தான் அறிவுடைமை. காற்றும், நீரும், மண்ணும் மாசுபடாத சூழலில் நாம் கட்டடம் கட்ட வேண்டும். மாறாக, வாஸ்துப்படியாக என்று நலக்கேடாக வீடு கட்டக் கூடாது.
உலக மயமாக்கல் தாராள மயமாக்கல், தனியார் மயமாக்கல், சிக்கனச் செலவு, வாக்கு அரசியல், ஆடம்பர ஆர்ப்பாட்டம் என்று ஆகிவிட்ட நிலையில், வேலையின்மை, வருவாய் இன்மை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று எத்தனையோ இன்றைய உலகில் எதிர்கொள்ள வேண்டிய நிலையில், அதற்கேற்ப சிந்தித்து தீர்வு கண்டு, நல்வாழ்வை உருவாக்குவதே அறிவுடைமை! மாறாக, வாஸ்து எல்லாவற்றிற்கும் தீர்வு என்று எண்ணுவதும் வாஸ்துவைப் பின்பற்றுவதும் மடமை.
வயிற்று வலிக்கு எது காரணம் என்று கண்டு சிகிச்சை அளிக்க வேண்டும். மாறாக, கட்டிலை மாற்றி போட்டுப் படுப்பதும், தலையணையை மாற்றிப் போட்டுப் படுப்பதும் வயிற்று வலியைத் தீர்க்காது. எனவே, வாஸ்து என்ற மடமையைப் புறந்தள்ளி, அறிவியல் அடிப்படையில் வீடு அமைப்பதே சரியான செயல் ஆகும்.
(தொடரும்…)

சனி, 15 ஏப்ரல், 2023

வர்ணாஸ்ரமத்தை வலுப்படுத்தும் வாஸ்து

 

மே 1-15,2022

ஒளிமதி

இதிகாச காலத்தில் வாழ்ந்ததாகச் சொல்லப்படுபவர் மாபெரும் கட்டடக் கலைஞர் மாயா என்பவர். அவர்தான் அந்நாள்களில் வாஸ்துப்படி அரண்மனைகள், மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் கட்டியவர் என்பர். மகாபாரதத்தில் வரும் அஸ்தினாபுரத்தில் அரண்மனையைக் கட்டியவர் அவர்தான் என்று கூறுவர். பாண்டவர்களும், கவுரவர்களும் அமைதியாக _ இன்பமாக வாழ்வதற்காக அரண்மனை கட்டினார். அரண்மனை கட்டி முடித்து பாண்டவர்கள் ஒரு மாதம் கூட அங்கு வாழவில்லை; வனவாசம் சென்றனர். கவுரவர்களாவது வாழ்ந்தார்களா என்றால் அதுவும் இல்லை. குருச்சேத்திர யுத்தம் நடந்தது. அரண்மனையில் வாழ்ந்த அத்தனை கவுரவர்களும் போரில் மாண்டு போனார்கள். வாஸ்து சாஸ்திரப்படி, மாயா கட்டிய மாளிகையில் பாண்டவரும் வாழ முடியவில்லை, கவுரவர்களும் வாழ முடியவில்லை. அயோத்தி மாநகரமும் மாயா உருவாக்கியதுதான் என்பர். அதில் ராமர் பட்டாபிஷேகத்திற்கு என ஒரு மாளிகை கட்டினார். அந்த மாளிகையில் ராமர் ஒரு மணி நேரம்கூட தங்க முடியவில்லை. தம்பி லட்சுமணனுடனும், மனைவி சீதையுடனும் ராமர் 14 ஆண்டு காட்டுக்குச் சென்றுவிட்டார்.

தேவ _ அசுரர்கள் மாயாவை வெறுத்தனர்.  மாபெரும் சிற்பி புகலிடம் தேடி தெற்கே ஓடிவந்தார். விந்திய மலையைத் தாண்டி வந்தார். திரிபுரிகள் என்னும் மூன்று நகர்களைக் கட்டினார் என்கின்றனர். ஆனால், அந்த நகரங்கள் இருந்ததற்கான தடயமே இன்று காணப் படவில்லை. அது மட்டுமல்ல, அவர் மகள்தான் மண்டோதரி. ராவணன் மனைவி. அவனுக்கும் அவர்தான் இலங்கையில் மாபெரும் அரண்மனை கட்டித் தந்தார். அந்த மாவீரன் இராவணனும் தனது ஆள்பெரும் படையோடு தோற்று வீழ்ந்தான், மாண்டான்.

வாஸ்து பயன் தரவில்லை என்பதற்கு இராமாயணமும், மகாபாரதமுமே சான்று.

ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ், இரண்டாவது முறை தேர்தலுக்கு நிற்பதற்கு முன்னால் நிரந்தர முதல்வர் ஆகிவிட எண்ணினார். ஆந்திரத்தில் தலைசிறந்த வாஸ்து மேதையை அழைத்து, முதல்வர் மாளிகைக்குச் செல்லும் பாதையை மாற்றி அமைத்தார். அதற்கு மக்கள் பணம் ரூ. 1 கோடிக்கு மேல் செலவும் ஆனது. அந்தப் பாதை வழியாக மாளிகை சென்ற குடியேறிய ஒரு வாரத்திலேயே முதல்வர் பதவி பறிபோனது. சொந்த மருமகன் சந்திரபாபு நாயுடுவாலேயே பதவியையும் இழந்தார் என்.டி.ராமாராவ்!

பெங்களூரில் மிகப் புகழ் பெற்ற வாஸ்து மேதை பி.என்.ரெட்டி என்பவர், பல அடுக்குமாடி ஒன்றை முற்றிலும் வாஸ்து சாஸ்திரப்படி பல கோடி செலவில் கட்டி முடித்தார். திறப்பு விழா நடப்பதற்கு முன்பே அக்கட்டடம் இடிந்து தரை மட்டம் ஆனது. இந்திய முன்னாள் பிரதமர் தேவகவுடா பிரதமர் ஆன பின்னாலே தொடர்ந்து பதவியில் நீடிக்க விரும்பினார். வாஸ்து மேதைகள் அறிவுரைப்படி வீட்டுப் படியை மாற்றி அமைத்தார். அடுத்த மாதமே அவர் வகித்த பிரதமர் பதவி பறிபோனது.

இன்றைய சமூகத்தின் முதுகெலும்பான _ உழைக்கும் மக்கள் எங்கு மனையிடம் இருக்கின்றதோ, மனைப்பட்டா இலவசமாகக் கிடைக்கின்றதோ அங்கெல்லாம் இரவோடு இரவாகக் குடியேறுகின்றனர். அவர்கள் யாரும் வாஸ்து பார்த்து வீடு அமைப்பதில்லை. என்றாலும், கெட்டழியாது நன்றாகத்தான் வாழ்கிறார்கள்!

வாஸ்து சாஸ்திரம் வர்ணாசிரம தருமத்தை வலியுறுத்த உருவானது; நால்வகை வர்ண அடிப்படையில் மனை இடம் தேர்வு செய்ய நிலத்தை வகைப்படுத்துகின்றது. ஒவ்வொரு வர்ணத்திற்கும் உரிய உத்தமமான நிலம் எது என்று வாஸ்து சாஸ்திரம் பாகுபாடு செய்கின்றது.

வருணத்திற்கேற்ற மனை

வர்ணம்           ஊரில் மனை இடம்

               இருக்க வேண்டிய திசை

ஆரியப் பார்ப்பனர்   –              ஊரின் தெற்கே         

சத்திரியர்       –              ஊரின் மேற்கே

வைசியர்        –              ஊரின் வடக்கே

சூத்திரன்         –              ஊரின் கிழக்கே

மண்ணின் நிறம்

ஆரியப் பார்ப்பனர்   –              பொன்னிற மண்       

சத்திரியர்       –              சிவந்த மண்

வைசியர்        –              பச்சைநிற மண்

சூத்திரன்         –              கருப்புநிற மண்

மண்ணின் சுவை

ஆரியப் பார்ப்பனர்   –              இனிப்பு           

சத்திரியர்       –              காரம்

வைசியர்        –              புளிப்பு

சூத்திரன்         –              கசப்பு

வர்ணத்திற்கேற்ப வாசல்

ஆரியப் பார்ப்பனர்   –              வடக்கு            

சத்திரியர்       –              கிழக்கு

வைசியர்        –              தெற்கு

சூத்திரன்         –              மேற்கு

மேலே குறிப்பிட்டபடி, நால்வர்ணத்தினரும், குறிப்பிட்ட சுவை, நிறம் உடைய மண்ணில் ஊரின் குறிப்பிட்ட திசையில் மனையிடம் தேர்வு செய்து, குறிப்பிட்ட திசை நோக்கி தலைவாசலை வைத்திட வேண்டுமென்கிறது வாஸ்து சாஸ்திரம்.

இது சாஸ்திரமா? சதியா? பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பித்து சமத்துவத்தை ஒழிக்கும் சதியே வாஸ்து!

வாஸ்து சாஸ்திரம் வர்ணாஸ்ரமத்தை நிலைநிறுத்த உருவாக்கப்பட்டது. மக்களைப் பிரித்து ஜாதியக் கட்டமைப்பாக உருவாக்க வாஸ்து ஒரு கருவி.

இன்று எல்லா மக்களிடையேயும் வர்ண வழியும் ஜாதி வழியும் பிரிக்க முடியாதபடி எண்ணற்ற மாற்றங்கள் உருவாகிவிட்டன. ஒரே குடும்பத்தில் புரோகிதர், வணிகர், தொழில் முனைவோர், கருத்தாலும் கரத்தாலும் உழைப்போர் என உருவாகிவிட்ட நிலை. தந்தை புரோகிதர், மகன்களில் ஒருவர் வணிகர், ஒருவர் தொழில் முனைவர், ஒருவர் ஆசிரியர், ஒரு தொழில் பணியாளர் என ஆகிவிட்ட நிலை. ஒரே குடும்பத்தில் பல்வேறு தொழில் சார்ந்த நிலை என்றால் சமூக முழுமையும் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன.

அப்படிப்பட்ட, இன்றைய சூழலில் சாஸ்திர அடிப்படையிலான வர்ணாசிரம முறையே,  வழக்கொழிந்து வருகிறது. வர்ணாஸ்ரமமே சட்ட விரோதம். அப்படியிருக்க, வர்ண அடிப்படையில் மனை இடம் தேர்வு செய்வது எப்படி? குடி அமர்த்துவது எப்படி?

சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள ஆரிய பார்ப்பனர்களுக்கும் சத்திரியர்களுக்கும், வலுவான நிலை உள்ள நிலங்கள் _ முறையே பொன்னிறம், சிவப்பு நிறம், பச்சை நிற மனை நிலங்களைத் தேர்வு செய்கின்றனர். ஆனால், உழைக்கிற தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மழைக் காலத்தில் சேரும் சகதியும் உள்ள உவர் நிலம்.

இத்தகைய மனைத் தேர்வு அநீதி அல்லவா? இதற்குப் பெயர் சாஸ்திரமா? நம்புபவர் அறிவுடையவரா? மண்ணின் சுவையில்கூட உயர் வர்ண இன மக்களுக்கு, இனிப்பு, காரம், புளிப்பு என வைத்து கீழ்வர்ண மக்களுக்கு கசப்பு தேர்வு செய்யச் சொல்வது கொடுமை-யிலும் கொடுமை அல்லவா?

ஒரே ஊரில் தெற்கே பொன்னிற மண்ணும், மேற்கே சிவந்த மண்ணும், வடக்கே பச்சை நிற மண்ணும், கிழக்கே கருப்பு நிற மண்ணும் எங்காவது அமையுமா? பெரும்பாலும் ஒரே நிற மண் (அ) இருவகை மண்ணோ தான் இருக்க முடியும். வர்ண அடிப்படையில் மண் தேர்வு என்பது நடைமுறை சாத்தியமில்லாதது.

மனை இடம் அமைப்பு முறை

எங்கே மழை பெய்தாலும் வடகிழக்கு மூலையில் வடிநிலை அமைவதாக இருக்க வேண்டும் என்கின்றனர். இதன் மூலம் மேல் வர்ண மக்களுக்கு எந்த மழை புயல் வந்தாலும் பாதிப்பு இல்லாத இடத்தில் மனை; கீழ் குடிமக்களுக்கு எல்லாத் தொல்லைகளும் ஏற்பட வாய்ப்புள்ள மனை. அநீதியிலும் அநீதியல்லவா?  இப்படிக் கூறும் வாஸ்து ஒரு சாஸ்திரமா?

(தொடரும்…)

வாஸ்து சாஸ்திரம் அறிவியல் அடிப்படை கொண்டதா?

 

 

ஏப்ரல் 16-31,2022

ஒளிமதி

வாஸ்து, சாஸ்திரம் என்ற வார்த்தைகள் தமிழ் அல்ல என்பதால் இவை தமிழர்க்கு உரியன அல்ல என்பது எளிதில் விளங்கும். இவை சமஸ்கிருதச் சொற்கள். என்னே இந்த ஆரிய பார்ப்பனர்களின் புனைவு!

வழக்கம்போல தங்கள் கருத்துகளை மக்கள் மத்தியில் பதியச் செய்ய மக்களை ஏற்கச் செய்ய ஒரு புராணக் கதையை எழுதி மக்களிடம் பரப்புவதே அவர்களின் யுக்தி, தந்திரம் ஆகும். அப்படி வாஸ்துவுக்கும் ஒரு புராணக் கதையைப் புனைந்து மக்களிடம் பரப்பினர்.

வாஸ்து புருஷன்

வாஸ்து புருஷன் என்பவர் ககண்டி முனிவருக்கும் பூமாதேவிக்கும் பிறந்தவர் என்கிறது புராணம்.

மானசாரா, மாயாமதா, ப்ரிகு, மேதை வராக மிகிரர் மற்றும் பல ரிஷிகளால் உருவாக்கி செழுமைப்படுத்தப்பட்டது வாஸ்து சாஸ்திரம் என்கின்றனர்.

வாஸ்து புருஷன், தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஓர் அச்சுறுத்தலாக, ஒரு கட்டத்தில் விஸ்வரூபம் எடுத்தார் என்கிறது புராணக்கதை! அதன் ஆபத்தை உணர்ந்து பிரம்மா உள்பட 81 தேவர்கள், அசுரர்கள் வாஸ்துவை அடக்கி, நிலத்தில் படுத்த நிலையில் அமுக்கிவிட்டார்களாம். அப்படி அமுக்கப்பட்ட வாஸ்து மூன்று நிலைகளில் பூமி முழுவதும் படர்ந்து படுத்திருக்கின்றாராம்! அந்த மூன்று நிலைகள் இவை:

1. ஸ்திரா நிலை

மலர்ந்த நேர்முக வாக்கில் வடகிழக்கு மூலையில் மனையில் தலைவைத்து தென்மேற்கு மூலையில் கால் சேர்த்து அமுக்கப்பட்டு வாஸ்து படுத்திருப்பது ஸ்திரா நிலை.

2. சாரா நிலை

அமுக்கப்பட்டுப் படுத்திருக்கிற நிலையில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை வாஸ்து தலை, கால், பார்வைத்திசை மாற்றுவது சாரா நிலை.

3. தினா முறை

தலை, கால்களைத் தினசரி பகலில் 8இல்

1 முறை அதாவது 1:30 மணிக்கு ஒருமுறை திசை மாறிப்படுப்பது தினா முறை. இப்படி சாரா நிலையிலும், தினா முறையிலும், ஏன் வாஸ்து புருஷர் திசை மாறுகிறார்? எவரிடத்தும் விளக்கம் இல்லை. ஒருக்கால் ஒரே நேரத்தில் 81 தேவ அசுரர்கள் அமுக்குகின்றபோது, வாஸ்து அசைகின்றாரோ என்னவோ தெரியவில்லை. அடிக்கடி மாறும் சாரா நிலையையும், தினா நிலையையும் அனுசரித்து ஒரு நிலையான கட்டடத்தையோ _ வீட்டையோ, கட்ட முடியாது. கட்டிய பிறகு மாற்றி வைக்க முடியாது. நடைமுறைக்கு உகந்தது என்ற வகையில் வாஸ்துவின் ஸ்திரா நிலையே வழக்கில் அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

வாஸ்து புருஷன் இருப்பு

வாஸ்து சாஸ்திரம் உருவான காலம், பூமி _ தட்டை என்று நம்பிய காலம். எனவே, வாஸ்து புருஷன் பூமி முழுவதும் படர்ந்து படுத்திருப்-பதாக நம்பினர். இன்று பூமி உருண்டை மட்டுமல்ல, 230 சாய்வான கோண அச்சில் தற்சுழற்சியால் சுழன்று வருகின்றது என்று அறிவியல் அறுதியிட்டுக் கூறுகின்றது. இது குழந்தைகளுக்கும் தெரியும்! வாஸ்து புருஷர் வடகிழக்கு மூலையில் தலைவைத்து தென்மேற்கு மூலையில் கால்குவித்து படர்ந்து படுத்திருக்கின்றார் என்பது கேலிக்குரியதாக இல்லையா?

உருண்டையான பூமியில் வடதுருவத்தில் வடகிழக்கு மூலையில் தலையும் கால்களும் ஒன்று சேர்கின்ற வகையில் வட்டவடிவில், வளைந்து படுத்திருக்கத்தான் முடியும். இந்த நிலையில் வடகிழக்கு மூலை _ ஜல மூலை என்று எதைத் தேடுவது? மேற்கு, கிழக்கு, தெற்கு ஆகிய மூன்று திசைகளிலும் கடல் சூழ்ந்த தீபகற்பம் தென்னிந்திய நிலப்பகுதி. தென்புலத்தில் உள்ள நமக்கு எது ஜல மூலை? மூன்றும்தானே? வடகிழக்கு மூலையில் ஜல மூலையைத் எப்படித் தேடுவது? என்ன அறிவுடைமை?

பூமி உருண்டையானது என்ற உண்மையை அறியாத காலத்தில், பூமி தட்டை என்று எண்ணிக் கொண்டிருந்தவர்களால் உருவாக்கப்-பட்ட வாஸ்து சாஸ்திரம், எப்படி அறிவியல் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக இருக்க முடியும்?

வாஸ்து பூஜை

வாஸ்து சாஸ்திரத்தில் மிக முக்கியமானது _ பூமி பூஜை _ வாஸ்து பூஜை! வாஸ்து மகாபுருஷர் கண் விழிக்கும் நேரம்தான் பூமி பூஜைக்கு உரிய நேரம், உத்தமமான நேரம் என்கின்றனர். அந்த உத்தமமான நேரத்தில் பூமி பூஜை செய்தால்தான் வீட்டில் செல்வமும் வளமும் கொழிக்கும், வாழ்வு சிறக்கும் என்கின்றனர்.

வாஸ்து கண்விழித்தல்

வாஸ்து கண்விழிக்கும் நேரம் எது? மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே வாஸ்து கண் விழிப்பாராம்! அதுவும் மூன்றே முக்கால் நாழிகை (1:30 மணி நேரம்) மட்டும்தான் கண்விழிப்பாராம். அப்போது அந்த மகாபுருஷர் அய்ந்து மகத்தான பணிகள் செய்வாராம்!

1. பல் துலக்குதல்-16 நிமிடம்-போதிய பலன் தரும்.

2. குளித்தல் – 16 நிமிடம் – நற்பயன் விளையும்.

3. பூஜை செய்தல் – 16 நிமிடம் – உத்தம பலன் தரும்.

4. உணவு உட்கொள்ளல் – 16 நிமிடம் -மிக உத்தமமான நேரம்

5. தாம்பூலம் தரித்தல்-16 நிமிடம் – மிகுந்த யோக நேரம்

இந்த மகத்தான அய்ந்து பணிகளையும் முடித்து விட்டு மீண்டும் வாஸ்து தூங்கச் சென்று விடுவார். அதற்குள் பூமி பூஜை முடிக்க வேண்டுமாம்! அதுவும் கடைசி 16+16=32 நிமிடங்கள் மிக மிக உத்தமமான நேரம் அதற்குள் முடிக்க வேண்டுமாம்! மாதம் 30 நாள்களில் அதாவது 24 ஜ் 30 = 720 மணி நேரத்தில், 1:30 (ஒன்றரை) எமணி நேரம் மட்டுமே கண் விழித்திருக்கின்ற, மாதத்தில் மீதி 718.5 மணி நேரமும் தூங்கிக் கழிக்கின்ற ஒரு உலக மகாச் சோம்பேறி கண் விழிக்கின்ற 1:30 மணி நேரம்தான் உத்தமமான நேரமாம். அதுவும் கடைசி 32 நிமிடம்தான் மிக மிக உத்தமமான நேரம் என்பது எவ்வளவு வேதனையான வேடிக்கை? இப்படிப்பட்ட சோம்பேறியை நினைத்து, வழிபட்டு, பூமி பூஜை போட்டால், பூமிதான் விளங்குமா? வீடும் நாடும்தாம் விளங்குமா?

தேவர்களால் பூமியில் அழுத்தப்பட்டு, படுத்த நிலையில் புதைந்துபோனவன் வாஸ்து என்று புராணம் சொல்லியுள்ளது. அப்படி-யிருக்க அவர் எப்படி எழுந்திருந்து பல் துலக்குதல், குளித்தல், பூஜை செய்தல், உணவு உட்கொள்ளல், வெற்றிலை பாக்கு போடுதல் போன்றவற்றை எப்படிச் செய்ய முடியும்? ஆக புராணம் என்பதும், வாஸ்து என்பதும் முரண்பட்டுக் கூறப்பட்ட பொய் மூட்டைகள் என்பது புரிகிறதல்லவா?

வாஸ்து பூஜைக்கு உரிய மாதங்கள்

வைகாசி (ஏப்ரல்_மே) : நல்ல பலன்

ஆவணி (ஜூலை_ஆகஸ்ட்): மிகவும் நல்ல பலன்

கார்த்திகை (செப்டம்பர்_அக்டோபர்): பெரும் செல்வம்.

மாசி (ஜனவரி_பிப்ரவரி): குடும்பத்துக்கு நன்மை

பங்குனி (பிப்ரவரி_மார்ச்): எல்லா நலன்களும் தரும்.

இவை அய்ந்தும் எல்லா நலன்களும் தரும் மாதங்கள். மீதமுள்ள 7 மாதங்கள் பாதகமான மாதங்கள்:

1.            சித்திரை (மார்ச்சு _ ஏப்ரல்) : தன நஷ்டம், பயம் ஏற்படும்.

2.            ஆனி (மே_ஜூன்): மரண பயம்.

3.            ஆடி (ஜூன் _ ஜூலை): வாகன நஷ்டம், பண நஷ்டம்.

4.            புரட்டாசி (ஆகஸ்ட் _ செப்டம்பர்) : நோய் நொடிகள், செலவுகள் அதிகம்.

5.            அய்ப்பசி (செப்டம்பர்_அக்டோபர்): குடும்பத்தில் சண்டை.

6.            மார்கழி (நவம்பர்_டிசம்பர்): பயம், தோல்வி மிகும்.

7.            தை (டிசம்பர்_ஜனவரி): அக்னி பயம், கவலை மிகும்.

வாஸ்து வளம் நலம் தந்ததாய் வரலாறு உண்டா?

வாஸ்து சாஸ்திரம் உருவான காலத்திலாவது _ இதிகாச காலங்களிலாவது வாஸ்து சாஸ்திரத்தைப் பின்பற்றி நடந்தவர்களுக்கு வளமும், நலமும் வந்ததாய் வரலாறு உண்டா?

(தொடரும்…)

செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

ஓ, ஜோதிட மூடர்களே!

 

கேரள எல்லை நகரமான களியக்காவிளையில் வசிப்பவர் கிரிஸ்மா, இவருக்குத் திருமணம் செய்ய பெற்றோர் ஜாதகம் பார்த்தனர். அப்போது இவரது ஜாதகத்தின் படி திருமணம் செய்த உடனே கணவர் இறந்து விடுவார், இதனால் வாழா வெட்டியாக வாழவேண்டும் என்று அவரது ஜாதகத்தில் குறிப்பிட்டுள்ளதாக ஜோதிடர் கூறினார். மேலும் இரண்டாவது திருமணம் செய்தால் அந்தக் கணவருக்கு ஆயுள் கூடும் என்றும் ஜாதகத்தில் உள்ளதாகக் கூறியுள்ளார்.  இந்த நிலையில் அவருக்கு ராணுவ வீரர் ஒருவரைத் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்திருந்தனர். 

தனது திருமணம் ராணுவ வீரருடன் நடந்தால் அவர் ஜாதகப்படி செத்துப் போவார் என்று நினைத்த கிரிஸ்மா ஜாதகத் தில் குறிப்பிட்ட படி முதல் திருமணம் செய்து பிறகு ராணுவ வீரரைத் திருமணம் செய்ய முடிவு செய்தார்.  இதன் படி  குமரி மாவட்ட எல்லையான பாறசாலை முறியன் கரை பகுதியை சேர்ந்தவர் ஷாரோன்ராஜ் (வயது 23). இவர் குமரிமாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ. 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இவரை  தேர்ந்தெடுத்து காதலிப்பதாக கூறி அவரைப் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

 சில நாள்களுக்குப் பின்பு கோவில் ஒன்றில் தனக்கு தாலிகட்டி தன்னை மனைவியாக ஏற்றுக் கொள் என்று கூறினார். இதனை அடுத்து அந்த இளைஞரும் கிரிஸ்மாவிற்குத் தாலிகட்டி குங்குமம் வைத்தார். தனக்குத் திருமணம் முடிந்துவிட்டது என்று நினைத்த அவர், தன் வீட்டிற்குச் சென்றுவருவதாக கூறினார். பின்னர் கடந்த 14ஆம் தேதி கிரிஸ்மா தனது கணவர் ஷாரோன்ராஜை  குடும்ப நண்பர் ஒருவர் விருந்திற்கு அழைத்ததாகக் கூறி அழைத்துச் சென்றார்.

விருந்தின் போது அவருக்கு பழச்சாறு மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு கஷாயம் கொடுத் துள்ளார். பின்னர் மீண்டும் அவரை வீட்டிற்கு அனுப்பி விட்டார். இந்த நிலையில் வீட்டிற்கு வந்த அவர் கடுமையான வயிறு வலிப்பதாகக் கூறியதை அடுத்து அவரை பாறசாலை அரசு மருத்துவ மனையில் சேர்த்தார்கள்.

அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி  ஷாரோன்ராஜ் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி ஷாரோன்ராஜின் பெற்றோர் பாறசாலை காவல் துறையில் புகார் கொடுத்தனர். அதில் தனது மகன்  ஷாரோன் ராஜை அவரது காதலி குடும்பத் தினர் திட்டமிட்டுக் கொன்று விட்டதாக கூறியிருந்தனர். 

மேலும் ஷாரோன்ராஜின் காதலிக்கு ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகவும், அவருக்குத் திருமணம் நடந்தால் முதல் கணவர் இறந்து விடுவார் என ஜாதகத்தில் கூறப்பட்டதால், தனது மகனை திட்டமிட்டுக் கொன்று விட்டு, கிரிஷ்மாவுக்கு ராணுவ வீரர் ஒருவரைத் திருமணம் செய்து கொடுக்க நிச்சயம் செய்து இருப்பதாகவும் புகாரில் கூறினர். இந்த புகார் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய இளம்பெண்ணையும், அவருக்கு உடைந்தையாக இருந்த குடும்பத்தினரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கொலை செய்யப் பயன்படுத்திய நஞ்சு எது என்பதையும், ஜோதிடர் குறித்த விவரத்தையும் விசாரணையில் வெளிப்படுத்தினர்.

அக்டோபர் முதல்வாரம் இந்தியாவையே குலுக்கிய கேரள நரபலி நிகழ்வு அதிர்வலையை ஏற்படுத்தியது. அதுவும் செல்வந்தராகவேண்டும் என்றால் ஜோதிடத்தின்படி பெண்களை பலி கொடுத்தால் பணக்காரர் ஆகலாம் என்று மூடநடம்பிக்கையில் விளைவாகத்தான் அந்த நரபலி. அதே போல் ஜாதகத்தை நம்பி கல்லூரி மாணவனை கொலை செய்துள்ளதும் தற்போது நிகழ்ந்துள்ளது.

இவ்வளவுக்குப் பிறகும் மத மூடநம்பிக்கை களுக்கும், வழிபாட்டுக்கும், ஜோதிடத்துக்கும் முட்டுக் கொடுக்கும் மூடர்களைஎது கொண்டு சாற்றுவது?

மனிதர்களே பகுத்தறிவைப் பயன்படுத்துவீர்! மனிதராவீர்!