பக்கங்கள்

வியாழன், 6 செப்டம்பர், 2018

சமூக ஊடகங்களில் அம்பலமாகிய கேரள சோதிடரின் சோதிடப் புரட்டு

கொச்சி, செப்.5 கற்கட மாசம், ஜூலை  17 முதலே ஆகஸ்ட் ஒன்னாந்தேதி வரை மழை இருக்கப்போவதில்லை.நல்ல உஷ்ணம் ஜீவியுண்டாகும். ஆகஸ்ட் 1 முதல் செப்.17 வரை கொஞ்சம் மழை இருக்கும். செப்.1 முதல் அக்.11வரை தானியங்களுக்கு அனுகூலமாகும் விதத்தில் மழை இருக்கும். ஏனென்றால், அவிட வாயு கோபம். வாயு தாராளமாகி, கார்மேகங்கள் சின்னா பின்னம் ஆய்ப் போம். வன பருவதங்களில் கடந்த வருடங்களைப்போல்தான் மழை இருக்கும்.


வய்துதி உல்பாதனம் விதரனம் விபனனம்....


இப்படியாக மலையாள மொழி தொலைக்காட்சியில் சோதிடர் கேரளாவில் மழை நிலவரம் குறித்து ஏதோ கொஞ்சம் மழை பொழியும் என்றும், காற்று அதிதீவிரமாக அடித்து மேகத்தைக் கலைத்துவிடும் என்றெல்லாம் கூறி, கேட்கின்ற யாருக்குமே புரியக்கூடாது என்று சமஸ்கிருதத்திலும் ஏதேதோ அந்த சோதிடர் ஆருடம் கூறுகின்றார். ஆனால், நூற்றாண்டு காணாத மழை பொழியும், வெள்ளம் வாரிச்சுருட்டிச் செல்லும் என்று கூறவில்லை. எல்லாவற்றையும்விட, தன்னையே அவரால் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. அவரையும் மீட்புக்குழுவினரே மீட்டனர்.

அந்த சோதிடர் தொலைக்காட்சியில்  சோதிடம் கூறுகின்ற காட்சிப்பதிவை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதுடன், கேரளா வெள்ளத்தில், அதே சோதிடரை மீட்புக் குழுவினர் குண்டு கட்டாகத் தூக்கி வரும் காட்சிப் பதிவையும் வெளியிட்டு, சோதிடம் என்பது எவ்வளவு பெரிய புளுகுமூட்டை என்பதை மீம்ஸ்கள்மூலம் தோலுரித்துள்ளனர்.

கீழ்க்கண்டவாறு அந்த காட்சிப் பதிவு, படத்துடன்  தகவலைப் பதிவேற்றி பகிர்ந்து வருகின்றனர்.

மலையாள ஜோதிடர்...


இந்த ஆண்டு அதிக மழை இருக்காது, வெப்பம் தாக்கும்..! என டிவியில் பேட்டி கொடுத்தவர்



நேற்று அதே சானல் மறு ஒளிபரப்பாக வெளியிட்டு ஜோதிடத்தால் அவரையே காப்பாற்ற முடியவில்லை என வெள்ளத்தில் அவரை காப்பாற்றி தூக்கிவரும் புகைப் படத்தையும் வெளியிட்டது...!!



-  விடுதலை நாளேடு, 5.9.18