பக்கங்கள்

புதன், 11 ஜனவரி, 2017

கிளி சோதிடம்




(டாக்டர் ஆபிரகாம் கோவூர் எழுதிய ‘Begone Godmen’ என்ற நூலிலிருந்து இக்கட்டுரைப் பகுதியை தமிழாக்கித் தருபவர் செல்வமகள்)

1966ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவூர் தன் மனைவியுடன் திருச்சியில் ஒரு முக்கிய சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு சோதிடரின், பெயர்ப் பலகை அவரைக் கவர்ந்தது. வாதத்திற்கு இடம் தருகின்ற இயல்புக்குப் புறம்பான நிகழ்ச்சிகளை ஆராய்ந்து உண்மை தேடுவதில் கோவூர் அக்கறை கொண்டவர்.

எனவே அவர் சோதிடரிடம் சென்றார். அங்கே தாடி வளர்த்த முதியவர் ஒருவர் தரையில் சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்தார். அவருடைய மார்பிலெல்லாம் திருநீற்று பூச்சு காணப்பட்டது. அவருடைய நெற்றி யில் நாமம் அவரை ஒரு வைணவர் என்று காட்டியது. அவருக்கு முன் னால் பழைய ஓலைச் சுவடிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அவருக்குப் பக்கத்தில் ஒரு கூண்டில் ஒரு பச்சைக்கிளி இருந்தது. 1,2,3... என்று எழுதப்பட்ட அட்டைகள் நூற்றுக்கணக்கில் அங்கே தரையில் சிதறிக் கிடந்தன.

சோதிடருடன் கோவூர் நீண்ட நேரம் உரையாடினார். சோதிடரின் தொழில் பற்றிய செய்திகள் பலவற் றைத் தெரிந்துகொண்டார். இந்தப் பழைய ஓலைச் சுவடிகள் அனைத்தும் என்னுடைய மூதாதையர் இடமிருந்து எனக்கு வழி வழி உடைமையாக கிடைத்தன. இந்த ஓலைகளுள் சிலவற்றின் ஓரங்களில் ஒடிந்திருக்கின்றன. இவை அனைத்தும் பழங்கால முனிவர்களால் எழுதப் பட்டனவாகும்.

இந்த உலகில் இதற்கு முன்பு பிறந்தவர்கள், இப்பொழுது வாழ்பவர்கள், இனிமேல் பிறக்கப் போகிறவர்கள் ஆகிய அனைவருடைய சோதிடக் குறிப்புகளும் இங்கே என்னிடம் உள்ளன.

இந்த அடுக்கிலுள்ள ஓலைகள் ஒன்றில் உங்களுடைய முந்திய பிறப்பு , இப்போதைய வாழ்வு. இனி வரப்போகும் பிறப்பு ஆகியவற்றைப் பற்றிய சோதிடக் குறிப்புகள் காணப்படலாம். உங்களுடைய பிறந்த நாளைக் கொண்டு அல்லது கிளியின் உதவி கொண்டு உங்களுடைய சோதிடக் குறிப்பைக் கண்டெடுக்கலாம் என்று சோதிடர் கோவூரிடம் கூறினார்.

சிறிது பணம் கொடுத்தால் உங்களுடைய சோதிடக் குறிப்பு உள்ள ஓலையை எடுத்துக் காட்டுகிறேன் என்று சோதிடர் கூறினார்.

கோவூர் ஒரு ரூபாய் கொடுத்தார். சோதிடர் திருப்தி அடையவில்லை. எனினும் எண்கள் எழுதப்பட்ட அட்டைகளின் ஊடே கிளியை திறந்து விட்டார். 37 என்ற எண் உள்ள அட்டையை கிளி தன் அலகில் எடுத்துக் கொண்டு வந்தது.

சோதிடர் அந்த அட்டையை தன் கையில் வாங்கினார். உடனே கிளிக்கு ஒரு நெல் தானியத்தைப் பரிசாகக் கொடுத்தார். (அல்லது) ஒவ்வொரு முறை அட்டை எடுக்கும்போதும் ஒவ்வொரு நெல் கிடைக்கும் என்று கிளிக்கு  உண்டாக்கப்பட்டிருந்த நம்பிக் கையைக் கிளி இழந்துவிடாமல் இருக்கவேண்டும் என்பதற்காகக் கொடுத்தார் என்றும் நாம் சொல்லலாம்.

கிளியை மீண்டும் கூண்டில் அடைத் தார். அட்டையில் இருந்த 37 என்ற எண்ணை பார்த்தார். கோவூரின் சோதிடக் குறிப்பு அடங்கியிருந்த ஓலையை எடுத்தார். கோவூர் அந்த ஓலையை வாங்கிப் பார்த்தார். அது தமிழில் எழுதப்பட்டிருந்தது. கோவூ ருக்குத் தமிழ் வாசிக்கத் தெரியாது. சோதிடர் அதைப் படித்துக் காட்டி விளக்கம் சொல்ல தயாரானார்.

ஆனால் கோவூர் அந்த ஓலையை மீண்டும் பழையபடி ஓலை அடுக்குக்குள் வைத்து விடச் சொல்லி திருப்பித் தந்துவிட்டார். மீண்டும் கோவூர் ஒரு ரூபாய் கொடுத்தார். மறுபடியும் கிளியை திறந்து விடச் சொன்னார். சோதிடர் மீண்டும் திறந்துவிடத் துணியவில்லை.

தயக்கம் காட்டினார். ஆயினும் கோவூர் விடவில்லை. மீண்டும் மீண்டும் வற்புறுத்தி பலவாறு எடுத்துச் சொல்லியும் சோதிடரை இணங்க வைத்துவிட்டார். இந்த தடவை 109 என்ற எண் உள்ள அட்டையைக் கிளி எடுத்து வந்தது!

இப்படியாக திருச்சி சோதிடரின் ஓலை வாசிப்பு வேலை முடிவு பெற்றது!! (சோதிடம் உண்மையாக இருக்குமானால் எத்தனை தடவை எடுத்தாலும் கிளி ஒரே எண் உள்ள அட்டையையே எடுக்க வேண்டும். இங்கே இந்தக் கிளி ஒரே மனிதருக்கு இரண்டு தடவையிலும் வெவ்வேறு அட்டைகளை எடுத்து விட்டது.சோதிடர் பாடு பரிதாபத்திற்குரியதாகி விட்டது.) சோதிடர்கள் அனைவரும் ஏமாற்றுப் பேர்வழிகள் ஆவார்கள்.

இறந்து போனவர், வாழ்கின்றவர், இனி பிறக்க போகின்றவர் ஆகிய அனைவரின் சோதிடக் குறிப்புகளும் - பழங்கால முனிவர்களால் எழுதப்பட்டதாக சொல்லப்படும் சோதிடக் குறிப்புகள் அனைத்தும் - சப்த ரிஷி வாக்கியம் என்று சொல்லப்படுகிற ஓலைகள் அனைத்தும் தம்மிடம் இருப்பதாக சொல்கிறவர்கள் அனைவரும் மோசடியாளர்கள் ஆவார்கள்.

தந்தை பெரியார் பொன்மொழி


தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால் தமிழ் நாட்டையும், தமிழர் வீரத்தையும், கலையையும், நாகரிகத்தையும் மறந்தான். தமிழன் தன்னை இந்து என்று கருதியதால் தனது மானத்தையும், ஞானத்தையும், பகுத்தறிவையும், உரிமையையும் இழந்தான்.
-விடுதலை,18.7.14

சனி, 7 ஜனவரி, 2017

தாலியை அறுத்தெறிய வேண்டும்


13-7-1930, குடிஅரசிலிருந்து...
பெண்கள் முன்னேற்றத்தில் கவலை உள்ளவர்கள்  பெண்களைப் படிக்க வைக்கும் முன் இந்தக் கழுத்துக் கயிற்றைத் (தாலியை) அறுத்தெறியும் வேலையையே முக்கியமாய் செய்யவேண்டுமென்று  சொல்லுவேன்.
நிற்க, இதுவரை மணமக்களுக்கு ஆசீர்வாதமோ வாழ்த்தோ  என்பது மண மக்கள் நிறைய அதாவது 16 பிள்ளைகள் பெற்க வேண்டுமென்று சொல்லுவார்கள்.
ஆனால் நான் மணமக்களுக்குச் சொல்லு வதென்ன வென்றால் அவர்கள் தயவு செய்து பிள்ளைகள் பெறக்கூடாது என்பதும், மிக்க அவசியமென்று தோன்றி னால் ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் கூடாது என்றும் அதுவும் இன்னும் அய்ந்து ஆறு வருடம் பொறுத்துத்தான் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளுகின் றேன்.
அன்றியும் அப்படிப் பெறும் குழந்தைகளையும் தாய்மார்கள் குரங்குக் குட்டிகள்போல் சதா தூக்கிக் கொண்டு திரிந்து போகின்ற இடங்களுக் கெல்லாம் அழைத்துப் போய் அழ வைத்துக் கொண்டு கூட்டமும் நடவாமல் தங் களுக்கும் திருப்தியில்லாமல் சபையோருக் கும் வெறுப்புத் தோன்றும் படியாய் செய் யாமல் குழந்தைகளை ஆயம்மாள் வைத்து வளர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
அவைகளுக்கு ஒழுங்கும் அவசிய மான  கட்டுப்பாடும்  பழக்கிக் கொடுக்க வேண்டும்.  இந்தக் கூட்டத்தில் நான் பேசமுடியாதபடி எத்தனைக் குழந்தைகள் அழுகின்றது பாருங்கள். அவற்றின் தாயார் முகங்கள் எவ்வளவு வாட்டத்துடன் வெட்கப்படுகின்றது பாருங்கள்.
அந்தத் தாய்மாரும் தகப்பன்மாரும் இந்தக் கூட்டத்தில் ஒருவரையொருவர் பார்த்து வெறுப்பதைத் தவிர அவர்களுக்கு இங்கு வேறு வேலையே இல்லாமல் இருக்கின்றது. இன்பமும் அன்பும் என்பது சுதந்திரத்தோடு இருக்க வேண்டுமே அல்லாது நிபந்தனையோடும் தனக்கு இஷ்டமில்லாத சவுகரியமில்லாத  கஷ்டத் தைச் சகித்துக் கொண்டு இருப்பதாய் இருக் கவே முடியாது.
ஆகவே இப்போதைய குழந்தை இன்பம் என்பது ஒருக்காலமும் உண்மையான இன்பமாகாது. ஆகையால் அவைகளை மாற்றிவிட வேண்டும். தவிர அதிக நகை போடாமலும் தாலி கட்டாமலும் மூடச் சடங்குகள் இல்லாமலும் மாத்திரம் நடைபெற்ற திருமணம் சுயமரியாதைத் திருமணமாகி விடாது.
பெண்ணின் பெற்றோர் இப்பெண் ணுக்குத் தங்கள் சொத்தில் ஒரு பாகம் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். புருஷர் களைப் போலவே பெண்களுக்கும் சொத் துரிமை உண்டு; தொழில் உரிமை உண்டு, என்கின்ற கொள்கை ஏற்படாவிட்டால் எப்படி அவர்கள் சுயமரியாதை உடைய வர்களாவார்கள்? ஆகையால் அவர் களுக்குச் சொத்துரிமையும் அவசியமான தாகும். தவிர பெண் களுக்கு இப்போது பொது நல சேவை என்னவென்றால் எப்படியாவது ஒவ் வொரு விதவையையும் ஒவ்வொரு புருஷனுடன் வாழச் செய்ய வேண்டும். அதுவே அவர்கள் இப்போது செய்ய வேண்டியது.
தவிர பெண்களும் புருஷர்களைப் போலவே தினமுமோ அல்லது வாரத்திற்கு ஒன்று இரண்டு நாளோ  ஒரு பொது இடத்தில் கூடி மகிழ்ச்சியாய்  பேசி விளை யாட வேண்டும். பத்திரிக்கைகளைப் படிக்க வேண்டும். படிக்காத பெண்களுக்குப் படித்த வர்கள் படித்துக் காட்ட வேண்டும்.
வீட்டு வேலை செய்வதுதான் தங்கள் கடமை என்பதை மறந்து விட வேண்டும். புருஷனுக்குத் தலைவியாய் இருப்பதும் குடும்பத்துக்கு எஜமானியாய் இருப்பதும் தங்கள் கடமை என்று நினைத்து அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்ள வேண்டும். இந்த உணர்ச்சியோடேயே பெண்மக்களை வளர்த்து அவர்களுக்குத் தக்க பயிற்சி கொடுக்க வேண்டும்.
-விடுதலை25.11.16

பிறந்தகாலம் என்பதை ஆதாரமாக வைத்து பலன் சொல்ல முடியுமா?



6-7-1930, குடிஅரசிலிருந்து...
பிறந்த காலம் என்பது வயிற்றுக்குள் இருக்கும்போது ஜீவன் (உயிர்) ஏற்பட்ட காலமா? அல்லது வயிற்றிலிருந்து 7, 8, 9, 10 மாதங்களில் எப்பொழுதானாலும் பிறக்கும் காலமா? அப்படி பிறக்கும் காலத்தில் தலை வெளியில் தெரியும் காலமா? அல்லது ஒரு நாள் அரைநாள் அக்குழந்தை கீழே விழாமல் கஷ்டப்படும் காலத்தில் தலை வெளியாகி நிலத்தில் பட்டுக் கால் நிலத்தில் விழாமல் தாய் சரீரத்தில் பட்டுக் கொண்டிருக்கும் காலமா?
அல்லது கால் தலையெல்லாம் மருத்துவச்சிக் கையில் விழுந்த நேரமா? அல்லது மருத்துவச்சி கையிலிருந்து கீழே விழுந்த நேரமா? என்பனவாகிய கேள்விகள் ஒரு புறமிருக்க ஜீவனுடைய சரீரமெல்லாம் பூமியில் விழுந்த நேரம் என்பதாக வைத்துக் கொண்டே பார்ப்போமானாலும் அந்த நேரத்தைச் சரியாக எப்படி கண்டு பிடிக்க முடியும்? என்பதை யோசிப்போம்.
குழந்தை கீழே விழுந்ததும் அது உயிருடனிருக்கிறதா இல்லையா? ஆணா பெண்ணா என்பன போன்றவை களைப் பார்க்க சிறிது நேரமாவது செல்லும். பிறகு அந்த சேதியைக் கொண்டு வந்து வெளியில் இருக்கும் ஆண்களிடம் சொல்ல சிறிது நேரமாவது செல்லும். அந்த சேதியைக் கேட்டவன் நேரத்தைக் குறிக்க அங்கேயே அவனுக்குக் கடிகாரம் வேண்டும்.
அந்தக் கடிகாரம் சரியான மணியா? என்பது தெரிய வேண்டும். கடிகாரமில்லாவிட்டால் வானத்தைப் பார்த்து நேரம் கண்டுபிடிப்பதாயிருந்தால் அதற்குப் பிடிக்கும் நேரம் முதலியவை அல்லது அக்கம் பக்கம் கடிகார நேரம், அதுவுமில்லாவிட்டால் உத்தேச சுமார் நேரம் ஆகியவைகளின் தாமதங்களும் பிசகுகளும் எப்படி நேராமல் இருக்க முடியும்?
இவை ஒரு புறமிருக்க அந்த நேரத்தால் பலன் சொல்லுவதனால் அந்த நேரத்தில் உலகத்தில் பிறக்கும் ஜீவன்கள் எவ்வளவு இருக்கக்கூடும் மற்ற ஜீவன்களை எல்லாம் தள்ளிவிட்டு வெறும் மனித ஜீவனை மாத்திரம் எடுத்துக் கொண்டாலும் உலகத்தில் 170 கோடி மக்கள் இருக்கிறார்கள் என்ற கணக்குப்படி பார்ப் போமானால் சென்னை முதலிய பட்டணங்களில் சாதாரண அனுபவங்களின் படிக்கு உலகத்தில் நாள் ஒன்றுக்கு 2,26,666 (இரண்டு லட்சத்து இருபத்தாறாயிரத்து அறுநூற்று  அறுபத்தாறு) குழந்தைகள் பிறப்பதாக கணக்கு ஏற்படு கின்றது.
(இந்தக் கணக்கானது அய்ந்து லட்சம் ஜனத்தொகை  உள்ள சென்னை நகரத்திற்கு தினம் ஒன்றுக்கு 70  (எழுபது) குழந்தைகள் பிறப்பதாகக் கணக்குப் போடப்பட்டிருக் கின்றது.) இதைத் தவிர கணக்குக்கு வராத விதவைகளின் குழந்தைகள், கல்யாணம் ஆகாத பெண்களின் குழந்தைகள், புருஷன் சமீபத்தில்  இல்லாத ஸ்திரிகளின் குழந்தைகள் ஆகியவைகளைச் சேர்த்தால் இன்னமும் இந்தக் கணக்குக்கு  அதிகமாகும். இது ஒரு புறமிருக்க மேல்படி சாதாரண கணக்குப் படிக்கு பார்த்தாலே ஒரு நாளைக்கு பிறக்கும் குழந்தைகளைப் பங்கிட்டு பார்த்தால் ஒரு நிமிஷத்திற்கு சுமார் 160 குழந்தைகள் வீதம் பிறக்கிறதாக கணக்கு ஏற்படுகிறது.
இதில் 33 கோடி ஜனத்தொகை கொண்ட நமது இந்தியாவுக்கு மாத்திரம் கணக்குப் பார்த்தால் நிமிஷத்திற்கு 33 குழந்தை வீதம்  பிறக்கின்றதாக கணக்கு ஏற்படுகின்றது. ஆகவே இந்த 33 குழந்தை களுக்குமாவது ஜாதகப் பலன் ஒத்து இருக்க முடியுமா? இவைகளுக்குச் சரியான நேரம் கண்டுபிடிக்க முடியுமா? என்பதை யோசிக்க வேண்டும்.
நிமிஷக் கணக்கே இப்படி நிமிஷத்துக்கு 33 குழந் தைகள் பிறப்பதாயிருக்கும் போது ஒரு சோதிடம் சொல்லுவதற்குப் போதுமான காலமாகிய ஒரு லக்கினம் நட்சத்திரம் ஆகியவைகளின் காலத்திற்குள் எத்தனை குழந்தைகள் பிறக்கக்கூடும்? என்பதைப் பார்த்தால் இது சிறிதும் பொருத்த மற்றதென்பதாகவே காணலாம்.
-விடுதலை,25.11.16