பக்கங்கள்

திங்கள், 24 பிப்ரவரி, 2025

ஜோதிடம் ஏன் பொய்யானது


விடுதலை நாளேடு
கட்டுரை

 கே.அசோக் வர்தன்ஷெட்டி

அய்.ஏ.எஸ். (பணி நிறைவு)

நட்சத்திரம் பார்த்தல், ஜோதிடம் பார்த்தல், நல்வாய்ப்பு அல்லது கெட்ட வாய்ப்பு போன்ற நிகழ்வுகளை அறிகுறிகள் கொண்டு கணித்தல், நன்மை அல்லது தீமைகளை முன்கணித்தல் ஆகிய அனைத்தும் தடை செய்யப்பட வேண்டியவை. – புத்தர்
நட்சத்திரங்களை பற்றி தொடர்ந்து ஆராயும் குழந்தைத்தனமான மனிதனிடமிருந்து செல்வம் விலகிச் செல்லும். – சாணக்கியர்
ஜோதிடம் மற்றும் இத்தகைய போலி விடயங்கள் யாவும் பலவீனமான மனதின் அறிகுறிகள் என்பதை நீங்கள் அறிந்துக்கொள்வீர்கள்; அத்தகைய எண்ணங்கள் நமது மனதில் தோன்றும்போது, நாம் ஒரு மருத்துவருடன் கலந்தாலோசித்து, ஆரோக்கியமான உணவை உண்டு, நன்கு ஓய்வெடுக்க வேண்டும்.
– விவேகானந்தர்

பெரும் பாதிப்பு
பகுத்தறிவு மற்றும் மனிதநேயத்தின் தீவிரப் போராளியான தந்தைபெரியார், எளிய மக்களின் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்ற பல்வேறு மூடநம்பிக்கைகளை அகற்ற பாடுபட்டார். அவர் பல சாதனைகள் செய்திருந்தபோதிலும், தமிழ் சமூகத்தின் கல்வியறிவு பெற்ற பிரிவினரிடையேயும் ஜோதிடம், நாடிஜோதிடம், வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஏனைய மூடநம்பிக்கைகளின் மீதான ஆர்வம் ஒரு நிலையான வளர்ச்சியின் கவலைக்குரிய அறிகுறிகள் உள்ளன. ஆம், நாட்டின் பிற பகுதிகளில் நிலைமை இதைவிட மிகவும் மோசமாக உள்ளது.
விமர்சன சிந்தனையை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, நமது கல்வி முறையானது, எழுத்தறிவில்லாத ஏமாளியை எழுத்தறிவு கொண்ட ஏமாளியாகவும், படிக்காத மூடநம்பிக்கை கொண்டவனைப் படித்த மூடநம்பிக்கையாளராகவும் மாற்றுவதாகத் தெரிகிறது! முரண்பாடாக, தொலைக்காட்சி மற்றும் இணையம் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் மூடநம்பிக்கைகளின் விரைவான மற்றும் பரந்த பரவலுக்கு தளங்களை வழங்கி அவற்றின் பரவலை எளிதாக்குகின்றன.

பகுத்தறிவின்மை
ஜோதிடம் என்பது அனைத்து மூடநம்பிக்கைகளிலும் மிகவும் பிரபலமானது. மேலும் இது சமூகத்தில் பகுத்தறிவின்மையையும் தெளிவின்மையையும் அளவிடக்கூடிய ஒரு கருவியாகவும் விளங்குகின்றது. காலங்காலமாக அறிவார்ந்த மக்கள் அனைவரும் ஜோதிடத்தை அலட்சியமாகவே கருதினர். ஆயினும், கோடிக்கணக்கான இந்தியர்கள் ஜோதிடத்தின் ஆலோசனையின்படி தங்களின் அன்றாட செயல்பாடு களை அதாவது – பயணம் மேற்கொள்ளுதல், திருமணம் நடத்துதல், மத நிகழ்வுகள், வணிக முடிவுகள், திட்டங்களை தொடங்குதல், தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தல், அறுவைச் சிகிச்சைகளை செய்துக்கொள்ள திட்டமிடல் போன்றவற்றை மேற்கொள்கொள்கின்றனர்.

போலி அறிவியல்
சிலர் நம்புவது போல் ஜோதிடம் என்பது பிறருக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத ஒரு விளையாட்டு அல்ல. சோதிடர்கள் மக்களின் பலவீனங்களை பயன் படுத்திக்கொண்டு, அப்பாவி மக்களின் பணத்தை சுரண்டுகிறார்கள். ஜாதக பொருத்தமின்மையின் காரண மாக எண்ணற்ற திருமணங்கள் நிராகரிக்கப்படுகின்றன. கற்பனை யான “மாங்கல்ய தோஷம்” காரண மாக பல பெண்கள் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள். 2007 ஆம் ஆண்டு, பாலிவுட் கதாநாயகி அய்ஸ்வர்யா ராய் தனது மாங்கல்ய தோஷத்தினால் ஏற்படும் தீய விளைவுகளைத் தடுப்பதற்காக முதலில் வாழை மரத்தை ‘திருமணம்’ செய்துக்கொண்டு, பின்னர் அபிஷேக் பச்சனை மணந்த அபத்தமான காட்சியை இந்தியா கண்டது!
இக்கட்டுரையில், ஜோதிடம் போலி அறிவியலாக விளங்குவதற்கான காராணத்தையும் அது போலியாக உள்ளபோதும், ஏன் பலர் அதை நம்புகின்றனர் என்பதையும் நான் விளக்க முற்படுகிறேன்.

ஜோதிடத்திற்கு எதிரான அறிவியல் வாதங்கள்
ஒரு மனிதன் பிறக்கும் போது சூரியன், சந்திரன் மற்றும் கோள்களின் (12 ராசிகள்) நிலைகளிலிருந்து அந்த மனிதனின் குணநலன்கள் மற்றும் விதியையும் ஜாதகம் எனப்படும் விளக்கப்படத்தைப் பயன்படுத்தி கண்டறியும் கோட்பாட்டினை அடிப்படையாக கொண்டது ஜோதிடமாகும். ஜாதகம் தனிநபர்களுக்கு மட்டுமன்று. நாடுகள், நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், விளையாட்டு அணிகள் மற்றும் வீட்டு செல்லப்பிராணிகளுக்கும் கூட எழுதப்படுகிறது.
ஜோதிடம் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு, சூரிய குடும்பம் மற்றும் கண்ணுக்குப் புலப்படும் நட்சத்திரங்ககள் பற்றி அறியப்பட்டவற்றின் அடிப்படையில் உருவாக்கப் பட்டதாகும். அப்போதிருந்து, பிரபஞ்சத்தைப் பற்றிய நமது அறிவு வெகுவாக விரிவடைந்ததுள்ளது, ஆனால் ஜோதிடம் அதே நிலையிலேயே தேக்கமடைந்து உள்ளது. ஜோதிடத்தில் ஏற்பட்ட புதிய கண்டுபிடிப்புகள் அல்லது ஜோதிடத்தின் வளர்ச்சி குறித்து நீங்கள் கடைசியாக எப்போது அறிந்துக் கொண்டீர்கள்? மேலும், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், ஜோதிடர்கள் தங்கள் கூற்றுகளுக்கான அடிப்படைக் கோட்பாடுகளில் இன்னும் ஒருமித்த கருத்தை எட்டவில்லை, மேலும் கோள்களின் நிலைகள் நமது குண நலன்கள் மற்றும் விதிகளின் மீது எவ்வாறு தாக்கம் ஏற்படுத்துகின்றன என்பது குறித்து அவர்களால் விளக்கமளிக்க முடியவில்லை.

தவறான அடித்தளங்கள்
ஜோதிடர்கள், நீண்டகாலமாக மதிப்பிழந்த கோப்பர்நிக்கஸ் காலத்திற்கு முந்தைய, பிரபஞ்சத்தின் புவி மய்ய மாதிரியின் அடிப்படையில் அவர்களின் வியாபாரத்தை நடத்துகிறார்கள்! புகழ்பெற்ற இயற் பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் 2001ஆம் ஆண்டில் புதுடில்லியில் ஒரு விரிவுரையில் கூறியது போல்: “பூமி பிரபஞ்சத்தின் மய்யம் அல்ல என்று கண்டுபிடிக்கப்பட்ட போது, ஜோதிடம் சாத்தியமற்றதாகிவிட்டது.”
ஜோதிடம் என்பது ஒரு பொருள் ஒப்புமை வாயிலான விளைவைக் கொண்டிருக்கிறது என்கிற தவறான கருத்தை அடிப்படையாகக் கொண்டது. உதாரணமாக, செவ்வாய் கோள் சிவப்பு நிறமாகத் தோன்றுவதாலும் சிவப்பு என்பது இரத்தத்தின் நிறம் என்பதாலும் அது ‘போர்’ என்பதைக் குறிக்கிறது. ரிஷபம் என்னும் விண்மீன் கூட்டம் காளையை ஒத்திருப்பதாகக் கருதப்படுவதால், அது ‘வலிமையை’ குறிக்கிறது. ஜோதிடம் தனிப்பட்ட கோள்கள் மற்றும் விண்மீன்களுடன் தொடர்புடைய ‘குணங்களை’ ‘குறிப்பிட்ட ராசிகளின் கீழ் பிறந்தவர்களுக்கு’ ஒதுக்குகின்ற ஒரு அபத்தமான முறை இது!

முட்டாள்தனம்
ஜோதிடர்கள் அவ்வப்போது சூரியன், சந்திரன் அல்லது ஏதேனும் ஒரு கோள் “குறிப்பிட்ட ராசி மண்டலம் வழியாகப் பெயர்ச்சி ஆவது” (எ.கா தனுசு) பற்றிய அறிக்கைகளை அளிக்கிறார்கள். இது முட்டாள்தனமானது. முதலாவதாக, சூரியன், சந்திரன் மற்றும் கோள்கள், வெவ்வேறு விண்மீன் கூட்டங்களைச் சேர்ந்த நட்சத்திரங்களுடன் ஒப்பிடும்போது பூமிக்கு மிக நெருக்கமாக உள்ளன, எனவே அவை “குறிப்பிட்ட ராசி மண்டலம் வழியாகப் பெயர்ச்சி ஆவது” சாத்திய மற்றது. இரண்டாவதாக, ஒரு விண்மீன் கூட்டம் என்பது உண்மையான நட்சத்திரத் தொகுதி அல்ல. பூமியில் இருந்து கணிசமான அளவு வேறுபடுகின்ற தொலைவு களில் அமைந்துள்ள ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நட்சத்திரங்களின் ஒரு தொகுப்பாகும், மேலும் அவை பூமியில் இருந்து பார்க்கும் போது மட்டுமே ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் தோன்றுகின்றன. வேறு இடங்களில் இருந்து காணும் போது அவ்வாறு தோன்றுவதில்லை.

காணாமல் போன விண்கோள்கள் மற்றும் கண்ணுக்குத் தெரியாத கோள்கள்
தொடக்கத்தில், பூமியில் இருந்து தெரிகின்ற புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் சனி ஆகிய 5 கோள்கள் மட்டுமே ஜோதிடத்தில் கணக்கில் எடுக்கப்பட்டன. யுரேனஸ், நெப்டியூன் மற்றும் சிறிய கோளான புளூட்டோ ஆகியவை முறையே 1781, 1846 மற்றும் 1930 ஆம் ஆண்டுகளில் தொலைநோக்கிகளின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டன. ஜோதிடர்கள் தங்கள் கணக்கீட்டில் குறைந்தபட்சம் ஒரு கோளின் தாக்கத்தையேனும் விட்டுவிட நேர்ந்திருக்கும் என்பதால், 1930 ஆண்டிற்கு முன் எழுதப்பட்ட அனைத்து ஜாதகங்களும் தவறாக இருந்திருக்க வேண்டாமா? இப்போதும், பெரும்பாலான ஜோதிடர்கள் யுரேனஸ், நெப்டியூன் மற்றும் புளூட்டோவை கணக்கில் எடுப்பதில்லை.

எப்படி சரியாக இருக்கும்
நமது சூரிய மண்டலத்தில் ஆயிரக்கணக்கான சிறுகோள்களும், நூற்றுக்கணக்கான நட்சத்திரங்களும் டஜன் கணக்கான துணைக்கோள்களும் உள்ளன, ஆனால் ஜோதிடர்கள் அவர்களின் கணக்கீடுகளில் அவற்றைக் கருதுவதில்லை. நமது பால்வீதி விண்மீன் மண்டலத்தில் பல கோடிக்கணக்கிலான பிற விண்மீன் திரள்களும் பல்சார்கள், குவாசர்கள், கருந்துளைகள், கரும்பொருள் மற்றும் கருப்பு ஆற்றல் போன்ற விசித்திரமான பொருட் களும் உள்ளன என்பதை நாம் அறிவோம். இவ்வாறு பல காரணிகளை விட்டுவிடுகின்ற ஒரு அமைப்பு முறை எப்படி சரியானதாக இருக்க முடியும்?
இந்திய ஜோதிடம், ஜோதிட அட்டவணையில் இராகு மற்றும் கேது என்கிற இரண்டு கற்பனைக் கோள்களை இணைத்துள்ளது. தொடக்கத்தில், இராகுவும் கேதுவும் குறிப்பிட்ட நாட்களில் சூரியனையும் சந்திரனையும் விழுங்கி, சூரிய மறைப்பை ஏற்படுத்துகின்ற விண்ணு லகப்பாம்புகளாகக் கருதப்பட்டன. தற்போது, நமது ஜோதிடர்கள் அவற்றை, நமது செயல்களையும் நமது விதியையும் பாதிக்கின்ற ‘கண்ணுக்குத் தெரியாத கோள்கள்’ என்று அழைக்கிறார்கள்,

கருத்தரிக்கும் தருணம் மற்றும்
குழந்தை பிறக்கும் நேரம்
ஒரு நபரின் உடற்கூறுகளும் மற்றும் பண்புகளும், கருத்தரிக்கும் தருணத்தில், அதாவது அவரின் பிறப்புக்கு முன்னரே பெற்றோரிடமிருந்தும் கடத்தப்படுகிற மரபணுக்களால் தீர்மானிக்கப்படுகிறது என்றும், ஒருவரின் பிறப்புக்கு வெகு காலத்திற்குப் பின்னரும்ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கங்கள் அவற்றை மாற்றியமைக்க முடியும் என்றும் உயிரியல் நமக்குக் கற்பிக்கிறது. ஆனால் ஜோதிடத்தின் படி மரபுத்தொடர்பு, சுற்றுச்சூழல் ஆகிய நன்கு நிறுவப்பட்ட அறிவியல் கொள்கைகளைப் புறக்கணித்து, பிறந்த நேர விவரங்களை மட்டுமே தரவு களாகப் பயன்படுத்தி எழுதப்படுகின்ற ஒருவரின் ஜாதகத்துடன், அவரின் உடற் கூறுகளும் ஆளுமைப் பண்புகளும் தொடர்பு படுத்தப்படுகின்றன.

‘நேரம்’ தொடர்பான சிக்கல்கள்
பிறப்பு என்பது ஒரு உடனடி நிகழ்வாக இல்லாமல் ஒரு செயல்முறையாக இருக்கும்போது பிறந்த நேரத்தை ஒருவர் துல்லியமாகத் தீர்மானிப்பது எப்படி? கடிகாரங்களும் துல்லியமாக நேரத்தை அளவிடும் பிற கருவிகளும் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் ஜோதிடர்கள் என்ன செய்தனர்? ஜோதிடர்கள் எந்த நேரத்தைப் பயன்படுத்த வேண்டும் – உள்ளூர் நேரத்தையா (இது ஒவ்வொரு டிகிரி தீர்க்கரேகைக்கும் 4 நிமிடங்கள் மாறுபடும்) அல்லது நாட்டின் நிலையான நேரத்தையா? வினாடிக்கு சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் வரையறுக்கப்பட்ட வேகத்தில் ஒளி பயணிக்கிறது என்று நாம் அறிவோம். ஒளி, சூரியனிலிருந்து பூமிக்கு பயணிப்பதற்கு எட்டு நிமிடங்கள் நேரம் எடுப்பதால் நாம் பார்க்கின்ற சூரியனின் நிலை உண்மையில் எட்டு நிமிடங்களுக்கு முந்தைய நிலையாகும். ஆனால் ஜோதிடர்கள் இந்த அம்சத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. அதைப்போல், இராசி மண்டலங்களிலுள்ள அனைத்து கோள்கள் மற்றும் அனைத்து நட்சத்திரங்களின் உண்மையான மற்றும் பார்க்கக்கூடிய நிலைகளுக்கு இடையே வேறுபாடு உள்ளதால், ஜாதகக் கட்டங்கள் சில நிமிடங்கள் முதல் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரை காலாவதியாகின்றன!

(தொடரும்)

ஜோதிடம் ஏன் பொய்யானது (2)

சிறப்புக் கட்டுரை

கே. அசோக் வர்தன்ஷெட்டி
அய்.ஏ.எஸ். (பணி நிறைவு)

சிறப்புக் கட்டுரை

நேற்றைய (20.1.2025) தொடர்ச்சி…
ஜோதிடம் குறித்து அனுபவ ரீதியிலான ஆய்வு
ஜோதிடர்களுக்கு சந்தேகத்தின் பலனை அளித்து, ஜோதிடத்தின் தாக்கங்கள் இவ்வுலகம் குறித்த நமது தற்போதைய புரிதலின் வெளியே வருகின்றன என்பதை தற்காலிகமாக ஏற்றுக்கொண்டாலும் , “ஜோதிடம் வேலை செய்கிறதா?” என்ற முற்றிலும் அனுபவப்பூர்வமான கேள்வியைக் கேட்க நமக்கு உரிமை உண்டு. அதற்கு “இல்லை” என்பது தான் அழுத்தமான ஒரு பதில் ஆகும்.
பெர்னார்ட் சில்வர்மேன் என்பவர் 2,978 திருமணமான இணையர் மற்றும் 478 மணவிலக்கு பெற்ற இணையர்களின் பதிவுகளை ஆய்வு செய்தார். அவரது ஆய்வில் (1971ஆம் ஆண்டு) சூரிய ராசிகளுக்கும் திருமணம்/மணவிலக்கு முறைகளுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என நிரூபணமாயிற்று.
ஜான் மெக்கெர்வி என்பவர் 16,634 விஞ்ஞானிகள் மற்றும் 6,475 அரசியல்வாதிகளின் பிறந்த நாளை ஆய்வு செய்தார். அவரது ஆய்வில் (1981ஆம் ஆண்டு) சூரிய ராசிகளுக்கும் இந்த இரண்டு தொழில்களுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என நிரூபணமாயிற்று.

ஷான் கார்ல்சன் என்பவர் double-blind study of astrology ஆய்வு குறித்து “நேச்சர்” என்னும் இதழில் (1985ஆம் ஆண்டு) வெளியிட்டார். இது ஜோதிட வல்லுநர்கள் ஜாதகங்களையும், ஆளுமைகளின் சுயவிவரங்களையும் சீரற்ற வாய்ப்பை விட சிறப்பாக பொருத்த முடியாது என்பதை இது நிரூபித்தது.
மிஷெல் காக்வெலின் என்பவர் ஜாதகப் பலன் வேண்டி தன்னிடம் வந்த 500 நபர்களிடம், மிக மோசமான ஒரு தொடர் கொலையாளியின் ஜாதகப் பலனை அனுப்பி வைத்தார். அதிர்ச்சியூட்டும் வகையில், 94% நபர்கள் அவருடைய கணிப்பு தங்களின் குணங்களுடன் ஒத்துப்போவதாகக் கூறினர்!
ரோஜர் கல்வர் மற்றும் பிலிப் இயன்னா ‘ஜோதிடம் – உண்மையா அல்லது பொய்யா’ (1988ஆம் ஆண்டு) என்ற அவர்களின் புத்தகத்தில், 60 தொழில்கள், 35 உடல் பண்புகள், 42 மருத்துவக் கோளாறுகள் மற்றும் 26 ஆளுமைப் பண்புகள் குறித்த புள்ளிவிவர ஆய்வுகள் குறித்து விவாதித்தனர், மேலும் அவை சூரிய அறிகுறிகளால் பாதிக்கப்படவில்லை என்பதைக் கண்டறிந்தனர். அவர்கள் நன்கு புகழ்பெற்ற ஜோதிடர்களின் கணிப்புகளையும் ஜோதிட இதழ்களில் வெளியிடப்பட்ட கணிப்புகளையும் 5 ஆண்டுகளாக கண்காணித்தனர், மேலும் அதில் 11% மட்டுமே வெற்றி விகிதம் இருப்பதைக் கண்டறிந்தனர்.

பீட்டர் ஹார்ட்மேன் மற்றும் ஏனையோர், பிறந்த நாள் மற்றும் ஆளுமையில் / குணநலன்களில் தனிநபர்களின் வேறுபாடு, பொது அறிவு ஆகிய வற்றிற்கு இடையிலான புள்ளி விவரங்களுக்காக மிகப்பெரிய அளவிலான ஆய்வினை (2006ஆம் ஆண்டு) 15,000க்கும் மேற்பட்ட நபர்களிடம் நடத்தினர். ஆய்வு செய்யப்பட்ட ஒவ்வொரு கோணத்திலும் யாதொரு தொடர்பும் காணப்படவில்லை.
ஜெயந்த் நர்லிகர் மற்றும் ஏனையோர், 2013 ஆம் ஆண்டு இந்திய ஜோதிடம் குறித்த ஒரு ஆய்வை நடத்தினர். ஜோதிடர்கள் சிறப்புத் திறன் கொண்ட குழந்தை களின் ஜாதகங்களையும் மனநலம் குன்றிய மாணவர்களின் ஜாதகங்களையும் வேறுபடுத்திப் பார்க்க இயலவில்லை என்பதை நிரூபித்தது.

பேரழிவு நிகழ்வுகள்
ஜான் எஃப். கென்னடி, இந்திரா காந்தி அல்லது பெனாசிர் பூட்டோ ஆகியோரின் படுகொலைகள் மற்றும் 11.9.2011 அன்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல், 26/12/2004 அன்று ஏற்பட்ட சுனாமி அல்லது கோவிட்-19 தொற்றுநோய் போன்ற பேரழிவு நிகழ்வுகள் குறித்த எதிர்பாராத நிகழ்வுகளை ஜோதிடர்கள் எப்போதும் கணிக்கத் தவறிவிட்டனர். சிலர் நிகழ்வு நடந்த பிறகு ‘சரியான’ கணிப்புகள் பற்றிய புனையப்பட்ட கதைகளைக் கொண்டு வந்தனர்!
ஜோதிடத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்துவது ‘போலிகள்’ என்றும், ‘உண்மையான’ ஜோதிடர்கள் பொதுவாக துல்லியமான ஜாதகங்களை எழுத முடியும் என்றும் சிலர் கூறுகிறார்கள். ஆனால் அடிப்படையில் தவறான அனுமானங்களை அடிப்படையாகக் கொண்ட மற்றும் அனைத்து அனுபவ சோதனைகளிலும் தோல்வியடைந்த ஒரு துறையில் ‘உண்மையான’ நிபுணர்கள் எப்படி இருக்க முடியும்?

ஜோதிடத்தின் உளவியல் ரீதியிலான ஆதாரம்
16-ஆம் நூற்றாண்டில் போப் பாண்டவரின் ஆலோசகரான பிரான்செஸ்கோ குய்சியார்டினி சரியாக கணித்தார்: “நூறு பொய்களுக்கு ஒரு உண்மையுடன் சொன்னால் ஜோதிடர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், மற்ற வர்கள் நூறு உண்மைகளுடன் ஒரு பொய்யைச் சொன்னால் அவர்களின் நம்பகத்தன்மையை இழந்து விடு கிறார்கள் . “எல்லா குறைபாடுகள் இருந்தும், ஜோதிடம் ஏன் பொது மக்களை கவர்ந்திழுக்கிறது? அதற்கு உளவியலாளர்கள் நான்கு காரணங்களை அடையாளம் கண்டறிந்துள்ளனர்.

ஃபாரெர் விளைவு (Forer effect)
பொதுவான அறிக்கைகள் மற்றும் தெளிவற்ற கணிப்புகளை தனித்துவமாகத் துல்லியமாகவும், நமக்காகவே வடிவமைக்கப்பட்டதாகவும் உணரும் புகழ்பெற்ற மனிதப் போக்கை இது விவரிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு ஜோதிடர் “உங்களுக்கு ஏதோ கெட்ட நிகழ்வு நடக்கப் போகிறது” என்பது போன்ற தெளிவற்ற அறிக்கையை அளிக்கலாம். நீங்கள் பணத்தை இழக்க நேர்ந்தால் அல்லது நோய்வாய்ப்பட்டால் அல்லது பதவி உயர்வு கிடைப்பதற்கு தாமதம் ஏற்படும் நேர்வில் , இந்தக் கூற்றை உங்களது குறிப்பிட்ட நேர்விற்குப் பொருத்தமாக விளக்கிக் கூறி, அந்த நிகழ்வை ‘கணித்ததற்காக’ ஜோதிடருக்கு ‘பாராட்டை’ தெரிவிப்பீர்கள்!
ஜோதிடர்கள் பொதுவாக பலதரப்பட்ட மக்களிடம் கூறும் மற்ற தெளிவற்ற அறிக்கைகள் பின்வருபவையாகும்: “உங்களுக்கு நல்லது நடக்கப் போகிறது”, “உங்களுக்குத் தகுதியான பாராட்டு கிடைக்கவில்லை”, “உங்கள் உள் வட்டத்தில் உள்ள சிலர் உங்களுக்கு விரோதமாக இருக்கிறார்கள்” போன்றவையாகும். மேலும் புத்திசாலி ஜோதிடர்கள் குறிப்பிட்ட கணிப்புகளைச் செய்வதைத் தவிர்க் கிறார்கள், ஆனால் தெளிவற்ற, பொதுவான அறிக் கைகளை உருவாக்கி, Forer விளைவு அதன் பணியைச் செய்யட்டும்.

முன்முடிபுகளின் சார்புநிலை
நம்முள் ஏற்கெனவே நிலைபெற்றுள்ள நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்துள்ள தகவல்களைத் தேடுவதும், தகவல்களுக்கு விளக்கமளிப்பதும் மனித இயல்பாகும். நீங்கள் ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்டவராக இருந்தால், உங்களைப் பற்றி ஜோதிடம் கூறிய மிகச் சில சரியான கணிப்புகளை மட்டுமே நினைவில் வைத்திருப்பீர்கள், எண்ணற்ற தவறான கணிப்புகளையும் பொருத்தமற்ற கணிப்புகளையும் மறந்துவிடுவீர்கள் அல்லது அவற்றை பொருட்படுத்தாமல் விட்டுவிடுவீர்கள். நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு மனித நினைவின் இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட தன்மை குறித்து சர் பிரான்சிஸ் பேகன் கருத்து தெரிவித்தார்: “ஜோதிடம், கனவுகள், சகுனங்கள், தெய்வீக தீர்ப்புகள் அல்லது இதுபோன்ற அனைத்து மூடநம்பிக்கைகளின் வழி இதுதான், அங்கு மனிதர்கள், அத்தகைய மாயைகளில் மகிழ்ச்சியடைந்து, அவை நிறைவேறும் நிகழ்வுகளைக் குறிக்கிறார்கள், ஆனால் அவை எங்கு தோல்வியடைகின்றன, இது பெரும்பாலும் நடந்தாலும், அவற்றைப் புறக்கணித்து கடந்து செல்கிறார்கள்.”

தனிப்பட்ட சம்பவங்கள் சார்ந்த சிந்தனை (Anecdotal thinking)
ஜோதிடத்தின் பிரபலத்திற்கு மற்றொரு காரணம், நிகழ்வுகள் பற்றிய சிந்தனையில் மனிதர்களின் நாட்டமும், புள்ளிவிவர சிந்தனையில் நமக்கு இருக்கும் சவுகரியமும் ஆகும். வியக்கத்தக்க வகையில் துல்லியமான கணிப்பைச் செய்த ஒரு ஜோதிடரைப் பற்றி யாராவது ஒருவர் சொல்வதை நீங்கள் அடிக்கடி கேட்கிறீர்கள். அறிவியல் அத்தகைய நிகழ்வுகளை ஏற்றுக்கொள்வதில்லை, ஏனெனில் அது ஆங்கிலத்தில் கூறப்படும் “செர்ரி-பிக்கிங் டேட்டா”வுக்கு சமம். செர்ரி- பிக்கிங் என்பது ஒருவரின் கருத்தை எதிர்க்கும் பிற தரவைப் புறக்கணித்து, ஒருவரின் நிலைப்பாட்டை ஆதரிக்க தரவைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதாகும். சாதகமான நிகழ்வுகள் மற்றும் பாதகமான நிகழ்வுகளை கணக்கில் எடுத்துக்கொள்ளும் புள்ளிவிவர ஆதாரங்களை அறிவியல் கோருகிறது. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ‘வெற்றிகள்’ (சரியான ஜோதிட கணிப்புகள்) வெறும் வாய்ப்பு காரணமாக ஏற்படக்கூடும் என்பதால், சிக்கலைத் தீர்ப்பதற்கான ஒரே வழி, ஒரு சோதனைக் குழு (ஜோதிடர்கள்) மற்றும் ஒரு கட்டுப்பாட்டுக் குழு (வெறும் யூகிக்கக் கேட்கப்படும் சாதாரண மக்கள்) மூலம் அதிக எண்ணிக்கையிலான புள்ளிவிவர சோதனைகளை நடத்தி, ஜோதிடர்கள் வாய்ப்புகளை விட கணிசமாக அதிக நிகழ்தகவுகளில் கணிக்க முடியுமா என்று பார்ப்பதுதான். இதுபோன்ற அனைத்து புள்ளிவிவர சோதனைகளும் ஜோதிடர்களால் உண்மையில் வாய்ப்பு விகிதங்களை விட சிறப்பாக எதையும் கணிக்க முடியாது என்பதைக் காட்டுகின்றன!

தவறுக்குப் புறக்காரணிகள் மீது பழிபோடுதல்
ஜோதிடம் பிரபலமானது, ஏனெனில் அது மக்கள் தங்கள் தோல்விகளுக்கு தனிப்பட்ட பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக அண்ட சக்திகளைக் காரணம் காட்ட அனுமதிக்கிறது. கிங்லியரில் வில்லியம் ஷேக்ஸ்பியர் கூறுவது போல்: “இது உலகின் சிறந்த முட்டாள்தனம், நாம் நல் வாய்ப்பில் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது – பெரும்பாலும் நமது சொந்த நடத்தை யின் அதிகப்படியான தன்மை – நமது பேரழிவுகளுக்கு சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை நாம் குற்றவாளி களாக்குகிறோம்; தேவையின் பேரில் நாம் வில்லன்கள் போல; பரலோக நிர்ப்பந்தத்தால் முட்டாள்கள்; கோள்களின் ஆதிக்கத்தால் திருடர்கள், திருடர்கள் மற்றும் துரோகிகள்; கோள்களின் செல்வாக்கின் கட்டாய கீழ்ப்படிதலால் குடிகாரர்கள், பொய்யர்கள் மற்றும் விபச்சாரிகள்; நாம் தீயவர்களாக இருப்பதெல்லாம் தெய்வீகத் திணிப்பால் – மனிதன் தனது ஆடு போன்ற மனநிலையை ஒரு நட்சத்திரத்தின் மீது சுமத்தும் ஒரு பாராட்டத்தக்க ஏய்ப்பு!”

ஏமாற்றுக்காரர்களின் போலித்தனம்
1975 ஆம் ஆண்டில், 19 நோபல் பரிசு வென்றவர்கள் (எஸ். சந்திரசேகர், சர் பிரான்சிஸ் கிரிக், சர் பீட்டர் மேடவர், பால் சாமுவேல்சன், லினஸ் பாலிங் உள்ளிட்டோர்) உட்பட உலகின் 186 முன்னணி விஞ்ஞானிகள் ‘தி ஹ்யூமனிஸ்ட்’ இதழில் ஜோதிடத்திற்கான தங்கள் ஆட்சேபனைகளை கோடிட்டுக் காட்டி ஒரு திறந்த கடிதத்தை வெளியிட்டனர். அவர்கள் கூறியதாவது: “பரவலான அறிவொளி மற்றும் கல்வி நிலவும் இந்த நாளில், மந்திரம் மற்றும் மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கைகளை மறுப்பது தேவையற்றது என்று ஒருவர் கற்பனை செய்வார். இருப்பினும், ஜோதிடத்தை ஏற்றுக்கொள்வது நவீன சமூகத்தில் பரவியுள்ளது. ஊடகங்கள் மற்றும் புகழ்பெற்ற செய்தித்தாள்கள், பத்திரிகைகள் மற்றும் புத்தக வெளியீட்டாளர்கள் ஜோதிட விளக்கப்படங்கள், கணிப்புகள் மற்றும் ஜாதகங்களை தொடர்ந்து விமர்சனமின்றி பரப்புவதால் நாங்கள் குறிப்பாக கலக்கமடைகிறோம். இது பகுத்தறிவின்மை மற்றும் தெளிவற்ற தன்மையின் வளர்ச்சிக்கு மட்டுமே பங்களிக்கும்.

ஜோதிட ஏமாற்றுக்காரர்களின் போலித்தனமான கூற்றுக்களை நேரடியாகவும் வலுவாகவும் சவால் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நாங்கள் நம்புகிறோம்.”
இந்தியாவில், அறிவாற்றல் மிக்கவர்கள் ஜோதிடத்தின் மீதான வெறுப்புணர்வை பெரும்பாலும் வெளிப்படுத்துவதில்லை. மேலும், ஜோதிடர்களுடன் ஜோதிடம் குறித்து வாதம் செய்யவும் அவர்கள் விரும்புவதில்லை. இது தவறாகும். ஏனெனில், நாள்தோறும் ஜோதிடத்திற்கு ஆதரவான பரப்புரை களையும் மிக அரிதாக ஜோதிடத்திற்கு எதிரான தகவல்களையும் கேட்கக்கூடிய கற்றோர் உள்ளிட்ட பாமர மக்கள் ஜோதிடத்தில் ஏதேனும் உண்மை இருக்கக்கூடும் என இதனால் நம்புவதற்கான வாய்ப்புண்டு. “அறிவுள்ளவர்கள் எதுவும் செய்யா விட்டால், முட்டாள்தனம் வெற்றி பெறும்.” என்ற எட்மண்ட் பர்க்கின் கூற்று இங்கே நினைவுகூரத் தக்கதாகும்.

முட்டாள்தனத்தின் ஆதிக்கம்
கெட்ட வாய்ப்பாக, இந்தியாவில் முட்டாள்தனம் வாகை சூடியுள்ளது. 2001 ஆம் ஆண்டில், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) இந்தியப் பல்கலைக்கழகங்களில் “வேத ஜோதிடம்” படிப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு அளித்து நம்மைப் பின்னோக்கி அழைத்துச் செல்கிற முடிவை எடுத்தது. பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்த முடிவை 2004ஆம் ஆண்டு மாண்பமை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. 2011 ஆம் ஆண்டில், மும்பை உயர் நீதிமன்றம் ஜோதிடத்தை “காலத்தால் அழியாத அறிவியல்” (“time-tested science) என்று அழைத்தது. 2019 ஆம் ஆண்டில், ஒன்றிய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஜோதிடத்தை “அறிவியலனைத்திலும் சிறந்தது ஜோதிடம்” என்று அறிவித்தார். அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், ஆய்வுத் திறன் மற்றும் சீர்திருத்த உணர்வு ஆகியவற்றை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என (பிரிவு 51A) அரசமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ள ஒரு நாட்டில்தான் இவை அனைத்தும் நிகழ்கின்றன.

இந்த பரிதாபகரமான நிலைக்கு இந்தியாவின் அறிவுஜீவிகளை, குறிப்பாக விஞ்ஞானிகளை நான் குறை கூறுவேன். ஜோதிடம் மற்றும் பிற மூடநம்பிக்கைகளை நேரடியாகவும் வலுவாகவும் சவால் செய்யும் பொறுப்பை அவர்கள் நிறைவேற்றத் தவறிவிட்டனர். அமெரிக்க எழுத்தாளர் எச்.எல்.மென்கன் கூறியது போல்: “மூடநம்பிக்கையை கையாள்வதற்கான வழி, அதற்கு மரியாதை செலுத்துவது அல்ல, மாறாக அதை எல்லா ஆயுதங்களாலும் சமாளித்து, அதன் மூலம் அதை முறியடித்து, அதை முடமாக்கி, அதை என்றென்றும் இழிவானதாகவும் அபத்தமாகவும் மாற்றுவதாகும். மூடநம்பிக்கை, ஒருவேளை, நன்கு அறிய வேண்டியவர்களால் போற்றப்படுகிறதா? பின்னர் அவர்களின் முட்டாள்தனம் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டு, அவர்கள் வெட்கத்தில் தலையை மறைத்துக்கொண்டு, அதிலிருந்து தப்பி ஓடும் வரை அதன் அனைத்து அருவருப்புகளிலும் அங்கு காட்சிப் படுத்தப்பட வேண்டும்.”

தமிழ்ச் சமுதாயத்தில் நிகழும் சமூக அநீதிகளுக்கு எதிரான மற்றும் பகுத்தறிவிற்கும் மனித நேயத்திற்கும் ஆதரவான தந்தை பெரியாரின் போராட்டத்தில் இந்த அணுகுமுறையை அவர் பின்பற்றினார். இந்திய அறிஞர்கள் தந்தை பெரியாரின் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என நான் விழைகிறேன். நாட்டில் மூடநம்பிக்கைகளுக்கும் பகுத்தறிவின்மைக்கும் எதிராக உருவாகிவரும் பேரலைகளைத் தடுக்க வேண்டிய கடமை இந்திய அறிஞர் பெருமக்களுக்கு உள்ளது. ஜோதிடம் மற்றும் பிற மூடநம்பிக்கைகள் மற்றும் மாய அறிவியலை அறிஞர் பெருமக்கள் நேரடியாக எதிர்கொண்டு அத்தகைய மூடபழக்கவழக்கங்களின் போலித் திரையைக் கிழித்தெறிந்து அவற்றின் உண்மையான தோற்றத்தை வெளி உலகிற்குக் கொண்டு வர வேண்டும்.

நம்முள் ஏற்கெனவே நிலைபெற்றுள்ள நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்துள்ள தகவல்களைத் தேடுவதும், தகவல்களுக்கு விளக்கமளிப்பதும் மனித இயல்பாகும். நீங்கள் ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்டவராக இருந்தால், உங்களைப் பற்றி ஜோதிடம் கூறிய மிகச் சில சரியான கணிப்புகளை மட்டுமே நினைவில் வைத்திருப்பீர்கள், எண்ணற்ற தவறான கணிப்புகளையும் பொருத்தமற்ற கணிப்புகளையும் மறந்துவிடுவீர்கள் அல்லது அவற்றை பொருட்படுத்தாமல் விட்டுவிடுவீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக