பக்கங்கள்

சனி, 21 பிப்ரவரி, 2015

தொழில் முனைவோர் நம்பக் கூடாது, ஜோசியத்தை!


பிற இதழிலிருந்து....
தொழில் முனைவோர் நம்பக் கூடாது, ஜோசியத்தை!

யார் யாரைப் பார்க்க வேண் டுமோ, அவர்களை எல்லாம் பார்த் தாகி விட்டது. என்னென்ன செய்திகள் தேவையோ, அவற்றை எல்லாம் சேகரித் தாகி விட்டது. முழுமையாக இல்லா விட்டாலும் -_ இயலா விட்டாலும் _ நினைத்ததில் மனநிறைவு தருகின்ற அளவிற்குத் தகவல்களைத் திரட்டி விட்டோம் என்றால், அவற்றைப் பகுத்தும் தொகுத்தும் பார்த்து, சாதக பாதகங்களை எல்லாம் சரியான கோணங்களில் அலசி ஆராய வேண் டும். இறுதியாக ஓர் உறுதியான முடிவை மேற்கொள்ள வேண்டும்.
நாம் தொழிலில் இறங்கப் போகி றோம் என்றால் நாம்தான் உறுதியாக இருக்க வேண்டும்; உறுதியுடன் இறங்க வேண்டும். அதை விடுத்து  நான் இந்தத் தொழில் செய்ய வேண்டும் என்று என் தகப்பனார் உறுதியாக இருக்கிறார் என்றோ, என் மாமா பிடிவாதமாக இருக்கிறார் என்றோ ஓர் இளைஞர் சொல்லுவார் என்றால், அவரது மனதில் பலவீனத்தின் நிழல் விழுந்து விட்டது என்றுதான் பொருள். அவ ருக்கு முழுமையாக ஈடுபாடு இல்லை என்றுதான் பொருள்.
நம் கச்சேரியில் தகப்பனார், மாமனார், நண்பர்கள், சகோதரர்கள்.. இவர்கள் எல்லாம் பக்க வாத்தியக் காரர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். நாம்தான் முழுக்க கதாநாயகர்கள் என்பதைத் தொழில் முனைப்பாளர்கள் உணர வேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு நடை பெற்ற ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வரு கிறது. பொறியியல் துறையில் பட்டம் பெற்ற ஒரு இளைஞர் தொழில் செய்வது தொடர்பாக பலரையும் பல நாட்கள் அணுகித் தேவையான செய்தி களை எல்லாம் திரட்டி வைத்திருந்தார்.
வாங்கப்  போகின்ற பொருள்களைப் பற்றியும், தயாரிக்கப் போகின்ற பொருள்களைப் பற்றியும், ஆட்கள் நிர்வாகம் பற்றியும், விற்பனைப் பிரிவு, வங்கிகளில் கடன் பெறுதல் போன்ற எல்லா விவரங்களையும் சேகரித்து நன்றாக  ஆராய்ந்து தொழில் தொடங்குவதற்குத் தயாராக இருந்தார்.
இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு அவரைச் சந்தித்தபோது, ஆவ லுடன் கேட்டேன். தொழில் தொடங்கி விட்டீர்களா? என்று அவருடைய பதில் என்னைத் திகைக்க வைத்தது. என்னுடைய சித்தப்பா ஜாதகம் பார்த்துவிட்டு, நான் இன்னும் மூன்று ஆண்டு கழித்துத்தான் தொழில் செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டார். அதனால், ஏதாவது ஒரு வேலையில் சேரப் போகிறேன் என்றார்.
நாள் பார்த்து நேரம் பார்த்துத் திருமண ஏற்பாடுகளை எல்லாம் செய்து விட்டு, மணவறைக்கு வந்து சகல வாத்தியமும் ஒலிக்கப் போகும் சமயத்தில் மாப்பிள்ளை, நான் மூன்று ஆண்டு கழித்துத் திருமணம் செய்து கொள்கிறேன். இதே பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறேன். இப் போது வேண்டாம் என்று பின் வாங் கியது மாதிரி இருந்தது அவருடைய பதில்.
திருமணம் என்றதும், இன்னொரு நிகழ்ச்சிகூட நினைவுக்கு வருகிறது. ஒரு பட்டதாரி இளைஞர், பத்தாயிரம் ரூபாய் மாதச் சம்பளத்தில் இருந்தவர், தன்னை விட வசதி மிக்க பெரிய இடத்துப் பெண்ணைக் காதலித்துக் கொண்டிருந் தார். முதலில் இந்தத்  தாழ்வைப் போக் கினால்தான் தன் லட்சியத்தை விரை வில் அடையச் சிறந்தவழி ஏதாவது தொழில் துவங்கு வதுதான் நல்லது என்ற முடிவுக்கு வந்து தீவிரமாக அலைந்து கொண்டு இருந் தார்.எப்போது பார்த்தாலும் ஃபைலும், கையுமாகக் காட்சியளித்துக் கொண் டிருந்தார்.
சில மாதங்கள் சென்ற பின் தற் செயலாக அவரை ரயில் நிலையத்தில் சந்தித்தேன். மிகவும் உற்சாகமாகக் காணப் பட்ட அவர் கூறினார். தொழில் துவங் கறது எல்லாம் நமக்குச் சரிபட்டு வராதுங்க... அருமையான வேலை கிடைச்சிருக்குது. பதினைந்து ஆயிரம் ரூபாய் சம்பளம். நாளைக்கு டூட்டி ஜாயின் பண்ணப் போறேன் என்றார்.
தொழில் துவங்கி, நாயாக அலைந்து, பிறகு மனிதனாக மாறுவதற்கு மூன்று, நான்கு ஆண்டுகள் ஆகலாம். (அதற்கு உத்திரவாதம் இல்லை) அதுவரை தன் காதல் நீடிக்குமா என்று அவர் சந்தேகப்பட்டிருக்கலாம். இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கையில், இரயில் நகர ஆரம்பித்தது. அந்த இளைஞர் ஓடிப் போய் ஏறிக் கொண்டார்.
தொழில் தொடங்கப் போகிற நேரத்தில், இப்படிக் கடைசி நிமிடத்தில் முடிவை மாற்றிக் கொண்ட எத் தனையோ இளைஞர்கள் இருக்கிறார்கள்; பாதி வழியில் முடிவை மாற்றத் துடிக்கின்ற சிலரையும் காணலாம்.
தொழில் தொடங்கவும் தொடர்ந்து நடத்தவும், பொறுமை, மன உறுதி, கடின உழைப்பு, சமயோசிதம் இவை தேவைப்படுகின்றன. இவற்றில் தலையாயது மன உறுதி.
ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களுள் தொழில்முனைப்பாளர் தம் மேஜைமீது எழுதி வைத்திருக்க வேண்டிய குறள் இதோ:
வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற -   (குறள் 661)
--_
கே ஜெகதீசன்
நன்றி: வளர்தொழில் பிப்ரவரி 2015
-விடுதலை ஞயிறு மலர்,21.2.15,பக்கம்-8

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக