பக்கங்கள்

திங்கள், 24 பிப்ரவரி, 2025

ஜோதிடம் ஏன் பொய்யானது


விடுதலை நாளேடு
கட்டுரை

 கே.அசோக் வர்தன்ஷெட்டி

அய்.ஏ.எஸ். (பணி நிறைவு)

நட்சத்திரம் பார்த்தல், ஜோதிடம் பார்த்தல், நல்வாய்ப்பு அல்லது கெட்ட வாய்ப்பு போன்ற நிகழ்வுகளை அறிகுறிகள் கொண்டு கணித்தல், நன்மை அல்லது தீமைகளை முன்கணித்தல் ஆகிய அனைத்தும் தடை செய்யப்பட வேண்டியவை. – புத்தர்
நட்சத்திரங்களை பற்றி தொடர்ந்து ஆராயும் குழந்தைத்தனமான மனிதனிடமிருந்து செல்வம் விலகிச் செல்லும். – சாணக்கியர்
ஜோதிடம் மற்றும் இத்தகைய போலி விடயங்கள் யாவும் பலவீனமான மனதின் அறிகுறிகள் என்பதை நீங்கள் அறிந்துக்கொள்வீர்கள்; அத்தகைய எண்ணங்கள் நமது மனதில் தோன்றும்போது, நாம் ஒரு மருத்துவருடன் கலந்தாலோசித்து, ஆரோக்கியமான உணவை உண்டு, நன்கு ஓய்வெடுக்க வேண்டும்.
– விவேகானந்தர்

பெரும் பாதிப்பு
பகுத்தறிவு மற்றும் மனிதநேயத்தின் தீவிரப் போராளியான தந்தைபெரியார், எளிய மக்களின் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்ற பல்வேறு மூடநம்பிக்கைகளை அகற்ற பாடுபட்டார். அவர் பல சாதனைகள் செய்திருந்தபோதிலும், தமிழ் சமூகத்தின் கல்வியறிவு பெற்ற பிரிவினரிடையேயும் ஜோதிடம், நாடிஜோதிடம், வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஏனைய மூடநம்பிக்கைகளின் மீதான ஆர்வம் ஒரு நிலையான வளர்ச்சியின் கவலைக்குரிய அறிகுறிகள் உள்ளன. ஆம், நாட்டின் பிற பகுதிகளில் நிலைமை இதைவிட மிகவும் மோசமாக உள்ளது.
விமர்சன சிந்தனையை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, நமது கல்வி முறையானது, எழுத்தறிவில்லாத ஏமாளியை எழுத்தறிவு கொண்ட ஏமாளியாகவும், படிக்காத மூடநம்பிக்கை கொண்டவனைப் படித்த மூடநம்பிக்கையாளராகவும் மாற்றுவதாகத் தெரிகிறது! முரண்பாடாக, தொலைக்காட்சி மற்றும் இணையம் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் மூடநம்பிக்கைகளின் விரைவான மற்றும் பரந்த பரவலுக்கு தளங்களை வழங்கி அவற்றின் பரவலை எளிதாக்குகின்றன.

பகுத்தறிவின்மை
ஜோதிடம் என்பது அனைத்து மூடநம்பிக்கைகளிலும் மிகவும் பிரபலமானது. மேலும் இது சமூகத்தில் பகுத்தறிவின்மையையும் தெளிவின்மையையும் அளவிடக்கூடிய ஒரு கருவியாகவும் விளங்குகின்றது. காலங்காலமாக அறிவார்ந்த மக்கள் அனைவரும் ஜோதிடத்தை அலட்சியமாகவே கருதினர். ஆயினும், கோடிக்கணக்கான இந்தியர்கள் ஜோதிடத்தின் ஆலோசனையின்படி தங்களின் அன்றாட செயல்பாடு களை அதாவது – பயணம் மேற்கொள்ளுதல், திருமணம் நடத்துதல், மத நிகழ்வுகள், வணிக முடிவுகள், திட்டங்களை தொடங்குதல், தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தல், அறுவைச் சிகிச்சைகளை செய்துக்கொள்ள திட்டமிடல் போன்றவற்றை மேற்கொள்கொள்கின்றனர்.

போலி அறிவியல்
சிலர் நம்புவது போல் ஜோதிடம் என்பது பிறருக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத ஒரு விளையாட்டு அல்ல. சோதிடர்கள் மக்களின் பலவீனங்களை பயன் படுத்திக்கொண்டு, அப்பாவி மக்களின் பணத்தை சுரண்டுகிறார்கள். ஜாதக பொருத்தமின்மையின் காரண மாக எண்ணற்ற திருமணங்கள் நிராகரிக்கப்படுகின்றன. கற்பனை யான “மாங்கல்ய தோஷம்” காரண மாக பல பெண்கள் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள். 2007 ஆம் ஆண்டு, பாலிவுட் கதாநாயகி அய்ஸ்வர்யா ராய் தனது மாங்கல்ய தோஷத்தினால் ஏற்படும் தீய விளைவுகளைத் தடுப்பதற்காக முதலில் வாழை மரத்தை ‘திருமணம்’ செய்துக்கொண்டு, பின்னர் அபிஷேக் பச்சனை மணந்த அபத்தமான காட்சியை இந்தியா கண்டது!
இக்கட்டுரையில், ஜோதிடம் போலி அறிவியலாக விளங்குவதற்கான காராணத்தையும் அது போலியாக உள்ளபோதும், ஏன் பலர் அதை நம்புகின்றனர் என்பதையும் நான் விளக்க முற்படுகிறேன்.

ஜோதிடத்திற்கு எதிரான அறிவியல் வாதங்கள்
ஒரு மனிதன் பிறக்கும் போது சூரியன், சந்திரன் மற்றும் கோள்களின் (12 ராசிகள்) நிலைகளிலிருந்து அந்த மனிதனின் குணநலன்கள் மற்றும் விதியையும் ஜாதகம் எனப்படும் விளக்கப்படத்தைப் பயன்படுத்தி கண்டறியும் கோட்பாட்டினை அடிப்படையாக கொண்டது ஜோதிடமாகும். ஜாதகம் தனிநபர்களுக்கு மட்டுமன்று. நாடுகள், நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், விளையாட்டு அணிகள் மற்றும் வீட்டு செல்லப்பிராணிகளுக்கும் கூட எழுதப்படுகிறது.
ஜோதிடம் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு, சூரிய குடும்பம் மற்றும் கண்ணுக்குப் புலப்படும் நட்சத்திரங்ககள் பற்றி அறியப்பட்டவற்றின் அடிப்படையில் உருவாக்கப் பட்டதாகும். அப்போதிருந்து, பிரபஞ்சத்தைப் பற்றிய நமது அறிவு வெகுவாக விரிவடைந்ததுள்ளது, ஆனால் ஜோதிடம் அதே நிலையிலேயே தேக்கமடைந்து உள்ளது. ஜோதிடத்தில் ஏற்பட்ட புதிய கண்டுபிடிப்புகள் அல்லது ஜோதிடத்தின் வளர்ச்சி குறித்து நீங்கள் கடைசியாக எப்போது அறிந்துக் கொண்டீர்கள்? மேலும், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், ஜோதிடர்கள் தங்கள் கூற்றுகளுக்கான அடிப்படைக் கோட்பாடுகளில் இன்னும் ஒருமித்த கருத்தை எட்டவில்லை, மேலும் கோள்களின் நிலைகள் நமது குண நலன்கள் மற்றும் விதிகளின் மீது எவ்வாறு தாக்கம் ஏற்படுத்துகின்றன என்பது குறித்து அவர்களால் விளக்கமளிக்க முடியவில்லை.

தவறான அடித்தளங்கள்
ஜோதிடர்கள், நீண்டகாலமாக மதிப்பிழந்த கோப்பர்நிக்கஸ் காலத்திற்கு முந்தைய, பிரபஞ்சத்தின் புவி மய்ய மாதிரியின் அடிப்படையில் அவர்களின் வியாபாரத்தை நடத்துகிறார்கள்! புகழ்பெற்ற இயற் பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் 2001ஆம் ஆண்டில் புதுடில்லியில் ஒரு விரிவுரையில் கூறியது போல்: “பூமி பிரபஞ்சத்தின் மய்யம் அல்ல என்று கண்டுபிடிக்கப்பட்ட போது, ஜோதிடம் சாத்தியமற்றதாகிவிட்டது.”
ஜோதிடம் என்பது ஒரு பொருள் ஒப்புமை வாயிலான விளைவைக் கொண்டிருக்கிறது என்கிற தவறான கருத்தை அடிப்படையாகக் கொண்டது. உதாரணமாக, செவ்வாய் கோள் சிவப்பு நிறமாகத் தோன்றுவதாலும் சிவப்பு என்பது இரத்தத்தின் நிறம் என்பதாலும் அது ‘போர்’ என்பதைக் குறிக்கிறது. ரிஷபம் என்னும் விண்மீன் கூட்டம் காளையை ஒத்திருப்பதாகக் கருதப்படுவதால், அது ‘வலிமையை’ குறிக்கிறது. ஜோதிடம் தனிப்பட்ட கோள்கள் மற்றும் விண்மீன்களுடன் தொடர்புடைய ‘குணங்களை’ ‘குறிப்பிட்ட ராசிகளின் கீழ் பிறந்தவர்களுக்கு’ ஒதுக்குகின்ற ஒரு அபத்தமான முறை இது!

முட்டாள்தனம்
ஜோதிடர்கள் அவ்வப்போது சூரியன், சந்திரன் அல்லது ஏதேனும் ஒரு கோள் “குறிப்பிட்ட ராசி மண்டலம் வழியாகப் பெயர்ச்சி ஆவது” (எ.கா தனுசு) பற்றிய அறிக்கைகளை அளிக்கிறார்கள். இது முட்டாள்தனமானது. முதலாவதாக, சூரியன், சந்திரன் மற்றும் கோள்கள், வெவ்வேறு விண்மீன் கூட்டங்களைச் சேர்ந்த நட்சத்திரங்களுடன் ஒப்பிடும்போது பூமிக்கு மிக நெருக்கமாக உள்ளன, எனவே அவை “குறிப்பிட்ட ராசி மண்டலம் வழியாகப் பெயர்ச்சி ஆவது” சாத்திய மற்றது. இரண்டாவதாக, ஒரு விண்மீன் கூட்டம் என்பது உண்மையான நட்சத்திரத் தொகுதி அல்ல. பூமியில் இருந்து கணிசமான அளவு வேறுபடுகின்ற தொலைவு களில் அமைந்துள்ள ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நட்சத்திரங்களின் ஒரு தொகுப்பாகும், மேலும் அவை பூமியில் இருந்து பார்க்கும் போது மட்டுமே ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் தோன்றுகின்றன. வேறு இடங்களில் இருந்து காணும் போது அவ்வாறு தோன்றுவதில்லை.

காணாமல் போன விண்கோள்கள் மற்றும் கண்ணுக்குத் தெரியாத கோள்கள்
தொடக்கத்தில், பூமியில் இருந்து தெரிகின்ற புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் சனி ஆகிய 5 கோள்கள் மட்டுமே ஜோதிடத்தில் கணக்கில் எடுக்கப்பட்டன. யுரேனஸ், நெப்டியூன் மற்றும் சிறிய கோளான புளூட்டோ ஆகியவை முறையே 1781, 1846 மற்றும் 1930 ஆம் ஆண்டுகளில் தொலைநோக்கிகளின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டன. ஜோதிடர்கள் தங்கள் கணக்கீட்டில் குறைந்தபட்சம் ஒரு கோளின் தாக்கத்தையேனும் விட்டுவிட நேர்ந்திருக்கும் என்பதால், 1930 ஆண்டிற்கு முன் எழுதப்பட்ட அனைத்து ஜாதகங்களும் தவறாக இருந்திருக்க வேண்டாமா? இப்போதும், பெரும்பாலான ஜோதிடர்கள் யுரேனஸ், நெப்டியூன் மற்றும் புளூட்டோவை கணக்கில் எடுப்பதில்லை.

எப்படி சரியாக இருக்கும்
நமது சூரிய மண்டலத்தில் ஆயிரக்கணக்கான சிறுகோள்களும், நூற்றுக்கணக்கான நட்சத்திரங்களும் டஜன் கணக்கான துணைக்கோள்களும் உள்ளன, ஆனால் ஜோதிடர்கள் அவர்களின் கணக்கீடுகளில் அவற்றைக் கருதுவதில்லை. நமது பால்வீதி விண்மீன் மண்டலத்தில் பல கோடிக்கணக்கிலான பிற விண்மீன் திரள்களும் பல்சார்கள், குவாசர்கள், கருந்துளைகள், கரும்பொருள் மற்றும் கருப்பு ஆற்றல் போன்ற விசித்திரமான பொருட் களும் உள்ளன என்பதை நாம் அறிவோம். இவ்வாறு பல காரணிகளை விட்டுவிடுகின்ற ஒரு அமைப்பு முறை எப்படி சரியானதாக இருக்க முடியும்?
இந்திய ஜோதிடம், ஜோதிட அட்டவணையில் இராகு மற்றும் கேது என்கிற இரண்டு கற்பனைக் கோள்களை இணைத்துள்ளது. தொடக்கத்தில், இராகுவும் கேதுவும் குறிப்பிட்ட நாட்களில் சூரியனையும் சந்திரனையும் விழுங்கி, சூரிய மறைப்பை ஏற்படுத்துகின்ற விண்ணு லகப்பாம்புகளாகக் கருதப்பட்டன. தற்போது, நமது ஜோதிடர்கள் அவற்றை, நமது செயல்களையும் நமது விதியையும் பாதிக்கின்ற ‘கண்ணுக்குத் தெரியாத கோள்கள்’ என்று அழைக்கிறார்கள்,

கருத்தரிக்கும் தருணம் மற்றும்
குழந்தை பிறக்கும் நேரம்
ஒரு நபரின் உடற்கூறுகளும் மற்றும் பண்புகளும், கருத்தரிக்கும் தருணத்தில், அதாவது அவரின் பிறப்புக்கு முன்னரே பெற்றோரிடமிருந்தும் கடத்தப்படுகிற மரபணுக்களால் தீர்மானிக்கப்படுகிறது என்றும், ஒருவரின் பிறப்புக்கு வெகு காலத்திற்குப் பின்னரும்ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கங்கள் அவற்றை மாற்றியமைக்க முடியும் என்றும் உயிரியல் நமக்குக் கற்பிக்கிறது. ஆனால் ஜோதிடத்தின் படி மரபுத்தொடர்பு, சுற்றுச்சூழல் ஆகிய நன்கு நிறுவப்பட்ட அறிவியல் கொள்கைகளைப் புறக்கணித்து, பிறந்த நேர விவரங்களை மட்டுமே தரவு களாகப் பயன்படுத்தி எழுதப்படுகின்ற ஒருவரின் ஜாதகத்துடன், அவரின் உடற் கூறுகளும் ஆளுமைப் பண்புகளும் தொடர்பு படுத்தப்படுகின்றன.

‘நேரம்’ தொடர்பான சிக்கல்கள்
பிறப்பு என்பது ஒரு உடனடி நிகழ்வாக இல்லாமல் ஒரு செயல்முறையாக இருக்கும்போது பிறந்த நேரத்தை ஒருவர் துல்லியமாகத் தீர்மானிப்பது எப்படி? கடிகாரங்களும் துல்லியமாக நேரத்தை அளவிடும் பிற கருவிகளும் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் ஜோதிடர்கள் என்ன செய்தனர்? ஜோதிடர்கள் எந்த நேரத்தைப் பயன்படுத்த வேண்டும் – உள்ளூர் நேரத்தையா (இது ஒவ்வொரு டிகிரி தீர்க்கரேகைக்கும் 4 நிமிடங்கள் மாறுபடும்) அல்லது நாட்டின் நிலையான நேரத்தையா? வினாடிக்கு சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் வரையறுக்கப்பட்ட வேகத்தில் ஒளி பயணிக்கிறது என்று நாம் அறிவோம். ஒளி, சூரியனிலிருந்து பூமிக்கு பயணிப்பதற்கு எட்டு நிமிடங்கள் நேரம் எடுப்பதால் நாம் பார்க்கின்ற சூரியனின் நிலை உண்மையில் எட்டு நிமிடங்களுக்கு முந்தைய நிலையாகும். ஆனால் ஜோதிடர்கள் இந்த அம்சத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. அதைப்போல், இராசி மண்டலங்களிலுள்ள அனைத்து கோள்கள் மற்றும் அனைத்து நட்சத்திரங்களின் உண்மையான மற்றும் பார்க்கக்கூடிய நிலைகளுக்கு இடையே வேறுபாடு உள்ளதால், ஜாதகக் கட்டங்கள் சில நிமிடங்கள் முதல் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரை காலாவதியாகின்றன!

(தொடரும்)

ஜோதிடம் ஏன் பொய்யானது (2)

சிறப்புக் கட்டுரை

கே. அசோக் வர்தன்ஷெட்டி
அய்.ஏ.எஸ். (பணி நிறைவு)

சிறப்புக் கட்டுரை

நேற்றைய (20.1.2025) தொடர்ச்சி…
ஜோதிடம் குறித்து அனுபவ ரீதியிலான ஆய்வு
ஜோதிடர்களுக்கு சந்தேகத்தின் பலனை அளித்து, ஜோதிடத்தின் தாக்கங்கள் இவ்வுலகம் குறித்த நமது தற்போதைய புரிதலின் வெளியே வருகின்றன என்பதை தற்காலிகமாக ஏற்றுக்கொண்டாலும் , “ஜோதிடம் வேலை செய்கிறதா?” என்ற முற்றிலும் அனுபவப்பூர்வமான கேள்வியைக் கேட்க நமக்கு உரிமை உண்டு. அதற்கு “இல்லை” என்பது தான் அழுத்தமான ஒரு பதில் ஆகும்.
பெர்னார்ட் சில்வர்மேன் என்பவர் 2,978 திருமணமான இணையர் மற்றும் 478 மணவிலக்கு பெற்ற இணையர்களின் பதிவுகளை ஆய்வு செய்தார். அவரது ஆய்வில் (1971ஆம் ஆண்டு) சூரிய ராசிகளுக்கும் திருமணம்/மணவிலக்கு முறைகளுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என நிரூபணமாயிற்று.
ஜான் மெக்கெர்வி என்பவர் 16,634 விஞ்ஞானிகள் மற்றும் 6,475 அரசியல்வாதிகளின் பிறந்த நாளை ஆய்வு செய்தார். அவரது ஆய்வில் (1981ஆம் ஆண்டு) சூரிய ராசிகளுக்கும் இந்த இரண்டு தொழில்களுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என நிரூபணமாயிற்று.

ஷான் கார்ல்சன் என்பவர் double-blind study of astrology ஆய்வு குறித்து “நேச்சர்” என்னும் இதழில் (1985ஆம் ஆண்டு) வெளியிட்டார். இது ஜோதிட வல்லுநர்கள் ஜாதகங்களையும், ஆளுமைகளின் சுயவிவரங்களையும் சீரற்ற வாய்ப்பை விட சிறப்பாக பொருத்த முடியாது என்பதை இது நிரூபித்தது.
மிஷெல் காக்வெலின் என்பவர் ஜாதகப் பலன் வேண்டி தன்னிடம் வந்த 500 நபர்களிடம், மிக மோசமான ஒரு தொடர் கொலையாளியின் ஜாதகப் பலனை அனுப்பி வைத்தார். அதிர்ச்சியூட்டும் வகையில், 94% நபர்கள் அவருடைய கணிப்பு தங்களின் குணங்களுடன் ஒத்துப்போவதாகக் கூறினர்!
ரோஜர் கல்வர் மற்றும் பிலிப் இயன்னா ‘ஜோதிடம் – உண்மையா அல்லது பொய்யா’ (1988ஆம் ஆண்டு) என்ற அவர்களின் புத்தகத்தில், 60 தொழில்கள், 35 உடல் பண்புகள், 42 மருத்துவக் கோளாறுகள் மற்றும் 26 ஆளுமைப் பண்புகள் குறித்த புள்ளிவிவர ஆய்வுகள் குறித்து விவாதித்தனர், மேலும் அவை சூரிய அறிகுறிகளால் பாதிக்கப்படவில்லை என்பதைக் கண்டறிந்தனர். அவர்கள் நன்கு புகழ்பெற்ற ஜோதிடர்களின் கணிப்புகளையும் ஜோதிட இதழ்களில் வெளியிடப்பட்ட கணிப்புகளையும் 5 ஆண்டுகளாக கண்காணித்தனர், மேலும் அதில் 11% மட்டுமே வெற்றி விகிதம் இருப்பதைக் கண்டறிந்தனர்.

பீட்டர் ஹார்ட்மேன் மற்றும் ஏனையோர், பிறந்த நாள் மற்றும் ஆளுமையில் / குணநலன்களில் தனிநபர்களின் வேறுபாடு, பொது அறிவு ஆகிய வற்றிற்கு இடையிலான புள்ளி விவரங்களுக்காக மிகப்பெரிய அளவிலான ஆய்வினை (2006ஆம் ஆண்டு) 15,000க்கும் மேற்பட்ட நபர்களிடம் நடத்தினர். ஆய்வு செய்யப்பட்ட ஒவ்வொரு கோணத்திலும் யாதொரு தொடர்பும் காணப்படவில்லை.
ஜெயந்த் நர்லிகர் மற்றும் ஏனையோர், 2013 ஆம் ஆண்டு இந்திய ஜோதிடம் குறித்த ஒரு ஆய்வை நடத்தினர். ஜோதிடர்கள் சிறப்புத் திறன் கொண்ட குழந்தை களின் ஜாதகங்களையும் மனநலம் குன்றிய மாணவர்களின் ஜாதகங்களையும் வேறுபடுத்திப் பார்க்க இயலவில்லை என்பதை நிரூபித்தது.

பேரழிவு நிகழ்வுகள்
ஜான் எஃப். கென்னடி, இந்திரா காந்தி அல்லது பெனாசிர் பூட்டோ ஆகியோரின் படுகொலைகள் மற்றும் 11.9.2011 அன்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல், 26/12/2004 அன்று ஏற்பட்ட சுனாமி அல்லது கோவிட்-19 தொற்றுநோய் போன்ற பேரழிவு நிகழ்வுகள் குறித்த எதிர்பாராத நிகழ்வுகளை ஜோதிடர்கள் எப்போதும் கணிக்கத் தவறிவிட்டனர். சிலர் நிகழ்வு நடந்த பிறகு ‘சரியான’ கணிப்புகள் பற்றிய புனையப்பட்ட கதைகளைக் கொண்டு வந்தனர்!
ஜோதிடத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்துவது ‘போலிகள்’ என்றும், ‘உண்மையான’ ஜோதிடர்கள் பொதுவாக துல்லியமான ஜாதகங்களை எழுத முடியும் என்றும் சிலர் கூறுகிறார்கள். ஆனால் அடிப்படையில் தவறான அனுமானங்களை அடிப்படையாகக் கொண்ட மற்றும் அனைத்து அனுபவ சோதனைகளிலும் தோல்வியடைந்த ஒரு துறையில் ‘உண்மையான’ நிபுணர்கள் எப்படி இருக்க முடியும்?

ஜோதிடத்தின் உளவியல் ரீதியிலான ஆதாரம்
16-ஆம் நூற்றாண்டில் போப் பாண்டவரின் ஆலோசகரான பிரான்செஸ்கோ குய்சியார்டினி சரியாக கணித்தார்: “நூறு பொய்களுக்கு ஒரு உண்மையுடன் சொன்னால் ஜோதிடர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், மற்ற வர்கள் நூறு உண்மைகளுடன் ஒரு பொய்யைச் சொன்னால் அவர்களின் நம்பகத்தன்மையை இழந்து விடு கிறார்கள் . “எல்லா குறைபாடுகள் இருந்தும், ஜோதிடம் ஏன் பொது மக்களை கவர்ந்திழுக்கிறது? அதற்கு உளவியலாளர்கள் நான்கு காரணங்களை அடையாளம் கண்டறிந்துள்ளனர்.

ஃபாரெர் விளைவு (Forer effect)
பொதுவான அறிக்கைகள் மற்றும் தெளிவற்ற கணிப்புகளை தனித்துவமாகத் துல்லியமாகவும், நமக்காகவே வடிவமைக்கப்பட்டதாகவும் உணரும் புகழ்பெற்ற மனிதப் போக்கை இது விவரிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு ஜோதிடர் “உங்களுக்கு ஏதோ கெட்ட நிகழ்வு நடக்கப் போகிறது” என்பது போன்ற தெளிவற்ற அறிக்கையை அளிக்கலாம். நீங்கள் பணத்தை இழக்க நேர்ந்தால் அல்லது நோய்வாய்ப்பட்டால் அல்லது பதவி உயர்வு கிடைப்பதற்கு தாமதம் ஏற்படும் நேர்வில் , இந்தக் கூற்றை உங்களது குறிப்பிட்ட நேர்விற்குப் பொருத்தமாக விளக்கிக் கூறி, அந்த நிகழ்வை ‘கணித்ததற்காக’ ஜோதிடருக்கு ‘பாராட்டை’ தெரிவிப்பீர்கள்!
ஜோதிடர்கள் பொதுவாக பலதரப்பட்ட மக்களிடம் கூறும் மற்ற தெளிவற்ற அறிக்கைகள் பின்வருபவையாகும்: “உங்களுக்கு நல்லது நடக்கப் போகிறது”, “உங்களுக்குத் தகுதியான பாராட்டு கிடைக்கவில்லை”, “உங்கள் உள் வட்டத்தில் உள்ள சிலர் உங்களுக்கு விரோதமாக இருக்கிறார்கள்” போன்றவையாகும். மேலும் புத்திசாலி ஜோதிடர்கள் குறிப்பிட்ட கணிப்புகளைச் செய்வதைத் தவிர்க் கிறார்கள், ஆனால் தெளிவற்ற, பொதுவான அறிக் கைகளை உருவாக்கி, Forer விளைவு அதன் பணியைச் செய்யட்டும்.

முன்முடிபுகளின் சார்புநிலை
நம்முள் ஏற்கெனவே நிலைபெற்றுள்ள நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்துள்ள தகவல்களைத் தேடுவதும், தகவல்களுக்கு விளக்கமளிப்பதும் மனித இயல்பாகும். நீங்கள் ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்டவராக இருந்தால், உங்களைப் பற்றி ஜோதிடம் கூறிய மிகச் சில சரியான கணிப்புகளை மட்டுமே நினைவில் வைத்திருப்பீர்கள், எண்ணற்ற தவறான கணிப்புகளையும் பொருத்தமற்ற கணிப்புகளையும் மறந்துவிடுவீர்கள் அல்லது அவற்றை பொருட்படுத்தாமல் விட்டுவிடுவீர்கள். நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு மனித நினைவின் இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட தன்மை குறித்து சர் பிரான்சிஸ் பேகன் கருத்து தெரிவித்தார்: “ஜோதிடம், கனவுகள், சகுனங்கள், தெய்வீக தீர்ப்புகள் அல்லது இதுபோன்ற அனைத்து மூடநம்பிக்கைகளின் வழி இதுதான், அங்கு மனிதர்கள், அத்தகைய மாயைகளில் மகிழ்ச்சியடைந்து, அவை நிறைவேறும் நிகழ்வுகளைக் குறிக்கிறார்கள், ஆனால் அவை எங்கு தோல்வியடைகின்றன, இது பெரும்பாலும் நடந்தாலும், அவற்றைப் புறக்கணித்து கடந்து செல்கிறார்கள்.”

தனிப்பட்ட சம்பவங்கள் சார்ந்த சிந்தனை (Anecdotal thinking)
ஜோதிடத்தின் பிரபலத்திற்கு மற்றொரு காரணம், நிகழ்வுகள் பற்றிய சிந்தனையில் மனிதர்களின் நாட்டமும், புள்ளிவிவர சிந்தனையில் நமக்கு இருக்கும் சவுகரியமும் ஆகும். வியக்கத்தக்க வகையில் துல்லியமான கணிப்பைச் செய்த ஒரு ஜோதிடரைப் பற்றி யாராவது ஒருவர் சொல்வதை நீங்கள் அடிக்கடி கேட்கிறீர்கள். அறிவியல் அத்தகைய நிகழ்வுகளை ஏற்றுக்கொள்வதில்லை, ஏனெனில் அது ஆங்கிலத்தில் கூறப்படும் “செர்ரி-பிக்கிங் டேட்டா”வுக்கு சமம். செர்ரி- பிக்கிங் என்பது ஒருவரின் கருத்தை எதிர்க்கும் பிற தரவைப் புறக்கணித்து, ஒருவரின் நிலைப்பாட்டை ஆதரிக்க தரவைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதாகும். சாதகமான நிகழ்வுகள் மற்றும் பாதகமான நிகழ்வுகளை கணக்கில் எடுத்துக்கொள்ளும் புள்ளிவிவர ஆதாரங்களை அறிவியல் கோருகிறது. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ‘வெற்றிகள்’ (சரியான ஜோதிட கணிப்புகள்) வெறும் வாய்ப்பு காரணமாக ஏற்படக்கூடும் என்பதால், சிக்கலைத் தீர்ப்பதற்கான ஒரே வழி, ஒரு சோதனைக் குழு (ஜோதிடர்கள்) மற்றும் ஒரு கட்டுப்பாட்டுக் குழு (வெறும் யூகிக்கக் கேட்கப்படும் சாதாரண மக்கள்) மூலம் அதிக எண்ணிக்கையிலான புள்ளிவிவர சோதனைகளை நடத்தி, ஜோதிடர்கள் வாய்ப்புகளை விட கணிசமாக அதிக நிகழ்தகவுகளில் கணிக்க முடியுமா என்று பார்ப்பதுதான். இதுபோன்ற அனைத்து புள்ளிவிவர சோதனைகளும் ஜோதிடர்களால் உண்மையில் வாய்ப்பு விகிதங்களை விட சிறப்பாக எதையும் கணிக்க முடியாது என்பதைக் காட்டுகின்றன!

தவறுக்குப் புறக்காரணிகள் மீது பழிபோடுதல்
ஜோதிடம் பிரபலமானது, ஏனெனில் அது மக்கள் தங்கள் தோல்விகளுக்கு தனிப்பட்ட பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக அண்ட சக்திகளைக் காரணம் காட்ட அனுமதிக்கிறது. கிங்லியரில் வில்லியம் ஷேக்ஸ்பியர் கூறுவது போல்: “இது உலகின் சிறந்த முட்டாள்தனம், நாம் நல் வாய்ப்பில் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது – பெரும்பாலும் நமது சொந்த நடத்தை யின் அதிகப்படியான தன்மை – நமது பேரழிவுகளுக்கு சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை நாம் குற்றவாளி களாக்குகிறோம்; தேவையின் பேரில் நாம் வில்லன்கள் போல; பரலோக நிர்ப்பந்தத்தால் முட்டாள்கள்; கோள்களின் ஆதிக்கத்தால் திருடர்கள், திருடர்கள் மற்றும் துரோகிகள்; கோள்களின் செல்வாக்கின் கட்டாய கீழ்ப்படிதலால் குடிகாரர்கள், பொய்யர்கள் மற்றும் விபச்சாரிகள்; நாம் தீயவர்களாக இருப்பதெல்லாம் தெய்வீகத் திணிப்பால் – மனிதன் தனது ஆடு போன்ற மனநிலையை ஒரு நட்சத்திரத்தின் மீது சுமத்தும் ஒரு பாராட்டத்தக்க ஏய்ப்பு!”

ஏமாற்றுக்காரர்களின் போலித்தனம்
1975 ஆம் ஆண்டில், 19 நோபல் பரிசு வென்றவர்கள் (எஸ். சந்திரசேகர், சர் பிரான்சிஸ் கிரிக், சர் பீட்டர் மேடவர், பால் சாமுவேல்சன், லினஸ் பாலிங் உள்ளிட்டோர்) உட்பட உலகின் 186 முன்னணி விஞ்ஞானிகள் ‘தி ஹ்யூமனிஸ்ட்’ இதழில் ஜோதிடத்திற்கான தங்கள் ஆட்சேபனைகளை கோடிட்டுக் காட்டி ஒரு திறந்த கடிதத்தை வெளியிட்டனர். அவர்கள் கூறியதாவது: “பரவலான அறிவொளி மற்றும் கல்வி நிலவும் இந்த நாளில், மந்திரம் மற்றும் மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கைகளை மறுப்பது தேவையற்றது என்று ஒருவர் கற்பனை செய்வார். இருப்பினும், ஜோதிடத்தை ஏற்றுக்கொள்வது நவீன சமூகத்தில் பரவியுள்ளது. ஊடகங்கள் மற்றும் புகழ்பெற்ற செய்தித்தாள்கள், பத்திரிகைகள் மற்றும் புத்தக வெளியீட்டாளர்கள் ஜோதிட விளக்கப்படங்கள், கணிப்புகள் மற்றும் ஜாதகங்களை தொடர்ந்து விமர்சனமின்றி பரப்புவதால் நாங்கள் குறிப்பாக கலக்கமடைகிறோம். இது பகுத்தறிவின்மை மற்றும் தெளிவற்ற தன்மையின் வளர்ச்சிக்கு மட்டுமே பங்களிக்கும்.

ஜோதிட ஏமாற்றுக்காரர்களின் போலித்தனமான கூற்றுக்களை நேரடியாகவும் வலுவாகவும் சவால் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நாங்கள் நம்புகிறோம்.”
இந்தியாவில், அறிவாற்றல் மிக்கவர்கள் ஜோதிடத்தின் மீதான வெறுப்புணர்வை பெரும்பாலும் வெளிப்படுத்துவதில்லை. மேலும், ஜோதிடர்களுடன் ஜோதிடம் குறித்து வாதம் செய்யவும் அவர்கள் விரும்புவதில்லை. இது தவறாகும். ஏனெனில், நாள்தோறும் ஜோதிடத்திற்கு ஆதரவான பரப்புரை களையும் மிக அரிதாக ஜோதிடத்திற்கு எதிரான தகவல்களையும் கேட்கக்கூடிய கற்றோர் உள்ளிட்ட பாமர மக்கள் ஜோதிடத்தில் ஏதேனும் உண்மை இருக்கக்கூடும் என இதனால் நம்புவதற்கான வாய்ப்புண்டு. “அறிவுள்ளவர்கள் எதுவும் செய்யா விட்டால், முட்டாள்தனம் வெற்றி பெறும்.” என்ற எட்மண்ட் பர்க்கின் கூற்று இங்கே நினைவுகூரத் தக்கதாகும்.

முட்டாள்தனத்தின் ஆதிக்கம்
கெட்ட வாய்ப்பாக, இந்தியாவில் முட்டாள்தனம் வாகை சூடியுள்ளது. 2001 ஆம் ஆண்டில், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) இந்தியப் பல்கலைக்கழகங்களில் “வேத ஜோதிடம்” படிப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு அளித்து நம்மைப் பின்னோக்கி அழைத்துச் செல்கிற முடிவை எடுத்தது. பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்த முடிவை 2004ஆம் ஆண்டு மாண்பமை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. 2011 ஆம் ஆண்டில், மும்பை உயர் நீதிமன்றம் ஜோதிடத்தை “காலத்தால் அழியாத அறிவியல்” (“time-tested science) என்று அழைத்தது. 2019 ஆம் ஆண்டில், ஒன்றிய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஜோதிடத்தை “அறிவியலனைத்திலும் சிறந்தது ஜோதிடம்” என்று அறிவித்தார். அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், ஆய்வுத் திறன் மற்றும் சீர்திருத்த உணர்வு ஆகியவற்றை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என (பிரிவு 51A) அரசமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ள ஒரு நாட்டில்தான் இவை அனைத்தும் நிகழ்கின்றன.

இந்த பரிதாபகரமான நிலைக்கு இந்தியாவின் அறிவுஜீவிகளை, குறிப்பாக விஞ்ஞானிகளை நான் குறை கூறுவேன். ஜோதிடம் மற்றும் பிற மூடநம்பிக்கைகளை நேரடியாகவும் வலுவாகவும் சவால் செய்யும் பொறுப்பை அவர்கள் நிறைவேற்றத் தவறிவிட்டனர். அமெரிக்க எழுத்தாளர் எச்.எல்.மென்கன் கூறியது போல்: “மூடநம்பிக்கையை கையாள்வதற்கான வழி, அதற்கு மரியாதை செலுத்துவது அல்ல, மாறாக அதை எல்லா ஆயுதங்களாலும் சமாளித்து, அதன் மூலம் அதை முறியடித்து, அதை முடமாக்கி, அதை என்றென்றும் இழிவானதாகவும் அபத்தமாகவும் மாற்றுவதாகும். மூடநம்பிக்கை, ஒருவேளை, நன்கு அறிய வேண்டியவர்களால் போற்றப்படுகிறதா? பின்னர் அவர்களின் முட்டாள்தனம் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டு, அவர்கள் வெட்கத்தில் தலையை மறைத்துக்கொண்டு, அதிலிருந்து தப்பி ஓடும் வரை அதன் அனைத்து அருவருப்புகளிலும் அங்கு காட்சிப் படுத்தப்பட வேண்டும்.”

தமிழ்ச் சமுதாயத்தில் நிகழும் சமூக அநீதிகளுக்கு எதிரான மற்றும் பகுத்தறிவிற்கும் மனித நேயத்திற்கும் ஆதரவான தந்தை பெரியாரின் போராட்டத்தில் இந்த அணுகுமுறையை அவர் பின்பற்றினார். இந்திய அறிஞர்கள் தந்தை பெரியாரின் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என நான் விழைகிறேன். நாட்டில் மூடநம்பிக்கைகளுக்கும் பகுத்தறிவின்மைக்கும் எதிராக உருவாகிவரும் பேரலைகளைத் தடுக்க வேண்டிய கடமை இந்திய அறிஞர் பெருமக்களுக்கு உள்ளது. ஜோதிடம் மற்றும் பிற மூடநம்பிக்கைகள் மற்றும் மாய அறிவியலை அறிஞர் பெருமக்கள் நேரடியாக எதிர்கொண்டு அத்தகைய மூடபழக்கவழக்கங்களின் போலித் திரையைக் கிழித்தெறிந்து அவற்றின் உண்மையான தோற்றத்தை வெளி உலகிற்குக் கொண்டு வர வேண்டும்.

நம்முள் ஏற்கெனவே நிலைபெற்றுள்ள நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்துள்ள தகவல்களைத் தேடுவதும், தகவல்களுக்கு விளக்கமளிப்பதும் மனித இயல்பாகும். நீங்கள் ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்டவராக இருந்தால், உங்களைப் பற்றி ஜோதிடம் கூறிய மிகச் சில சரியான கணிப்புகளை மட்டுமே நினைவில் வைத்திருப்பீர்கள், எண்ணற்ற தவறான கணிப்புகளையும் பொருத்தமற்ற கணிப்புகளையும் மறந்துவிடுவீர்கள் அல்லது அவற்றை பொருட்படுத்தாமல் விட்டுவிடுவீர்கள்.

வியாழன், 4 ஜூலை, 2024

ஜோதிடப் பைத்தியங்களே, திருந்துங்கள்!

 


டிசம்பர் 16-31, 2020

நாட்டில் உள்ள பல படித்தவர்களும், பதவியில் உள்ள பெரிய மனிதர்களில் பலரும், பாமரத்தனத்திலிருந்து அறியாமையிலிருந்து விடுபட முடியாமல், பேராசைச் சிறைக்குள் கிடந்து உழலுவதற்கான மிகப் பெரிய காரணங்களில் ஒன்று _ ஜோதிடம் என்ற ஒரு போலி விஞ்ஞானத்தை நம்பி பொருளையும் அறிவையும் இழப்பதாகும்!

எத்தனையோ கொலைகளும், தற்கொலைகளும் நரபலிகளும் நாட்டில் நடைபெறுவதற்கு அடிப்படையான காரணம் இந்த ஜோதிட மூடநம்பிக்கையேயாகும்!

அறிவியல் (Science) வேறு; போலி அறிவியல்(Pseudo Science) வேறு. படித்த தற்குறிகளுக்கே கூட இது விளங்குவதில்லை!

வானவியல் (Astronomy) என்பது அறிவியல் (Science). ஜோதிடம் (Astrology) என்பது போலித்தனமான அறிவியல்!

கிரகங்கள் கணக்கே இரண்டிலும் மாறுபடுவதைச் சுட்டிக் காட்டினாலே, திறந்த மனம் உடையவர்களாக இருந்தால், அவர்களுக்கு இந்த வேறுபாடு எளிதில் விளங்கிவிடும்!

சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பே, சுயமரியாதை இயக்கம் தொடங்கி, பச்சை அட்டை குடிஅரசு வார ஏட்டின் மூலம் தந்தை பெரியார் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஜோதிடப்புரட்டு எனும் தலைப்பில் சிறு நூலாக அச்சில் வந்து, பல லட்சக்கணக்கில் _ பல பதிப்புகள் மூலம் _ நாட்டில் பரவியுள்ளது!
நம் நாட்டு நாளேடுகளில் பலவும், வார ஏடுகளும் ஜோதிடத்தைப் பரப்பி, மக்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொள்ளையடிக்கும் சுரண்டல் வியாபாரத்தினை செய்வது மகா வெட்கக் கேடு!
நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் எல்லாம் பல அறிவியல் ஆளுமையாளர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் ஜோதிடம் என்பது புரட்டு என்று கூறினார்கள்!

ஜோதிடம் இதழ் என்பது அறிவார்ந்தோர் வைத்த நம்பிக்கையாகும். சி.இராஜகோபாலாச்சாரியார் போன்றவர்களேகூட ஜோதிடத்தை நம்பாதவர்கள்.
ஜோதிடப் புரட்டைப் புரிந்துகொள்ள வேறு பெரிய விளக்கம் கூடத் தேவையில்லை!

இன்றைய ராசிபலன் போட்டு நாளும் ராசிபலன் வருவாய் தேடும் நாளேடுகளில் ஒரு குறிப்பிட்ட ராசிக்கு என்ன பலன் என்பதை இரண்டு, மூன்று நாளேடுகளில் வந்துள்ளவற்றோடு ஒப்பிட்டுப் பாருங்கள். ஒன்றுக்கு மற்றொன்று நேர் எதிராகக் கூட இருக்கும்!

என்றாலும், ஆசை வெட்கம் அறியாது என்பதுபோல மூடநம்பிக்கையால் ஏற்படும் ஆசை இந்த மூடத்தனத்தை வளர்த்துக் கொண்டே உள்ளது!
புதிய ஒரு செய்தி: அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் இரண்டாம் முறை போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் முழு வெற்றி பெறுவார்; அவரை எதிர்க்கும் ஜோபைடன் தோல்வி அடைவார்; துணை அதிபர் பதவி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வி அடைவார் என்று ஜோஸ்யம் சொன்னார்கள்! அது அப்படியே ஆங்கிலத்தில் தரப்பட்டிருக்கிறது.

இதுபோல இதற்கு முன் எத்தனையோ ஜோதிடங்கள் பொய்த்த கதையும் நிகழ்வுகளும் ஏராளம் உண்டு. இதே கேள்விக்கு பைடன் வெல்வார் என்று இன்னொருவரும் ஏதோ கணக்குப்போட்டு எழுதியுள்ளார். இந்தப் பக்கம் ஒருவர், அந்தப் பக்கம் ஒருவர் என எவர் வந்தாலும் ஜோதிடம் கணித்தது என்று சொல்லிக் கொள்ளலாம் அல்லவா? ஜோதிடம் என்பது கணிதம், அறிவியல் என்றால் யார் கணக்கிட்டாலும் ஒன்று போல் தானே வரவேண்டும்? ஒன்று கூட்டல் ஒன்று என்றால் இரண்டு தானே எல்லோர்க்கும் விடை. ஜோதிடத்தில் மட்டும் ஆளுக்கொரு விடை வருவது எப்படி? அதுவே ஜோதிடம் பொய் என்பதற்கான சான்றல்லவா? அதைவிட ஒரு சிறு கேள்வி: கொரோனா கொடுந்தொற்று வந்து இப்படி உலகத்தில் (ஏறத்தாழ 68.2 மில்லியன் பாதிக்கப்பட்டவர்கள், 1.56 மில்லியன் உயிரிழந்தவர்கள், 44 மில்லியன் குணமானவர்கள்) இத்தனை லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள், இவ்வளவு பேர் பலியாவார்கள் என்று எந்த ஜோதிடராவது கூறியிருக்கிறார்களா? (பல ஊர்களில்) ஜோதிடர்களேகூட கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்! இது அசல் கேலிக் கூத்து ஆகும். புயல், பூகம்பம் எப்போது எங்கே எந்த நொடியில் உருவாகும் என்று ஜோதிடர்கள் கூற முடியுமா?

எனவே, ஜோதிடப் பைத்தியங்கள், பரிகாரம் என்ற பெயரில் அறிவையும், பொருளையும், காலத்தையும் இழப்பதைத் தவிர, நாம் கண்ட பலன்தான் என்ன? எனவே, ஜோதிடப் பைத்தியங்களே, திருந்துங்கள்!
– கி.வீரமணி,
ஆசிரியர்.

புதன், 19 ஜூன், 2024

செவ்வாய் தோஷம்? மெச்சத் தகுந்த உச்சநீதிமன்ற ஆணை


முகப்புக் கட்டுரை – 

2023 முகப்பு கட்டுரை ஜூன் 16-30,2023

– மஞ்சை வசந்தன்

உத்தரபிரதேசத்தில் உள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம் பல நேரங்களில் பரபரப்பான தீர்ப்புகளை வழங்கிய முக்கியமான நீதிமன்றம். அண்மையில் அந்த நீதிமன்றத்தில் ஒரு வழக்கு.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி, ஒரு பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தினார். ஆனால், அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்வதைத் தவிர்த்து, தொடர்ந்து ஏமாற்றி வந்தார்.
பாதிக்கப்பட்ட அப்பெண் புகார் அளித்ததை அடுத்து அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். பிணை கோரி, அவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை நாடினார்.

அப்போது அந்த இளைஞரின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், ‘‘அந்தப் பெண்ணுக்கு ‘செவ்வாய் தோஷம் உள்ளது; இந்தத் தோஷம் இருப்பவர்களைத் திருமணம் செய்தால், குடும்பத்துக்கு அழிவு ஏற்படும்; அதனால்தான், அந்தப் பெண்ணை என் கட்சிக்காரர் திருமணம் செய்யவில்லை’’ என வாதிட்டார்.

இதையடுத்து அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த அதிர்ச்சி தரும் உத்தரவு என்ன தெரியுமா?

‘‘இந்த வழக்கில் தொடர்புடைய பெண்ணும் – அந்த இளைஞரும் தங்கள் ஜாதகத்தை லக்னோ பல்கலைக்கழக ஜோதிடத் தலைவரிடம் 10 நாள்களுக்குள் அளிக்கவேண்டும்.

இதை ஆய்வு செய்து, அந்தப் பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் உள்ளதா இல்லையா? என பல்கலைக்கழக ஜோதிடத் துறை மூன்று வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட உறையில் வைத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்
என்று ஆணை பிறப்பித்தார்.

இந்த விவகாரம் குறித்து பத்திரிகைகளில் செய்தி வெளியானதை அடுத்து, உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்தது.
அப்போது உச்சநீதிமன்றம், ‘‘பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் உள்ளதா இல்லையா? என அறிக்கை அளிக்கும்படி, லக்னோ பல்கலைக்கழகத்திற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் ஏன் உத்தரவிட்டது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
எனவே, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் அந்த ஆணைக்கு (ஜோதிடம் பார்த்து முடிவு செய்யும் ஆணையை) தடை விதிக்கின்றோம்’’ என்று ஆணையிட்டுள்ளது!

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியின் ஆணை எவ்வளவு பெரிய அறியாமை! உயர்நீதிமன்ற நீதிபதிக்கே சட்டப்பார்வைக்கும் சமூக நம்பிக்கைகளுக்கும் வேறுபாடு தெரியாமல் போகலாமா?

சமுதாயத்தில் மக்கள் மத்தியில் எத்தனையோ அறியாமையின்பாற்பட்ட மூடநம்பிக்கைகள் இருக்கும். அப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளையெல்லாம் கருத்தில் கொண்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கமுடியுமா?

பக்தியின் பேரால் தன் பிள்ளையையே அறுத்து சாமியாருக்கு விருந்து கொடுத்தான் சிறுத்தொண்டன்.

இன்றைக்கு ஒரு தந்தை தன் பிள்ளையை பக்தியின் பேரால் அறுத்து கறி சமைத்தால் நீதிமன்றம் ஏற்குமா?
நம்பிக்கையின் அடிப்படையில் நரபலிகள் கொடுக்கப்படுகின்றன. அவற்றை நீதிமன்றம் ஏற்குமா?

சோதிடத்தில் ஒருவருக்கு படிப்பு வராது என்று சொன்னால், அவரைப் படிக்க வைக்காமல் ஒரு தந்தை இருந்தால் அதை நீதிமன்றம் ஏற்குமா? அந்தப்பிள்ளைக்கு படிப்பு வருமா? வராதா? அப்பிள்ளையின் ஜாதகத்தைப் பார்த்துச்சொல்லுங்கள் என்று பல்கலைக் கழகத்திற்கு உத்தரவு போடுவாரா நீதிபதி?நீதிபதியின் இந்த அணுகுமுறை எதனால் வந்தது? சோதிடத்தை பல்கலைக்கழகத்தில் பாடமாக வைத்ததன் அவலநிலை அல்லவா இது? பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளதால் அது உண்மை என்று எண்ணுகிறாரா நீதிபதி?

பாடத்தில் வருவதெல்லாம் அறிவியல் உண்மையாகுமா? சட்டம் அவற்றை ஏற்க முடியுமா?

சிவபெருமான் தலையில் கங்கையுள்ளது; நிலவு உள்ளது என்று பாடம் வைத்துள்ளார்கள். திருப்பாற்கடல் கடையப்பட்டதாய் பாடத்தில் சொல்லப்படுகிறது. பூமியை பாயைச் சுருட்டிய கதை பாடத்திட்டத்தில் உள்ளது. பாடத்திட்டத்தில் இருப்பதால் இவையெல்லாம் உண்மையாகிவிடுமா?

அறிவியலுக்கு எதிரான பாடங்கள் அறவே நீக்கப்பட வேண்டும்; வாஸ்து, பாடத்திட்டத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளதால், கட்டு
மான அறிவியலை (Civil Engineering) கைவிட்டு விட்டு, வாஸ்துபடி கட்டடங்களை கட்ட வேண்டும் என்று கூற முடியுமா?
மதவாத பி.ஜே.பி. அரசு தங்கள் நம்பிக்கைகளை, சாஸ்திர விதிமுறைகளையெல்லாம் சட்டமாக்க, பாடமாக்க முயற்சி செய்வதன் விளைவுகளே இச்சீர்கேடுகளுக்குக் காரணம்.

நீதிமன்ற நீதிபதிகளையே பாதிக்கும் அளவிற்கு இது சென்றுவிட்டதால், கல்வி நிலையங்களில், அறிவியலுக்கு எதிரான, முரணான ஒவ்வாத கருத்துகள் எதுவும் பாடத்திட்டத்தில் இருக்கக்கூடாது என்று முடிவு செய்து அப்படிப்பட்ட பாடங்களை உடனே நீக்க வேண்டும். இல்லையேல், உலக அரங்கில் இந்தியாவின் கல்வித்திட்டமும், நீதிமன்றமும், சட்டங்களும் கேலிக்குரியனவாய் மாறிவிடும். இந்திய விஞ்ஞானிகள் எல்லாம் தலைகுனிந்து நிற்க வேண்டிவரும். எனவே, கல்வியாளர்களும், விஞ்ஞானிகளும் கூடிப்பேசி, இப்படிப்பட்ட அவலங்களை அகற்ற உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நீதிபதிகளின் தனிப்பட்ட நம்பிக்கைகள் எல்லாம், தீர்ப்பில் தற்போது எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. அனைத்து சாதியினர் அர்ச்சகர் தொடர்பான வழக்கில்கூட, அதை விசாரித்த நீதிபதியின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப தீர்ப்புகள் வருவது, சட்டப்படியான, சமூகநீதியின் அடிப்படையிலான ஆட்சியின் மாண்பைக் குலைத்து மண்மூடச் செய்துவிடும் என்பதை நீதித்துறையில் உள்ளவர்கள் உடனடியாகக் கருத்தில்கொண்டு செயல்பட்டு முடிவெடுக்க வேண்டும்.

நீதிமன்றங்களில் சட்டப்பார்வை மட்டுமே இருக்கவேண்டுமே தவிர, தனிப்பட்ட நம்பிக்கைகள், கொள்கைகள், விருப்பு, வெறுப்புகள் அங்கு நுழைந்தால் நீதித்துறையையே அது சீரழித்து, சீழ்பிடிக்கச் செய்துவிடும்.

செவ்வாய் தோஷம் உண்மையா?

செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணைத் திருமணம் செய்தால் இன்னின்ன பாதிப்புகள் வரும் என்பது ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளனவா? செவ்வாய் தோஷம் உள்ளதாகக் கூறும் சோதிடம் முதலில் சரியாக கணிக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டதா?
நீதிமன்றத்தில் ஒரு கொலைக்கான தடயங்களை உறுதி செய்ய எத்தனை பரிசோதனைகள், ஆய்வுகள் செய்யப்படுகின்றன. தடயவியல் ஆய்வு, மருத்துவர் ஆய்வு, சோதனைக்கூடத்தில் ஆய்வு என்று பல ஆய்வுகள் அறிவியல் கண்ணோட்டத்தில் செய்யப்பட்டு, அத்தடயங்களின்

உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்ட பின்பே அவை ஏற்கப்படுகின்றன.
அப்படியிருக்க, சோதிடம் உண்மை என்று ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதா? செவ்வாய் தோஷம் உண்மை, அதனால் பாதிப்பு வரும் என்று ஆய்வுகள் நடத்தப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதா?

எந்த ஆய்வும் இன்றி, சோதனையின்றி, இதை எப்படி ஏற்க முடியும்? இந்த அடிப்படைச் சிந்தனைகூட இன்றி ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி எப்படி ஆணையிட்டார்?

உச்சநீதிமன்ற ஆணை மெச்சத் தகுந்தது

செய்தித்தாளில் செவ்வாய்தோஷம் சார்ந்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியின் உத்தரவு வெளிவந்ததைப் பார்த்த அளவிலே உச்சநீதிமன்ற நீதிபதிகள், தாங்களாகவே முன்வந்து அதை வழக்காக எடுத்து, உயர்நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்குத் தடையும் உடனடியாக விதித்துள்ளனர் என்றால், அதன்உட்பொருள் என்ன? உயர்நீதிமன்ற நீதிபதியின் உத்தரவு அந்த அளவிற்கு சட்டத்திற்குப் புறம்பானது, நீதிமன்ற விதிமுறைகளுக்கு, விசாரணை முறைகளுக்கு எதிரானது என்பதை அவர்கள் உணர்ந்ததால்தான் உடனடியாக தடைவிதித்து ஆணையிட்டுள்ளனர்.

சோதிடம், வாஸ்து போன்ற மூடநம்பிக்கைகளை பாடமாக வைப்பது எவ்வளவு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை இந்த வழக்கின் மூலமாக, இந்த பா.ஜ.க. அரசு உணர்ந்து தங்கள் தப்பை உடனடியாகச் சரிசெய்து கொள்ள வேண்டும். அறிவியலுக்கு எதிரான பாடங்களை உடனடியாக பாடத்திட்டத்திலிருந்து விலக்கிக்கொள்ள வேண்டும்.

அறிய வேண்டிய அறிவியல் கருத்துகளை பாடமாக வைக்காமல், மூடநம்பிக்கைகளை பாடமாக வைப்பதும், கட்டாயம் கற்க வேண்டிய மக்களாட்சி பற்றிய பாடங்களை பாடச்சுமை என்று நீக்குவதும், கல்வித்துறை கற்காலத்தை நோக்கிக் கொண்டு செல்லப்படுவதையே காட்டுகிறது.

ஒன்பது கிரகங்கள் என்று கணக்கில் கொண்டு சோதிடம் கணிக்கிறார்கள். வெறுங்கண்ணால் பார்த்து கணித்த காலத்தில் ஒன்பது. ஆனால் அதன்பின் புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

அப்படியென்றால் எல்லா கோள்களையும் கணக்கில் கொள்ளாமல் காணப்படும் சோதிடம் எப்படிச் சரியாக இருக்க முடியும்?
மேலும், சூரியன் நிலையாக தன்னைத்தானே சுற்றக்கூடியது. ஆனால், சூரியன் கோள்களைச் சுற்றி வருவதாக சோதிடம் கூறுகிறது.இது அறிவியலுக்கு முற்றிலும் எதிரானது; உண்மைக்கு மாறான கருத்தின் அடிப்படையில் கணிக்கப்படும் சோதிடம் எப்படிச் சரியாக இருக்க முடியும்?

கடவுளுக்கு எதிரானது சோதிடம் :

கடவுள் கொள்கைப்படி ஒருவனுடைய வாழ்க்கை கடவுளின் விதிப்படி அமைவது.ஆனால், ஒருவரது வாழ்க்கை கிரகங்களால் தீர்மானிக்கப்படுகிறது என்கிறது சோதிடம். அப்படியென்றால் சோதிடம் கடவுளை மறுக்கிறது என்று பொருள்.

வாழ்வைத் தீர்மானிப்பது கடவுளா? கிரகங்களா என்பதையே உறுதி செய்ய முடியாத நிலையில், செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணைத் திருமணம் செய்யக்கூடாது என்பது அநீதியல்லவா? பெண்ணுக்குச் செய்யும் துரோகம் அல்லவா?

https://unmai.in/images/magazine/2023/june/16-30/30.jpg

செவ்வாய் என்பது ஒரு கோள். அங்கு மனிதன் விண்கலம் இறக்கி சோதனை செய்கிறான். செவ்வாயில் உயிரினங்கள் உண்டா என்று ஆய்வு நடத்துகிறான். செவ்வாயில் குடியேற திட்டம் வகுத்துக்கொண்டிருக்கிறான். அப்படி அறிவியில் வளர்ச்சி உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கும் நிலையில் செவ்வாய் தோஷம் என்று கூறி பெண்ணின் வாழ்வைக் கெடுக்க முற்படுவது, அதற்கு உயர்நீதிமன்றமே துணை நிற்பது மிகப்பெரிய அவலம் அல்லவா?

ஆசிரியர் அறிக்கை

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியைக் கண்டித்தும் உச்சநீதிமன்ற நீதிபதிகளைப் பாராட்டியும் ஆசிரியர் அவர்கள்நுட்பமான, பொருள் பொதிந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

“அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியின் ஆணையை நாளேடுகளில் பார்த்ததும், தாங்களாகவே முன்வந்து (Suo Moto) நடவடிக்கை மேற்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவு பாராட்டுக்குரியதாகும்.

இந்திய அரசமைப்புச் சடடத்தின் மீதுதான் எல்லா நீதிபதிகளும் பதவிப் பிரமாணம் எடுக்கிறார்கள்.
அதில் ‘‘அடிப்படைக் கடமைகள்’’ (Fundamental Duties)என்ற தலைப்பில் 51-ஏ (எச்) பிரிவு 1976 முதலே இணைக்கப் பட்டுள்ளது!

ஒரு பிரிவு மிகத் தெளிவாக,

‘‘It shall be the duty of every citizen of India to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform’’ என்று கூறுகிறது.

‘‘அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், புலனறிவு மற்றும் சீர்திருத்த உணர்வை வளர்ப்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையாகும்’’ என்பது அதன் தமிழாக்கம் ஆகும்.

வாஜ்பேயி ஆட்சிக்காலத்தில் பல்கலைக் கழகங்களில் மூடத்தனத்தைப் படிப்பாக்கினர்!

சோதிடம் என்பது அறிவியல் அடிப்படையைக் கொண்டதல்ல; மாறாக, ‘‘போலி அறிவியல் (விஞ்ஞானம்)’’ (ழிஷீt ஷிநீவீமீஸீநீமீ தீut றிsமீuபீஷீ ஷிநீவீமீஸீநீமீ) என்றாலும், பா.ஜ.க. ஆட்சியில் முரளி மனோகர் ஜோஷி மனிதவளத் துறை அமைச்சராக, வாஜ்பேயி தலைமையிலான ஒன்றிய அரசில் இருந்தபோது, பல்கலைக் கழகங்களில் இப்படி ஒரு மூடத்தனத்தைப் படிப்பாக ஆக்கி, விருப்பத்தைத் தூண்ட, அப்பல்கலைக் கழகங்களுக்கு நிதி உதவி உண்டு என்றும் நாக்கில் தேனைத் தடவினர்.

அதன் தீய விளைவு நாட்டில் பல பல்கலைக் கழகங்களில் இந்தப் போலி அறிவியல் துறையும் ஏற்படுத்தப்பட்டு இயங்குகிறது!
எவ்வகையில் சரியானது?

அது ஒருபுறமிருந்தாலும், உயர்நீதிமன்ற நீதிபதி இப்படி அறிவியல் மனப்பாங்குக்கு முரணான வகையில், அடிப்படைக் கடமையைச் செய்யாது இப்படி மூடத்தனத்திற்கு போலி விஞ்ஞானத்திற்குப் புத்தாக்கம் தருவதுபோல் நடந்து கொள்ளுவது எவ்வகையில் சரியானது?
இது அவர் எடுத்த அரசமைப்புச் சட்ட உறுதிமொழிக்கு முற்றிலும் முரண் அல்லவா?

உயர்ஜாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு வழக்கில் 3 இல் 2 என்று தீர்ப்பு வந்த அமர்வில், தீர்ப்பு எழுதிய ஒரு நீதிபதி (உச்சநீதிமன்றத்தில்) ‘‘டாக்டர் அம்பேத்கர் இட ஒதுக்கீடு 10 ஆண்டுகள் இருந்தால் போதும் என்று கூறியிருந்தார்’’ என்று எழுதியுள்ளார்!

அரசியல் ரிசர்வேஷன் வேறு; கல்வி, உத்தியோக இடஒதுக்கீடு வேறு என்ற வேறுபாடுகூட அறியாமல் இப்படி தீர்ப்பில் எழுதியது, ஏனோ புரியவில்லை!

நீதி இப்படி திரிபுகளுக்கு இரையாகக் கூடாது என்பதே பகுத்தறிவாளர்களின் கவலை!

இப்படிப்பட்ட சூழலில், தங்கள் ஆணையின் மூலம் மனிதம் தழைக்கச் செய்தார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள்!
மனிதர்கள், செவ்வாய்க் கிரகத்திற்குச் சென்று ஆய்வு (விண்வெளி ஆய்வு) நடத்திடும் இந்த அறிவியல் யுகத்தில், இப்படி ஒரு விசித்திர ஆணை அலகாபாத் உயர்நீதிமன்றத்திலிருந்து கிளம்பியது குறித்து வேதனைப்பட்டாலும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதனை உணர்ந்து, உடனே தடையாணை வழங்கியது, நீதியை மட்டும் காப்பாற்றிடவில்லை; கூடுதலாக அறிவியல் மனப்பாங்குக்கும் பாதுகாப்பு அளித்து ‘‘மனிதம்‘’ தழைக்க உதவியுள்ளார்கள்.அவர்களுக்கு பாராட்டுகள்!’’ என்று ஆசிரியர் அவர்கள் தமது அறிக்கையில் கூறியுள்ளார்கள்.

எனவே, அரசியல் சாசனப்படி பதவியேற்றுக்கொண்டுள்ள நீதிபதிகள், அரசியல் சட்டத்தை மதித்து, அறிவியல் அடிப்படையில் செயல்படவேண்டியது கட்டாயக் கடமையாகும். சமூக நம்பிக்கை என்பது வேறு; சட்டப் பார்வை வேறு என்பதை நீதிபதிகள் அறிந்து செயல்பட வேண்டியது கட்டாயக் கடமையாகும்.♦


சனி, 8 ஜூன், 2024

கிரகணத்தைப் பார்த்தால் ஆபத்தா?


அறிவியல் : 

த.வி.வெங்கடேஸ்வரன்

முதுநிலை விஞ்ஞானி, புதுடில்லி
முந்தைய சூரிய சந்திர கிரகணங்களின் போது ஒவ்வொருமுறையும் உண்மையில்லாச் செய்திகள் பரப்பியது போலவே, அக்டோபர் 25ஆம் தேதி நிகழ்ந்த சூரிய கிரகணம் குறித்தும் பரப்பி வருகின்றனர்.
தவறான செய்திகளை சூரிய கிரகணம் ஏற்படும் என்பது பாரம்பரியப்
பஞ்சாங்கம் கணித்தபடி நடக்கிறது, மேலும் கிரகணக் காலங்களை மிகச்சரியாக நம்
பஞ்சாங்கங்கள் கணித்து உள்ளன என்றும் கூறிக் கொள்கின்றனர்.

கிரகணச் சமயத்தில் கர்ப்பிணிப் பெண்கள் வெளியே வரவேண்டாம் எனவும் வாட்ஸ்ஆப் செய்திகள் காட்டுத் தீ போலப் பரவி வருகிறது.
ஆனால், மிகத் துல்லியமாக பஞ்சாங்கம் கணிப்பது இல்லை என்பதோடு, கிரகணத்தின் போது எந்தவிதமான மர்மக் கதிர்களும் வெளிப்படுவதும் இல்லை. இந்த அறிவியல் உண்மையை நாம் உரக்கச் சொல்ல வேண்டி இருக்கிறது.

பிழைபட்ட பஞ்சாங்கக் கணிப்பு
சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே உள்ள கோணம் தான் திதி. சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே 12 பாகை (டிகிரி) கொண்டது ஒரு திதி. சுக்லபட்ச பிரதமை எனும் முதல் திதி 0_12 பாகை [அதாவது வளர்பிறை கால முதல் திதி என்றே பொருள்]; சுக்லபட்ச துவிதியை எனும் இரண்டாம் திதி 12_24 டிகிரி என அடுத்தடுத்த திதிகள் அமையும். இறுதி 348_360 பாகை வரை அமாவாசை திதி ஆகும்.
நிலவு, பூமி, சூரியன் என்ற வரிசையில் ஒரே தளத்தில் அமையும்போது பவுர்ணமி திதி முடிவுக்கு வரும். அடுத்த திதியான கிருஷ்ண பட்ச பிரதமை (தேய் பிறைக் கால முதல் திதி) துவங்கும்.
அதேபோல பூமி, நிலவு, சூரியன் என்ற வரிசையில் ஒரே தளத்தில் அமையும்போது அமாவாசை திதி முடிந்து அடுத்த திதியான சுக்லபட்ச பிரதமை துவங்கும் (முதலாம் வளர் பிறை). அதாவது சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே பூச்சியம் பாகை அமையும்போது அமாவாசை திதி முடிவுக்கு வரும்.
எனவே, சூரிய கிரகணம் ஏற்பட்டால் அமாவாசை முடிவுறும் நிலையில் தான் உச்சபட்ச கிரகணம் _ அதிகபட்ச மறைப்பு _ ஏற்படவேண்டும்.
அதாவது, அக்டோபர் 25 அன்று நிகழும் சூரிய கிரகணத்தின் போது, சென்னையில் உச்சபட்ச சூரிய கிரகணம் 17:42 மணிக்கு நிகழும்.
ஆனால், சென்னையில் அமாவாசை திதி முடியும் காலம் 16:18 என வாக்கியப்
பஞ்சாங்கமும், 16:19 என திருக்கணிதப்
பஞ்சாங்கமும் கூறுகிறது. இது சரியல்ல. எனவே, இந்த இரண்டு வகைப் பஞ்சாங்கங்கள் கூறுவதும் பிழையானது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

பஞ்சாங்கம் என்றால் என்ன?
பஞ்சாங்கம் என்பது பல்லி விழுந்த பலன் போலக் குறி சொல்லும் புத்தகம் எனவும், கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் நம் வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை வெளிப்படுத்தும் கணிதம் எனவும் கருதப்படுகிறது.
நவீன நாள்காட்டிகள் உருவாக்குவதற்கு முன்னர் இருந்த நாள்காட்டி தான் பஞ்சாங்கம். பஞ்ச +அங்கம் அதாவது வாரம், திதி (நிலவின் பிறை), நட்சத்திரம் (அன்றைய வானில் நிலவின் நிலை), கர்ணம் (திதியின் இரண்டு பகுதி),யோகம்(நிலவு மற்றும் சூரிய நிலையின் கோணத்தின் கூட்டு) ஆகிய அய்ந்து வானியல் நிலைகளைக் கொண்டுள்ள பட்டியல்.
குறிப்பிட்ட நாளில் நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் என்ன திதி இருக்கும், என்ன நட்சத்திரம் இருக்கும் என்பது போல, பஞ்ச + அங்கம் பட்டியல் செய்வது ஆகும்.

பஞ்சாங்கக் குளறுபடி
நவீன அறிவியல்படி நட்சத்திர ஆண்டு சுமார் 365.25636 நாள்கள் ஆகும். ஆனால், ஆரியபட்டரின் சித்தாந்தத்தின் படி இது 365. 258681 நாள்கள், சூரிய சித்தாந்தத்தின்படி இது 365.258756 நாள்கள்.
வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 248 நாள்-களுக்கு ஒருமுறை நிலவு தன் நிலையை வானில் மறுபடி துல்லியமாக எட்டும். ஆனால், நவீன அறிவியலின்படி 247.99095 நாள்களுக்கு ஒரு முறை எட்டிவிடும்.
பஞ்சாங்கக் கணிதம் உருவானது ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்; அப்போது இந்தப் பிழைகள் பெரிதும் பாதிப்பு தரவில்லை. ஆனால், காலப்போக்கில் இந்தச் சிறுசிறு பிசிறுகள் ஒன்று சேர்ந்து பெரும் பிழையாக மாறிவிட்டது.
இடைக்காலத்தில் ஏற்பட்ட சமூக இறுக்கத்தின் தொடர்ச்சியாக வாக்கியக் கரணம் போன்ற நூல்களை “கடவுள் அருளிச் செய்தது” எனக் கூறத் துவங்கினர்.
எனவே, கடவுளின் வாக்காக வாக்கியங்கள் கருதப்பட்டுப் பிழை திருத்தப்படவில்லை. இதன் தொடர்ச்சியாக இன்று பஞ்சாங்கக் கணிப்புக்கும் வான் பொருள்களின் மெய்யான நிலைக்கும் பெரும் வேறுபாடு உள்ளது.
இவ்வாறு பஞ்சாங்கத்தின் பற்பல அபத்தமான பிழைகள் வானவியல் அறிந்தவர்-களுக்கு வெள்ளிடை மலை போல் விளங்கும்.

குட்டு வெளிப்படும்!
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட சூத்திரங்கள் பலநூறு ஆண்டுகளாக உண்மை கிரக நிலையுடன் ஒப்பிட்டுத் திருத்தம் செய்யாமல் அப்படியே பயன்படுத்துவதால் பஞ்சாங்கத் தகவல்கள் உண்மையான கிரக நிலையிலிருந்து வேறுபட்டு அமைகின்றன.
கிரகணம் போன்ற வெறும் கண்களால் எளிதில் காணக்கூடிய நிகழ்வுகள் பிழையாக இருந்தால் ஊர்மக்கள் கைகொட்டிச் சிரிப்பார்கள் என்பதால், பஞ்சாங்கம் பிரசுரம் செய்பவர்கள் தங்கள் கணிப்பை ஒதுக்கி வைத்துவிட்டு அறிவியல் நிறுவனமான வான்பொருள் நிலை கணிப்பு மய்யம், கொல்கத்தா (Positional Astronomy Centre, Kolkata)  கணிக்கும் தரவுகளை அப்படியே தங்களது பதிப்பில் பிரசுரம் செய்து விடுகிறார்கள்.
எனவேதான், கிரகணத்தின் துவக்கம் முடிவு போன்றவை ஒத்து வருவது போல நமக்குப் புலப்படுகின்றன. ஆனால், திதி போன்ற அம்சங்களைப் பாரம்பரியச் சூத்திரம் கொண்டு கணிக்கிறார்கள். எனவே தான் அக்டோபர் 25 அன்று சென்னையில் 17:42 மணிக்கு முடியும் அமாவாசையை 16:18 என வாக்கியப் பஞ்சாங்கமும், 16:19 என திருக்கணிதப் பஞ்சாங்கமும் பிழையாகக் கூறுகின்றன.
இரவு வானில் நிலவு அற் று இருக்கும்போது அந்த நாள் அமாவாசை இரவு என எளிதில் காணலாம். ஆனால் மிகச் சரியாக பூமி, நிலவு, சூரியன் ஒரே தளத்தில் நின்று அமாவாசை திதி முடிவுறுவதை வெறும் கண்களால் காணவியலாது.
கிரகணம் குறித்த விவரங்களை மேலோட்ட-மாகப் பார்த்தால் பஞ்சாங்கம் சரியாகத்தானே கூறுகிறது எனக் கருதத் துணிவோம். ஆனால், பஞ்சாங்கக் கணித விவரங்களை உற்றுநோக்கினால் குட்டு வெளிப்பட்டு விடும்.

மர்மக் கதிர்கள்
வெயிலில் குடையைக் கொண்டு சூரியனை மறைத்து நிழல் ஏற்படுவது போல, நிலவு, சூரியனுக்கு முன்புறமாகச் செல்லும்போது சில மணித்துளிகள் சூரியனை மறைக்கிறது. இதுவே கிரகணம்.
அதாவது குடை, மரம், கட்டடம் போல நிலவு ஏற்படுத்தும் வெறும் நிழல் தான் கிரகணம்.
கிரகணச் சமயத்தில் சூரியனில் எந்தவொரு சிறப்பு மாற்றமும் ஏற்படுவதில்லை. எப்போதும் போல நாற்புறமும் தன் ஒளியை வீசிக்கொண்டு இருக்கிறது. வேறு எந்த சிறப்பு மர்மக் கதிர்களும் வெளிப்படுவது இல்லை.
பூமி இருக்கும் திசையில் இடையில் நிலவு வந்து மறைத்து விடுவதால் பூமியில் சில பகுதிகளில் சூரிய முகம் மறைக்கப்படுகிறது. அந்தப் பகுதியில் மட்டும் கிரகணம் தென்படும்.
உலகில் வேறெங்கும் கிரகணத்தைக் கண்டு கர்ப்பிணிப் பெண்கள் ஓடி ஒளிந்து கொள்வதில்லை. அங்கெல்லாம் கர்ப்பிணிப் பெண்களுக்கும் வயிற்றில் வளரும் குழந்தை-களுக்கும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படுவதில்லை.
கருக்கொண்ட பூச்சிகள் முதல் விலங்குகள் வரை அதன் போக்கில் கிரகணத்தின் போது வெளியே திரிந்து கொண்டுதான் உள்ளன. அவற்றுக்கும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படுவதில்லை.

பாதுகாப்பாகக் காண்போம்!
சூரிய சந்திர கிரகணம் என்பது அற்புதமான வானக்காட்சி. இயற்கையின் இந்த விளையாட்டைப் பாதுகாப்பாகக் கண்டு களிக்க வேண்டும். வெறும் நிழலைக் கண்டு அச்சப்படுவது பேதைமை.
தமிழ்நாடு அறிவியல் மய்யம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்ற பல்வேறு அரசு மற்றும் தன்னார்வ அறிவியல் பிரச்சார அமைப்புகள் பொதுமக்கள் பாதுகாப்பாக கிரகணத்தைக் கண்டுகளிக்கும் வண்ணம் வெவ்வேறு இடங்களில் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.
உங்கள் பகுதியில் நடைபெறும் நிகழ்வு-களைக் கண்டறிந்து பங்கேற்க வேண்டும்.


செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

நாடி ஜோதிடம் உண்மையா?-2

மூடநம்பிக்கை : 

2022 ஆகஸ்ட் 01-15 2022 மற்றவர்கள்

ஒளிமதி

மேலே கூறப்பட்டவை, மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கூறியதாகக் கண்ணதாசன் குறிப்பிட்டவை-யாகும்.
நல்லவேளை மதுரை ஆதீனகர்த்தர் நாடி ஜோதிடம் பார்க்கப் போகவில்லை. போயிருந்தால் நாடி ஜோதிடன் தவித்துப் போயிருப்பான்.
“ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்’’ என்ற இவ்வளவு நீட்டுப் பெயருக்கு எப்படிச் சமாளிப்பது? ஏகப்பட்ட ‘கப்சாக்கள்’ அல்லவா அடிக்க வேண்டும்.
கோவை கவுமார மடத்தின் நிறுவனர் இராமக்குட்டிக்கு பிற்காலத்தில் பெயர் ‘இராமானந்தர்’ என்று மாறும் என்று நாடி ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகச் சொல்கிறார்.
அப்படியென்றால், நம்ம ஜெயலலிதா நாடி ஜோதிடம் பார்க்கப் போயிருந்தால், புரட்சித்தலைவி, புரட்சித்தாய், தமிழ்த்தாய், காவிரித்தாய், தெய்வத்தாய், அன்னைமேரி, கன்னிமேரி, இதயத்தாய், காவல்தாய், சமூகநீதி காத்த வீராங்கனை… என்றெல்லாம் பெயர் நாடி ஏட்டில் கண்டிருந்திருக்குமா?
இன்றைக்கு அப்பன் ஆத்தாள் பெயர் தெரியாமல் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இருக்கிறார்களே, அவர்களை நாடி ஜோதிடக்காரனிடம் அழைத்துச் சென்று அப்பா பெயர், ஆத்தாள் பெயர், ஊர்ப் பெயர் கேட்டால் சொல்வானா?

பெயர் என்ன என்று கேட்டால், நேரடியாக ஜான் என்று சொல்ல வேண்டியதுதானே? அதை விடுத்து ‘முழத்தில் பாதி’ என்று ஏன் குறிப்பிட வேண்டும்?
‘ஜான்’ என்பது இரண்டெழுத்து. ‘முழத்தில் பாதி’ என்பது ஏழு எழுத்து. எப்படிச் சொல்வது சுருக்கம்?
மூக்கு என்று சொல்வதை விட்டுவிட்டு நெத்திக்குக் கீழே கண்களுக்கு நடுவே, உதட்டுக்கு மேலே உள்ள உறுப்பு என்றால் அது எவ்வளவு பைத்தியக்காரத்தனமோ அவ்வளவு பைத்தியக்காரத்தனம் இது!
அது மட்டுமல்ல, முழத்தில் பாதி என்றால் ஜாண்; ‘ஜான்’ என்பதற்கு ‘ன்’ இரண்டு சுழி. ஆனால், ஜாண் என்பதற்கு ‘ண்’ மூன்று சுழி.
நாடி சாஸ்திரமெல்லாம் பரமசிவன் பார்வதிக்குச் சொன்னது என்று கூறப்படுகிற போது, பிழைபடச் சொல்லியிருப்பார்களோ?
பீட்டர், மேரி, இன்குலாப், அய்சக், உட்ஸ் என்ற பெயரெல்லாம் நாடி சாஸ்திரத்தில் இருக்கிறதா?

அய்ந்தும் ஒன்றும் வதனமெனப் பெயர் சூட்டி என்றால், அய்ந்து + ஒன்று = ஆறு என்று மட்டுந்தான் பொருள் கொள்ள முடியுமா? 51 என்று பொருள் கொள்ள முடியாதா?
‘அய்ந்தும் ஒன்றும் வதனம்’’ என்பதற்கு அய்ந்தும் ஒன்றிய (ஒன்று சேர்ந்த) வதனம் அதாவது அய்ந்து முகம் என்று ஏன் பொருள் கொள்ளக் கூடாது? அய்ந்து முகம் உடைய சிவபெருமான் பெயராக ஏன் இருக்கக் கூடாது? சிவனுக்கு அய்ந்து முகம் என்பது புராணம்.
‘அய்ந்தும் ஒன்றும் வதனம்’ என்பதற்கு ஆறுமுகம் என்று மட்டுந்தான் அர்த்தமா? சண்முகம் என்று பொருள் இல்லையா? சண்முகம் என்பதன் பொருள் ஆறுமுகந்தானே?
அதாவது பலருக்கும் பொருந்தும்படி திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்டவை நாடி சாஸ்திர ஏடுகள் என்பது இதிலிருந்து விளங்குகிறது அல்லவா?
எந்த நாடி ஜோதிடனும் உடனே ஏடு கொடுப்பதில்லை. தேடி எடுக்க வேண்டும் என்றுதான் சொல்லுவான். காலஅவகாசம் எடுப்பான். காரணம், அதற்குள் பழைய ஓலைகள் தயார் செய்துகொள்ள.

இந்துவைப் போல மாறுவேடத்தில் சென்ற முஸ்லிம் பெயர் அப்துல் ரஹ்மான் என்று இருந்ததாம். இந்தப் பெயர் மட்டும் எப்படி ஓலையில் நேரடியாக எழுதப்பட்டிருந்தது? ‘ஜான்’ என்ற பெயருக்கு ‘முழத்தில் பாதி’ என்று இருந்தது போல். இதற்கும் மீட்டர், கெஜக்கோல் என்று ஏதாவது எழுதப்பட்டிருக்க வேண்டாமா?
அப்துல் ரஹ்மான் என்ற நீண்ட பெயரே நேரடியாக நாடி ஏட்டில் எழுதப்பட்டிருக்கும் போது ‘சூசை’ என்ற சுருக்கமான பெயர் நேரடியாக எழுதப்பட்டிருக்கலாமே? அதைவிட்டு, சாவில் ஆறும் சாவில் ஒன்பதும் என்று ஏன் வளர்த்தலாக, மறைமுகமாகச் சொல்லப்பட வேண்டும்? சூசை என்பது தமிழ் வார்த்தை அல்ல. அப்படியிருக்க தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை எப்படிப் பொருந்தும்?

எல்லாம் மோசடிக்காகத்தான் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?இந்த ஏடுகளைக் கண்டுபிடிக்க மதுரை ஆதினகர்த்தர் 20 ஆண்டுகளுக்கு முன்னே ஒரு லட்சம் ரூபாய் வரை செலவிட்டாராம். எதற்கு? ஏடு கண்டு பிடிக்கவா? ‘ஏடு’ செட்டப் செய்யவா? வாசகர்கள் முடிவு செய்துகொள்ள விரும்புகிறேன்.
“புயலாடு புலவன் சரலில் பூமகள் மதிகோலாக
வெயில் மகன் போகி நண்டில், வேதியன் தேள் மீதாக
செயுமிக்கோள் நிலையில் தோற்றும் சேயாறார்க்குயிர் – சியத்தே
பயன்தரு மிலனின் ஜென்மம், பாண்டியன் நாட்டுக்குள்ளே’’
அதாவது இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள கிரக நிலையில் பிறக்கின்றவன் பாண்டியன் நாட்டுக்குள்ளே பிறப்பான் என்பதாகும்.

(ஆதாரம்: வேலு அவர்கள் எழுதிய ‘கவுமார ஜோதிடப் புரட்டு’ என்னும் கட்டுரை)
சேர, சோழ, பாண்டிய நாடு என்னும் பிரிவு இடைக்காலத்தில் ஏற்பட்ட ஒரு பிரிவாகும். ஆனால், நாடி ஜோதிடமோ ஆதிநாளில் இறைவனால் கூறப்பட்டது என்று சொல்லப்படுகிறது. அதாவது சேர, சோழ, பாண்டிய நாட்டுப் பிரிவுகள் ஏற்படாத காலத்தில் எழுதப்பட்டதாகச் சொல்லப்-படுகிறது. அப்படியென்றால்பாண்டிய நாட்டுப் பிரிவுகள் தோன்றாத காலத்தில் அந்தக் கிரக நிலையில் பிறந்தவர்கள் எந்தப் பகுதியில் பிறப்பார்கள்? அப்போது பாண்டிய நாடு இல்லையே!
அது மட்டுமல்ல. இப்போது தமிழ்நாடு என்றாகி மதுரை மாவட்டம், விருதுநகர் மாவட்டம், நெல்லை மாவட்டம் என்று புதிய பெயர்கள் தோன்றிய பின் அந்தக் கிரக நிலையில் இன்றைக்குப் பிறக்கிறவன் எப்படிப் பாண்டிய நாட்டில் பிறக்க முடியும்?
இந்த நாடி ஜோதிடப் பாடல் பாண்டிய நாடு நடைமுறையில் இருந்த காலத்தில் எழுதப்பட்டது. அதனால்தான் அதற்கு முந்திய காலத்திற்கும் பிந்திய காலத்திற்கும் பொருந்தவில்லை.
எனவே, நாடி ஜோதிடப் பாடல்கள் இறைவனால் எழுதப்பட்டவை அல்ல என்பதும், அது காலத்திற்கு ஏற்ப மோசடிப் பேர்வழிகளால் எழுதிக் கொள்ளப்படுவது என்பதும் தெளிவாகிறது.


திங்கள், 17 ஏப்ரல், 2023

ஜோதிடம் உண்மையா?

மூடநம்பிக்கை : ஜோதிடம் உண்மையா?

2022 மற்றவர்கள் ஜுலை 01-15 2022

ஒளிமதி

உலகில் நடைபெறுகின்ற மோசடிகள் அனைத்தும் மனிதனிடமுள்ள பலவீனத்தை அடிப்படையாக வைத்தே செய்யப்படுகின்றன. அவ்வாறே ஜோதிட மோசடியும் மனிதனின் இயல்பறிந்து செய்யப்படுகிறது.
மறைக்கப்படுகின்ற எந்தவொன்றையும் காண வேண்டும் என்கிற ஆசை எழுவது மனிதனுக்கு இயல்பு.
எனவே, நடக்கப் போவதை அறிவிக்கிறேன் என்று யாராவது கூறியவுடன் ஆவலோடு அங்குச் செல்கிறான். அதற்காகச் செலவிடவும் தயாராக இருக்கிறான். இந்த மனநிலையைப் பயன்படுத்திக் காசு பறிக்கக் கையாளப்படுகின்ற யுக்தியே ஜோதிடம்.
இவ்வாறு நாம் கூறியவுடன், “ஜோதிடம் என்பது மூடநம்பிக்கைகளைப் போல அல்ல; இது அறிவியல் சார்ந்தது. கிரகங்களின் இயக்கத்திற்கும் மனித நடவடிக்கைகளுக்கும் சம்பந்தம் உண்டு. அந்த அடிப்படையில் கணிக்கப்படுவதே ஜோதிடம்’’ என்று சிலர் கூறுகின்றனர்.
எனவே, கிரகங்களின் இயக்கத்திற்கும் மனித வாழ்க்கை அமைவதற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்பதை முதலில் ஆராய வேண்டும்.
ஒரு குழந்தை பிறக்கும்போது, அமைந்துள்ள கிரகங்களின் நிலைக்கேற்பவே. அக்குழந்தையின் வாழ்க்கை அமைகிறது என்பதே ஜோதிடத்தின் அடிப்படைத் தத்துவம்.
இத்தத்துவம் சரியென்றால் ஜோதிடம் என்பது சரி _ உண்மை; இத்தத்துவம் தவறு என்றால் ஜோதிடம் என்பதும் தவறு _ பொய்.
ஒரு குழந்தை பிறக்கும்போது இருக்கின்ற கிரகங்களின் நிலைக்கு ஏற்பவே. அக்குழந்தை-யின் வாழ்க்கை அமையும் என்றால், அதே நேரத்தில் பிறக்கின்ற அத்தனை குழந்தைகளின் வாழ்க்கையும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் அல்லவா? ஆனால், அவ்வாறு இருக்கிறதா என்றால் இல்லை.
ஒரு நொடிப்பொழுதில் உலகில் நூற்றுக்-கணக்கான குழந்தைகள் பிறக்கின்றன. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கின்ற குழந்தை இறந்தால், ஜோதிடத் தத்துவப்படி. அந்த நேரத்தில் பிறக்கின்ற அத்தனை குழந்தைகளும் பிறந்தவுடன் இறந்து போக வேண்டும். ஆனால், அவ்வாறு இறந்து போகின்றனவா? இல்லையே!
பிறக்கின்ற நேரத்தில் இருக்கின்ற கிரக நிலைக்கேற்பவே வாழ்நாள் அமையும் என்றால், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பிறக்கின்ற நாய், பன்றி, ஈ, கொசு, யானை, சிங்கம் இவற்றின் வாழ்க்கைகூட ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும். இருக்கின்றதா? இல்லையே!
பிறக்கின்ற இடத்தையும் பார்க்க வேண்டும் என்று சிலர் கூறுவர். அப்படியே பார்த்தாலும் ஒரு குறிப்பிட்ட நாட்டில் பிறக்கின்ற அத்தனை குழந்தைகளும் ஒரே மாதிரி வாழ்கின்றனவா? இல்லையே!
எனவே, ஜோதிடத்தின் அடிப்படைத் தத்துவமே பொய் என்பது புரிகிறதல்லவா? அடிப்படையே பொய் என்றால், அதன் மீது புனையப்படும் மற்ற ஜோதிட அளப்புகள் அனைத்தும் அசல் பொய்தானே?
மேலும், கிரகங்களின் இயக்கத்திற்கும், மனித வாழ்க்கை அமைவதற்கும் தொடர்பு இருப்பதாகவும், அதனடிப்படையில் கணிக்கப்-படும் ஜோதிடம் அறிவியல் சார்ந்தது என்றும் நம்பப்படுவது எவ்வளவு அறியாமை!
“நாயாய்ப் பிறந்தாலும் நல்ல நேரத்தில் பிறக்க வேண்டும்!’’ என்று, பிறக்கின்ற நேரத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் எவ்வளவு பிதற்றலானது! நன்றாகச் சிந்திக்க வேண்டும்.
அறிவியல் உண்மைப்படி சூரியன் இடம் பெயராமல் ஒரே இடத்தில் தன்னைத்தானே சுழற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால், ஜோதிடம் சூரியன் இடம் பெயர்வதாகக் கூறுகிறது. அப்படியிருக்க ஜோதிடத்தின் அடிப்படையே தவறு. அறிவியலுக்கு முரண். எனவே, ஜோதிடம் அறிவியல் அல்லவே.
மேலும் இப்போது புதுப்புது கிரகங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அப்படியிருக்க 9 கிரகங்களை மட்டும் வைத்து ஜோதிடம் சொல்வது எப்படிச் சரியாகும்? ஆக கிரகங்கள் எல்லாவற்றையும் கணக்கில் கொள்ளாத ஜோதிடம் மோசடியல்லவா? பொய் அல்லவா?
இனி, ஜோதிடத் தத்துவப்படியே, ஜோதிடக் கணிப்பு சரியா என்பதை ஆராய்வோம்.
பிறந்த நேரம் எது?
பிறந்த நேரத்தை வைத்தே ஜோதிடம் கணிக்கப்படுவதால் ஜோதிடத்திற்கு அடிப்படை பிறந்த நேரமேயாகும். ஆனால், பிறந்த நேரம் எது என்பதில் தெளிவு இருக்கிறதா?
குழந்தைக்கான ‘கரு’ உருவான (பிறந்த) நேரமா? பிறக்கும் குழந்தையின் தலை வெளியில் தெரியும் நேரமா? குழந்தை முழுவதும் வெளியில் வந்த நேரமா? அல்லது தொப்புள் கொடி துண்டிக்கப்பட்டுத் தாயின் தொடர்பு துண்டிக்கப்பட்ட நேரமா? அறுவைச் சிகிச்சையெனில், வயிற்றைப் பிளந்து வெளியே எடுத்த நேரமா? அப்படி பிளந்து எடுப்பது இயற்கைக்கு முரண் என்பதால் அதற்கு ஜாதகம் பொருந்தி வராதே! அப்படிப்பட்ட குழந்தைகள் தானே இன்று அதிகம். அக்குழந்தைகளுக்கு ஜாதகம் கிடையாதா?
குறைப் பிரசவத்தில் (மிஸீநீuதீணீtவீஷீஸீ) கருவியில் வைத்திருக்கிறார்களே அதில் பிறந்த நேரம் எது? தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட நேரமா? அல்லது கருவியை விட்டு வெளியே எடுக்கும் நேரமா?
எது?
லக்கினம் மற்றும் நட்சத்திரக் கணக்கு:
ஜோதிடம் என்பது நேரம், கிழமை, தேதி, மாதம், வருடம், லக்கினம், நட்சத்திரம் ஆகியவற்றைக் கொண்டே கணக்கிடப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட லக்கினத்தில் நட்சத்திரத்-தில் நாட்டில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பிறக்கின்றன.
ஒரு லக்கினத்திற்கு 4லு முதல் 5லு நாழிகை வரை கால அளவு. ஒரு நட்சத்திரத்திற்கு 60 நாழிகை.
உதாரணமாக விருச்சிக லக்கினத்திற்கு 5ரு நாழிகை அதாவது 126 நிமிடம். சுமார் இரண்டு மணி நேரம். அந்த இரண்டு மணி நேரத்தில் நாட்டில் எத்தனை நூறு குழந்தைகள் பிறக்கும். அந்தக் குழந்தைகள் எல்லாவற்றிற்கும் வாழ்வு ஒரே மாதிரியாக அமையுமா? அமைவ-தில்லையே!
அந்த நேரத்தில் பிறந்த ஒரு சில குழந்தைகள் இறந்து, மற்ற குழந்தைகள் உயிருடன் இருந்தாலே ஜோதிடம் பொய்-யென்றாகி விடும் அல்லவா?
முரண்பாடான நம்பிக்கை:
பிறக்கின்ற நேரத்தில், கிரகங்கள் இருக்கின்ற நிலைக்கேற்பத்தான் வாழ்க்கை என்றால், கடவுளுக்கும், விதிக்கும், பூர்வ ஜென்ம பலன்களுக்கும் என்ன வேலை?
பிறந்த நேரக் கிரக நிலைக்கேற்பத்தான் வாழ்வு என்றால், நாம் பிறந்தபோதே நமது வாழ்வு இப்படித்தான் என்று தீர்மானம் ஆகிவிடுகிறது. பிறகு கடவுள் பிரார்த்தனை ஏன்? கணக்கற்ற முயற்சிகள் ஏன்? இவற்றால் அதை மாற்ற முடியுமா?
பிறந்தபோதே நம் வாழ்வு இப்படித்தான் அமையப் போகிறது என்று தீர்மானம் ஆகிவிட்ட பிறகு, ஒவ்வொரு கட்டத்திலும் நேரங்காலம் பார்த்து ஏன் காரியம் செய்ய வேண்டும்? இராகு காலம், எமகண்டம், அஷ்டமி, நவமி இவை ஏன் பார்க்க வேண்டும்?
இவற்றைப் பார்த்து நடந்தால் நமது வாழ்வு மாறி விடுமா? மாறிவிடும் என்றால், பிறந்த நேரத்தின்படி வாழ்வு அமையும் என்ற ஜோதிட நம்பிக்கை தவறாகி விடாதா?
கிரகத்தின் நிலைக்கேற்ப வாழ்வு அமையும் என்றால் விதியை நம்பக் கூடாது; பூர்வ ஜென்ம பலனை நம்பக் கூடாது; கடவுளை நம்பக் கூடாது.
காரணம், கிரக நிலைப்படிதான் வாழ்வு என்றால் கடவுளுக்கு நம் வாழ்வில் என்ன பங்கு? ஒன்றும் இல்லையே!
(தொடரும்…)