பக்கங்கள்

புதன், 17 டிசம்பர், 2025

வர்ண தர்மத்தை நிலைநாட்டிய வாஸ்து – ஒரு மூடநம்பிக்கை! - சிகரம்



 வர்ணம்                                         வருணத்திற்கேற்ற மனை ஊரில் மனை இடம்

இருக்க வேண்டிய திசை

ஆரியப் பார்ப்பனர் –                               ஊரின் தெற்கே

சத்திரியர்       –                                             ஊரின் மேற்கே

வைசியர்       –                                             ஊரின் வடக்கே

சூத்திரன்       –                                             ஊரின் கிழக்கே

மண்ணின் நிறம்

ஆரியப் பார்ப்பனர் –                               பொன்னிற மண்

சத்திரியர்       –                                             சிவந்த மண்

வைசியர்       –                                             பச்சைநிற மண்

சூத்திரன்       –                                             கருப்புநிற மண்

மண்ணின் சுவை

ஆரியப் பார்ப்பனர் –                              இனிப்பு

சத்திரியர்       –                                             காரம்

வைசியர்       –                                             புளிப்பு

சூத்திரன்       –                                             கசப்பு

வர்ணத்திற்கேற்ப வாசல்

ஆரியப் பார்ப்பனர் –                               வடக்கு

சத்திரியர்       –                                             கிழக்கு

வைசியர்       –                                             தெற்கு

சூத்திரன்       –                                             மேற்கு

மேலே குறிப்பிட்டபடி, நால்வர்ணத்தினரும், குறிப்பிட்ட சுவை, நிறம் உடைய மண்ணில் ஊரின் குறிப்பிட்ட திசையில் மனையிடம் தேர்வு செய்து, குறிப்பிட்ட திசை நோக்கி தலைவாசலை வைத்திட வேண்டுமென்கிறது வாஸ்து சாஸ்திரம்.

இது சாஸ்திரமா? சதியா? பிறப்பினால் உயர்வு – தாழ்வு கற்பித்து, சமத்துவத்தை ஒழிக்கும் சதியே வாஸ்து!

வாஸ்து சாஸ்திரம் வர்ணாஸ்ரமத்தை நிலைநிறுத்த உருவாக்கப்பட்டது. மக்களைப் பிரித்து ஜாதியக் கட்டமைப்பாக உருவாக்க வாஸ்து ஒரு கருவி.

இன்று எல்லா மக்களிடையேயும் வர்ண வழியும் ஜாதி வழியும் பிரிக்க முடியாதபடி எண்ணற்ற மாற்றங்கள் உருவாகிவிட்டன. ஒரே குடும்பத்தில் புரோகிதர், வணிகர், தொழில் முனைவோர், கருத்தாலும் கரத்தாலும் உழைப்போர் என உருவாகிவிட்ட நிலை. தந்தை புரோகிதர், மகன்களில் ஒருவர் வணிகர், ஒருவர் தொழில் முனைவர், ஒருவர் ஆசிரியர், ஒரு தொழில் பணியாளர் என ஆகிவிட்ட நிலை. ஒரே குடும்பத்தில் பல்வேறு தொழில் சார்ந்த நிலைகள் என்றால், சமூக முழுமையும் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன.

அப்படிப்பட்ட, இன்றைய சூழலில் சாஸ்திர அடிப்படையிலான வர்ணாசிரம முறையே,  வழக்கொழிந்து வருகிறது. வர்ணாஸ்ரமமே சட்ட விரோதம். அப்படியிருக்க, வர்ண அடிப்படையில் மனை இடம் தேர்வு செய்வது எப்படி? குடி அமர்த்துவது எப்படி?

சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள ஆரியப் பார்ப்பனர்களுக்கும் சத்திரியர்களுக்கும், வலுவான நிலை உள்ள நிலங்கள் – முறையே பொன்னிறம், சிவப்பு நிறம், பச்சை நிற மனை நிலங்களைத் தேர்வு செய்கின்றனர். ஆனால், உழைக்கிற தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மழைக் காலத்தில் சேறும் சகதியும் உள்ள உவர் நிலம்.

இத்தகைய மனைத் தேர்வு அநீதி அல்லவா? இதற்குப் பெயர் சாஸ்திரமா? நம்புபவர் அறிவுடையவரா? மண்ணின் சுவையில்கூட உயர் வர்ண இன மக்களுக்கு, இனிப்பு, காரம், புளிப்பு என வைத்து கீழ்வர்ண மக்களுக்கு கசப்பு எனத் தேர்வு செய்யச் சொல்வது கொடுமையிலும் கொடுமை அல்லவா?

ஒரே ஊரில் தெற்கே பொன்னிற மண்ணும், மேற்கே சிவந்த மண்ணும், வடக்கே பச்சை நிற மண்ணும், கிழக்கே கருப்பு நிற மண்ணும் எங்காவது அமையுமா? பெரும்பாலும் ஒரே நிற மண் (அ) இருவகை மண்ணோ தான் இருக்க முடியும். வர்ண அடிப்படையில் மண் தேர்வு என்பது நடைமுறை சாத்தியமில்லாதது.

மனை இடம் அமைப்பு முறை

எங்கே மழை பெய்தாலும் வடகிழக்கு மூலையில் வடிநிலை அமைவதாக இருக்க வேண்டும் என்கின்றனர். இதன் மூலம் மேல் வர்ண மக்களுக்கு எந்த மழை புயல் வந்தாலும் பாதிப்பு இல்லாத இடத்தில் மனை; கீழ் குடிமக்களுக்கு எல்லாத் தொல்லைகளும் ஏற்பட வாய்ப்புள்ள மனை. அநீதியிலும் அநீதியல்லவா?  இப்படிக் கூறும் வாஸ்து ஒரு சாஸ்திரமா?

ஆரியப் பார்ப்பனர்கள் சிறுபான்மையினர் என்பதால், பெரும்பான்மை மக்களை அடக்கி, அடிமைப்படுத்தி, ஆதிக்கம் செலுத்த அம் மக்களின் மூளையில் மூடநம்பிக்கைகளைத் தொடர்ந்து புகுத்தி, மூளைச் சலவை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்படிப் புகுத்தப்பட்ட மூடநம்பிக்கைகளில் ஒன்றுதான் வாஸ்து.

ஆரியப் பார்ப்பனர்கள் புகுத்திய மூடநம்பிக்கைகள், அறிவியல் வளர்ச்சி-யினாலும், அறிவு வளர்ச்சியினாலும் மக்களால் புறக்கணிக்கப்படும் நிலை வந்ததும், அதைத் தடுத்து, மக்களுக்குத் தொடர்ந்து அவற்றின் மீது நம்பிக்கை இருக்கும்படி செய்ய, அவர்கள் புகுத்திய மூடநம்பிக்கைகளுக்கெல்லாம் அறிவியல் அடிப்படை இருப்பதாக தற்காலத்தில் கூறி வருகின்றனர்.

அவ்வகையில் வாஸ்துவும் அறிவியல் அடிப்படையிலானது. அதுவும் ஓர் அறிவியல்தான் என்று வாதிடுகின்றனர். எனவே, வாஸ்து அறிவியலா? அது அறிவியல் அடிப்படையில் உருவாக்கப்பட்டதா? சில நூற்றாண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட வாஸ்து இன்றைய உலக வளர்ச்சிக்கும், நடைமுறைக்கும் ஏற்றதா? என்பதை இனி ஆராய்வோம்.

அஸ்திவாரம் இல்லாத வாஸ்து:

வாஸ்து சாஸ்திரம் கட்டடக் கலை சார்ந்தது என்கிறார்கள். மேல் கட்டுமானம் பற்றிச் சொல்லுகின்ற வாஸ்து சாஸ்திரத்தில் கட்டடத்தின் மிக முக்கியமான அஸ்திவார அமைப்பு, ஆழங்கள் அமைப்பு பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. அஸ்திவாரம் இல்லாமல் வீடு ஏது? அஸ்திவாரம் இல்லாத கட்டடத்திற்கு வாஸ்து பூமி பூஜை போடலாமா? கட்டடக் கலை ஒரு முழுமையான அறிவியலாக வளர்ந்துள்ள இந்த நவீன உலகில் வாஸ்துவை நம்பி அஸ்திவாரம் இல்லாமல் பூஜை போட்டுக் காட்டுவார்களா? அஸ்திவாரம் போட்டுக் கட்டப்படும் கட்டடங்கள் அனைத்தும் வாஸ்துவுக்கு எதிரானதுதானே?

வாஸ்து உருவான காலத்தில் அஸ்திவாரம் எடுத்து வீடு கட்டும் முறை இல்லை. பழைய ஊர்களில் பழைய மண்சுவர் வீடுகளுக்கு பெரும்பாலும் அஸ்திவாரம் இருக்காது. மாறாக, அடிப்பாகம் அகன்றும் மேல் பாகம் குறுகியும் இருக்கும்! குறுக்குச் சுவரும் சேர்ந்து இருக்கும். கட்டட அறிவு வளராத காலத்தில் உருவாக்கப்பட்ட வாஸ்துவை இக்காலத்தில் ஏற்க முடியுமா?

இக்காலத் தேவைகள்
வாஸ்துவில் உண்டா?

இன்றைய நவீன காலத் தேவைகளான _ மேல்நிலைத் தொட்டி, கீழ்நிலைத் தொட்டி, செப்டிக் டேங்க், கழிவறை, அடுக்கு மாடிக் கட்டடங்கள், பாலங்கள், அணைகள், மேம்பாலங்கள், பாதாளக் கட்டமைப்புகள், குளிர்பதன அமைப்பு முறை, கட்டடங்களுக்கு வர்ணம் பூசுதல், மின் கட்டமைப்பு ஏற்படுத்துதல், குடிநீர் குழாய்க் கட்டமைப்பு, எரிவாயு கட்டமைப்பு, எதிர் ஒலி கேட்காத உள்ளமைப்பு போன்றவை பற்றி எந்தக் குறிப்பாவது வாஸ்துவில் உண்டா? வாஸ்து உருவான அக்காலச் சூழலில் இத்தகைய தேவைகள் – வளர்ச்சிகள் இல்லையே!

ஆனால், இன்றைய நவீனத் தேவைகள் அனைத்துக்கும் வாஸ்துப்படி வல்லுநர்கள் வழிகாட்டுகின்றனர். தங்கள் வருமானம் பெருக்க எல்லாவற்றுக்கும் தீர்வும் பரிகாரமும் கூறுகிறார்கள். வாஸ்து வல்லுநர்கள் ஒரே மாதிரியான பரிந்துரையும், பரிகாரமும் சொல்வதில்லை. பல வாஸ்து மேதைகளின் பரிந்துரைப்படி வீடுகளின் கட்டமைப்பில் மாற்றங்கள் செய்து செய்து நிலைகுலைந்து போனவர்களின் சோகக் கதைகள்தான் ஏராளம்.

இதிகாசக் காலம் தொட்டு இன்று வரை வாஸ்துவை நம்பிக் கெட்டுப் போனவர்களின் பட்டியல் சொன்னால், ‘அது விதிப்பயன்; யாராலும் அதைத் தடுக்க முடியாது’ என்று நழுவுகின்றனர். வாஸ்துவைவிட, விதி கர்மா தான் வலுவானது என்றால், வாஸ்துவை நாடி ஏன் போக வேண்டும்? வாஸ்துப்படி பரிகாரம் காண முடியும் என்பது ஏமாற்றுதானே! வாஸ்து வழிமுறைகள் நம்மை வாழ வைப்பதில்லை. வாஸ்து, சோதிடர்களை மட்டுமே வாழ வைக்கும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

வாஸ்து, கடவுள் நம்பிக்கைக்கும் விதி நம்பிக்கைக்கும் எதிரானது. கடவுள் அமைத்த விதிப்படி வாழ்க்கை என்றால், வாயிற்படியையும், சன்னலையும் மாற்றினால் வாழ்க்கை மாறும் என்பது கடவுளையும் விதியையும் மறுப்பதாகத்தானே பொருள்? எனவே, கடவுளை நம்புகின்றவன் வாஸ்துவை நம்பக் கூடாது!

தேவைக்கும் வசதிக்கும் ஏற்பவே வீடு வேண்டும்

  1. நல்ல காற்றோட்டம்
  2. நல்ல சூரிய வெளிச்சம்
  3. போதுமான தண்ணீர் வசதி
  4. கழிவுகளை வெளியேற்றும்
    வசதி

இவைதாம் அடிப்படைத் தேவைகள்.

இன்று காற்றும், நீரும், மண்ணும் மாசுபடுத்தப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் மாசுபடாத நிலைதான் மிக மிக முக்கியம். அத்தகைய இடம் தேடி வீட்டு மனை வாங்குவதும், வீடு கட்டுவதும்தான் அறிவுடைமை. காற்றும், நீரும், மண்ணும் மாசுபடாத சூழலில் நாம் கட்டடம் கட்ட வேண்டும். மாறாக, வாஸ்துப்படியாக என்று நலக்கேடாக வீடு கட்டக் கூடாது.

உலக மயமாக்கல் தாராள மயமாக்கல், தனியார் மயமாக்கல், சிக்கனச் செலவு, வாக்கு அரசியல், ஆடம்பர ஆர்ப்பாட்டம் என்று ஆகிவிட்ட நிலையில், வேலையின்மை, வருவாய் இன்மை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று எத்தனையோ இன்றைய உலகில் எதிர்கொள்ள வேண்டிய நிலையில், அதற்கேற்ப சிந்தித்துத் தீர்வு கண்டு, நல்வாழ்வை உருவாக்குவதே அறிவுடைமை! மாறாக, வாஸ்து எல்லாவற்றிற்கும் தீர்வு என்று எண்ணுவதும் வாஸ்துவைப் பின்பற்றுவதும் மடமை.

வயிற்று வலிக்கு எது காரணம் என்று கண்டு சிகிச்சை அளிக்க வேண்டும். மாறாக, கட்டிலை மாற்றி போட்டுப் படுப்பதும், தலையணையை மாற்றிப் போட்டுப் படுப்பதும் வயிற்று வலியைத் தீர்க்காது. எனவே, வாஸ்து என்ற மடமையைப் புறந்தள்ளி, அறிவியல் அடிப்படையில் வீடு அமைப்பதே சரியான செயல் ஆகும். 

- உண்மை இதழ், 1-15.25

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக