உலகில் நடைபெறுகின்ற மோசடிகள் அனைத்தும் மனிதருக்குள்ள பலவீனத்தை அடிப்படையாக வைத்தே செய்யப்படுகின்றன. அவ்வாறே ஜோதிட மோசடியும் மனிதரின் இயல்பறிந்து செய்யப்படுகிறது.
மறைக்கப்படுகின்ற எந்தவொன்றையும் காண வேண்டும் என்ற ஆசை எழுவது மனிதருக்கு இயல்பு. என்ன நடக்கப் போகிறது என்பது மனிதருக்கு முன்கூட்டியே தெரிவதில்லை. எனவே, வாழ்வில் நடக்கப் போவதை அறிந்து கொள்வதில் எல்லோருக்கும் இயல்பாகவே ஆசை அதிகம்.
எனவே, நடக்கப் போவதை அறிவிக்கிறேன் என்று யாராவது கூறியவுடன் ஆவலோடு அங்குச் செல்கிறார்கள். அதற்காகச் செலவிடவும் தயாராக இருக்கிறார்கள். இந்த மனநிலையைப் பயன்படுத்திக் காசு பறிக்கக் கையாளப்பட்ட யுக்தியே ஜோதிடம்.
இவ்வாறு நான் கூறியவுடன், “ஜோதிடம் என்பது மற்ற மூடநம்பிக்கைகளைப் போல அல்ல; அது அறிவியல் சார்ந்தது. கிரகங்களின் இயக்கத்திற்கும் மனித நடவடிக்கைகளுக்கும் தொடர்பு உண்டு. அந்த அடிப்படையில் கணிக்கப்படுவதே ஜோதிடம்” என்று சிலர் கூறுகின்றனர்.
எனவே, கிரகங்களின் இயக்கத்திற்கும் மனித வாழ்க்கை அமைவதற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்பதை முதலில் ஆராய வேண்டும்.
ஒரு குழந்தை பிறக்கும்போது, அமைந்துள்ள கிரகங்களின் நிலைக்கேற்பவே, அக்குழந்தையின் வாழ்க்கை அமைகிறது என்பதே ஜோதிடத்தின் அடிப்படைத் தத்துவம்.
இத்தத்துவம் சரியென்றால், ஜோதிடம் என்பதும் சரி – உண்மை. இத்தத்துவம் தவறு என்றால் ஜோதிடம் என்பதும் தவறு – பொய்.
ஒரு குழந்தை பிறக்கும்போது இருக்கின்ற கிரகங்களின் நிலைக்கு ஏற்பவே, அக்குழந்தையின் வாழ்க்கை அமையும் என்றால், அதே நேரத்தில் பிறக்கின்ற அத்தனை குழந்தைகளின் வாழ்க்கையும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு இருக்கிறதா என்றால் இல்லை.
ஒரு குழந்தை பிறந்தவுடன் இறந்து போகிறது. அப்படியென்றால் அந்த நேரத்தில் பிறக்கின்ற அத்தனை குழந்தைகளும் இறந்து போகவேண்டும். அவ்வாறு இறந்து போகின்றனவா?
ஒரு நொடிப் பொழுதில் உலகில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பிறக்கின்றன. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கின்ற குழந்தை இறந்தால், ஜோதிடத் தத்துவப்படி, அந்த நேரத்தில் பிறக்கின்ற அத்தனை குழந்தைகளும் பிறந்தவுடன் இறந்து போக வேண்டும். ஆனால் அவ்வாறு இறந்து போகின்றனவா? இல்லையே!
அதுமட்டுமல்ல, ஒரே நேரத்தில் பிறக்கின்ற அத்தனை குழந்தையின் வாழ்க்கையும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இருக்கிறதா? இல்லையே!
மேலும், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கின்ற எல்லாக் குழந்தைகளும் வாழ்ந்து, ஒரே நேரத்தில் இறக்கின்றனவா? இல்லையே!
பிறக்கின்ற நேரத்தில் இருக்கின்ற கிரக நிலைக்கேற்பவே வாழ்நாள் அமையும் என்றால், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பிறக்கின்ற நாய், பன்றி, ஈ, கொசு, யானை, சிங்கம் இவற்றின் வாழ்க்கைகூட ஒரே மாதிரியாகத்தானே இருக்க வேண்டும்? இருக்கின்றதா? இல்லையே! கிரகங்கள் விலங்கு, பறவை, புழு, பூச்சிகளையும்தானே பாதிக்கும்?
பிறக்கின்ற இடத்தையும் பார்க்க வேண்டும் என்று சிலர் கூறுவர். அப்படியே பார்த்தாலும் ஒரு குறிப்பிட்ட நாட்டில் பிறக்கின்ற அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியில் பிறக்கின்ற அத்தனை குழந்தைகளும் ஒரே மாதிரி வாழ்கின்றனவா? இல்லையே!
எனவே, ஜோதிடத்தின் அடிப்படைத் தத்துவமே பொய் என்பது புரிகிறதல்லவா? அடிப்படையே பொய் என்றால், அதன் மீது புனையப்படும் மற்ற ஜோதிடக் கணிப்புகள் அனைத்தும் அசல் பொய்தானே?.
மேலும், கிரகங்களின் இயக்கத்திற்கும், மனித வாழ்க்கை அமைவதற்கும் தொடர்பு இருப்பதாகவும், அதனடிப்படையில் கணிக்கப்படும் சோதிடம் அறிவியல் சார்ந்தது என்றும் நம்பப்படுவது எவ்வளவு அறியாமை!
“நாயாய்ப் பிறந்தாலும் நல்ல நேரத்தில் பிறக்க வேண்டும்!” என்று, பிறக்கின்ற நேரத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் எவ்வளவு பிதற்றலானது! நன்றாகச் சிந்திக்க வேண்டும்.
அறிவியல் உண்மைப்படி சூரியன் இடம்பெயராமல் தன்னில்தானே சுழன்று கொண்டிருக்கிறது. ஆனால், ஜோதிடம் சூரியன் இடம் பெயர்வதாகக் கூறுகிறது. அப்படியிருக்க ஜோதிடத்தின் அடிப்படையே தவறு; அறிவியலுக்கு முரண். எனவே, சோதிடம் அறிவியல் அல்லவே.
மேலும் இப்போது புதுப்புதுக் கிரகங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அப்படியிருக்க 9 கிரகங்களை மட்டும் வைத்து ஜோதிடம் சொல்வது எப்படிச் சரியாகும்? ஆக கிரகங்கள் எல்லாவற்றையும் கணக்கில் கொள்ளாத ஜோதிடம் மோசடியல்லவா? பொய் அல்லவா? சிந்திக்க வேண்டுமல்லவா?
இனி, ஜோதிடத் தத்துவப்படியே, சோதிடக் கணிப்பு சரியா என்பதை ஆராய்வோம்.
பிறந்த நேரம் எது?
பிறந்த நேரத்தை வைத்தே ஜோதிடம் கணிக்கப்படுவதால் ஜோதிடத்திற்கு அடிப்படை, பிறந்த நேரமேயாகும். ஆனால், பிறந்த நேரம் எது என்பதில் தெளிவு இருக்கிறதா?
பிறக்கும் குழந்தையின் தலை வெளியில் தெரியும் நேரமா? குழந்தை முழுவதும் வெளியில் வந்த நேரமா? அல்லது தொப்புள் கொடி துண்டிக்கப்பட்டுத் தாயின் தொடர்பு விடுபட்ட நேரமா? அறுவைச் சிகிச்சையெனில், வயிற்றைப் பிளந்து வெளியே எடுத்த நேரமா? அப்படி பிளந்து எடுப்பது இயற்கைக்கு முரண் என்பதால் அதற்கு ஜாதகம் பொருந்தி வராதே! அப்படிப்பட்ட குழந்தைகள் தானே இன்று அதிகம். அக்குழந்தைகளுக்கு ஜாதகம் பார்ப்பது எப்படிச் சரியாகும்?
குறைப் பிரசவத்தில் கருவியில் வைத்திருக்கிறார்களே, அதில் பிறந்த நேரம் எது? தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட நேரமா? அல்லது கருவியை விட்டு வெளியே எடுக்கும் நேரமா? எது? இப்படி பிறந்த நேரம் எது என்பதிலே குழப்பம் இருக்கும்போது, பிறந்த நேரம் என்பது எது?
லக்னம் மற்றும் நட்சத்திரக் கணக்கு:
ஜோதிடம் என்பது நேரம், கிழமை, தேதி, மாதம், வருடம், லக்னம், நட்சத்திரம் ஆகியவற்றைக் கொண்டே கணக்கிடப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட லக்னத்தில் நட்சத்திரத்தில் நாட்டில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பிறக்கின்றன.
ஒரு லக்னத்திற்கு 41/2 முதல் 51/2 நாழிகை வரை கால அளவு. ஒரு நட்சத்திரத்திற்கு 60 நாழிகை.
உதாரணமாக விருச்சிக லக்னத்திற்கு 51/4 நாழிகை அதாவது 126 நிமிடம். சுமார் இரண்டு மணி நேரம். அந்த இரண்டு மணி நேரத்தில் நாட்டில் எத்தனை நூறு குழந்தைகள் பிறக்கும். அந்தக் குழந்தைகள் எல்லாவற்றிற்கும் வாழ்வு ஒரேமாதிரியாக அமையுமா? அமைவதில்லையே!
அந்த நேரத்தில் பிறந்த ஒரு சில குழந்தைகள் இறந்து, மற்ற குழந்தைகள் உயிருடன் இருந்தாலே ஜோதிடம் பொய்யென்றாகி விடும் அல்லவா?
முரண்பாடான நம்பிக்கை:
பிறக்கின்ற நேரத்தில், கிரகங்கள் இருக்கின்ற நிலைக்கேற்பத்தான் வாழ்க்கை என்றால், கடவுளுக்கும், விதிக்கும், பூர்வ ஜென்ம பலன்களுக்கும் என்ன வேலை?
பிறந்த நேரக் கிரக நிலைக்கேற்பத்தான் வாழ்வு என்றால், நாம் பிறந்தபோதே நமது வாழ்வு இப்படித்தான் என்று தீர்மானம் ஆகிவிடுகிறது. பிறகு கடவுள் பிரார்த்தனை ஏன்? கணக்கற்ற முயற்சிகள் ஏன்? இவற்றால் அதை மாற்ற முடியுமா?
பிறந்த போதே நம் வாழ்வு இப்படித்தான் அமையப் போகிறது என்று தீர்மானம் ஆகிவிட்ட பிறகு, ஒவ்வொரு கட்டத்திலும் நேரங்காலம் பார்த்து ஏன் காரியம் செய்ய வேண்டும்? இராகு காலம், எமகண்டம், அஷ்டமி, நவமி இவற்றை ஏன் பார்க்க வேண்டும்?
இவற்றைப் பார்த்து நடந்தால் நமது வாழ்வு மாறி விடுமா? மாறிவிடும் என்றால், பிறந்த நேரத்தின்படி வாழ்வு அமையும் என்ற ஜோதிட நம்பிக்கை தவறாகி விடாதா?
கிரகத்தின் நிலைக்கேற்ப வாழ்வு அமையும் என்றால் விதியை நம்பக் கூடாது; பூர்வ ஜென்ம பலனை நம்பக்கூடாது; கடவுளை நம்பக்கூடாது.
காரணம், கிரக நிலைப்படிதான் வாழ்வு என்றால் கடவுளுக்கு நம் வாழ்வில் என்ன பங்கு? ஒன்றும் இல்லையே!
ஜோதிடத்தையும் நம்பி, கடவுள், விதி, பிறவி இவற்றையும் நம்புவது முரண்பட்ட நிலையாகும்.
இப்படிச் சொன்னால், சிலர் சாமர்த்தியமாக, கடவுள் பூர்வஜென்ம பலனுக்கு ஏற்ப நம் விதியை அமைத்து அதற்கேற்ற கிரகச் சூழ்நிலையில் நம்மைப் பிறக்கச் செய்கிறான்; அந்த விதியை நம் கையில் ரேகையாகப் பதித்து வைத்திருக்கிறான் என்று கூறி, கடவுள் நம்பிக்கையோடு ஜோதிட நம்பிக்கையையும் இணைத்து முடிச்சுப் போட்டுப் பேசுவர்.
மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவ்வாறு கூறியும் உள்ளார்.
“ஒருவரை ஆணாகவோ பெண்ணாகவோ பிறக்கச் செய்ய வேண்டிய தகப்பனாருடைய உடலில், அதற்குரிய அணுப்பிரமாணமுள்ள அதிசூக்குமமான வித்தைச் செலுத்தி, முன்னர் அவருடைய வினைகளுக்குத் தகுந்த தலையெழுத்தை ஆணுக்கு வலது உள்ளங்கையிலும், பெண்ணுக்கு இடது உள்ளங்கையிலும் சுருக்கெழுத்துப் போன்ற ரேகைகளாகப் பொறித்து, இன்ன ஊரில், இன்ன ஜாதியில், இன்ன பெற்றோருக்கு, இன்ன பெயரோடு, இன்ன விநாடியில் இன்னின்ன கிரகநிலையில் பிறக்க வேண்டும் என்று கடவுளே தீர்மானித்து அதன்படி பிறக்கச் செய்து, அவர் இட்ட பெயரையே இடும்படியாகவும், அவரவர் செய்த புண்ணிய பாவத்திற்கேற்ப இன்ன இன்ன இன்ப துன்பம் அனுபவித்து வருமாறும் ஆட்சிபுரிந்து வருகிறார்” என்று மதுரை ஆதீனகர்த்தர் கூறுகிறார். (அர்த்தமுள்ள இந்துமதம், பாகம்-1, பக்கம்-118, 119)
முற்பிறவி கர்மவினைக்கேற்ப கடவுள் அமைக்கும் விதியின்படியே ஒருவர் வாழ்வு அமையும் என்ற கடவுள் கோட்பாட்டிற்கு, பிறக்கும் கிரக நிலைக்கேற்ப ஒருவர் வாழ்வு அமையும் என்ற ஜோதிடக் கோட்பாடு முரண் என்பதால் இரண்டையும் இணைத்து அவர் கூறியுள்ள கருத்து முற்றிலும் தவறு ஆகும்.
கிரகங்கள் சார்ந்த ஜோதிடத்தையும், கர்ம வினைக்கு ஏற்ப கடவுள் தீர்மானிக்கும் விதி நம்பிக்கையையும் இணைப்பது தப்பு. இரண்டும் முரண். ஜோதிடத்தை நம்பினால் கடவுளை மறுப்பதாகும். கடவுளை நம்பினால், அவர் தீர்மானிக்கும் விதியை நம்பினால் சோதிடத்தை நம்புவது முரண்? வாழ்வை கடவுள் தீர்மானிக்கிறாரா? கிரகங்கள் தீர்மானிக்கின்றனவா? பதில் சொல்ல வேண்டும். சொல்வார்களா?
(தொடரும்)
கடந்த இதழ் தொடர்ச்சி…
கிரகங்களின் இயக்கத்திற்கு ஏற்பவே வாழ்வு அமைகிறது என்றால், கிரகங்கள் ஒரே மாதிரியாகக் காலங்காலமாய் இயங்கிக் கொண்டிருக்கும்போது, மனித வாழ்வும் ஒரே மாதிரியாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால், மனித வாழ்வு காலத்திற்குக் காலம் மாறிக் கொண்டிருக்கிறதே!
சமைத்துண்ணத் தெரியாது, விலங்கு போல மனிதன் வாழ்ந்த காலத்தில் எப்படிக் கிரகங்கள் இயங்கினவோ அப்படியே இன்றைக்கும் இயங்குகின்றன. ஆனால் மனிதன் அப்படியா வாழ்கிறான்?
எத்தனையோ மாற்றம்! எத்தனையோ புதுமை! எத்தனையோ புரட்சி! ஏன், அந்தக் கிரகங்களுக்கே கூட மனிதன் செல்கிறான்!
எனவே, கிரகங்களின் இயக்கத்திற்கும் மனித வாழ்க்கை அமைவதற்கும் சம்பந்தமே இல்லை.’
ஒருவன் கொலை செய்கிறான் என்றால், அதற்குக் கிரக இயக்கம் காரணம் என்றால், அந்த நேரத்தில் பிறந்த அத்தனை பேருமா கொலை செய்கிறார்கள்?
அதேபோல், ஒருவர் கொலை செய்யப்படுகிறார் என்றால், கொலையுண்டவர் பிறந்த நேரத்தில் பிறந்த அனைவரும் கொலை செய்யப்படுவதில்லையே?
ஒருவன் கொலை செய்கிறான் என்றால், அவன் ஜாதகத்தில், இவன் இன்னாரை, இன்ன நாளில் கொலை செய்வான் என்று இருக்கிறதா?
இன்னாரால் இவன் இன்ன நாளில் கொலை செய்யப்படுவான் என்று கொலை செய்யப்பட்டவனின் ஜாதகத்தில் அமைப்பு இருக்குமா?
இன்னாரால் கொலை செய்யப்படுவோம் என்று தன் ஜாதகத்தைப் பார்த்துத் தெரிந்து கொண்டு அவனிடமிருந்து இவன் தப்பிக்க முடியுமா?
அப்படித் தப்பிக்க முடியுமென்றால், அந்தக் கிரகத்தின்படி கொலை நிகழாமல் எப்படியிருக்க முடியும்? கொலை நிகழாமல் தவிர்த்து விட்டால் ஜாதகம் பொய்யென்று ஆகிவிடாதா?
ஒருவன் பாம்பு கடித்து இறக்க வேண்டும் என்று ஜோதிட அமைப்பு இருந்தால், ஆயிரம் பாதுகாப்பு இருந்தாலும் அவன் பாம்புக்கடியிலிருந்து தப்ப முடியுமா?
தப்ப முடியாது எனில், ஜோதிடப்படிதான் நடக்கும் எனில், நாம் ஏன் வாழ்வைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்? பாதுகாப்பாக வாழ ஏன் முயற்சிக்க வேண்டும்?
நம்மால் எதையும் மாற்றியமைக்க முடியாது எனில், ஜோதிடம் ஏன் பார்க்க வேண்டும்?
சுருங்கச் சொன்னால், பிறக்கின்றபோது உள்ள கிரக நிலைப்படி வாழ்க்கை அமைகிறது என்றால், உலகில் ஒரேமாதிரியான வாழ்வமைப்புக் கொண்ட பலர் இருக்க வேண்டும். அவ்வாறு யாரும் இருப்பதில்லையே!
எனவே, கிரக நிலையை வைத்துக் கணிக்கப்படுகின்ற ஜோதிடம் தவறானது. அது மட்டுமல்ல; ஜோதிட நம்பிக்கையும் கடவுள் பிரார்த்தனையும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட நம்பிக்கைகள். ஜோதிடப்படிதான் வாழ்வு என்றால், பிரார்த்தனையால் எப்படி மாற்ற முடியும்? பின் ஏன் கடவுள் வழிபாடு? கிரக நிலைக்கேற்பத்தான் வாழ்வு என்றால் கடவுளுக்கு என்ன வேலை? ஜோதிடத்தை நம்புகின்றவர்கள் கடவுளை நம்பக் கூடாது.
பரிகாரம் மோசடியல்லவா?
கிரக நிலைக்கு ஏற்ப வாழ்வு அமைகிறது என்று சொல்லிவிட்டு, பின் பரிகாரங்கள் கூறுவது மோசடியல்லவா? பரிகாரம் செய்தால் கிரக அமைப்பு எப்படி மாறும்? சிந்திக்க வேண்டாமா?
நாடி ஜோதிடம்
ஜோதிட மோசடியின் உச்சக்கட்டம் நாடி ஜோதிடம்! ஓலைச் சுவடியில் ஒவ்வொருவரைப் பற்றிய குறிப்பும் எழுதி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி, அவற்றுள் பொருத்தமானதைத் தேடியெடுத்து, படித்துக் காட்டி ஜோதிடம் சொல்வது நாடி ஜோதிட முறையாகும்.
இதில் கந்தர் நாடி, காக்கையர் நாடி, கவுசிகர் நாடி, சிவசிந்தாமணி, புஜண்டர் மகாவாக்கியம், கன்ம காண்டம், சப்தரிஷி நாடி, அநாகத வேதம் என்ற பல பிரிவுகள் உண்டு.
நாடி ஜோதிடத்தில் படித்துக் கூறப்படும் ஓலைச் சுவடிகளில், ஒரு ஜாதகனுடைய பெயர் மற்றும் அவனது தாய் தந்தையர் பெயர்கள் கூறப்படும்போது, சரியாக இன்ன பெயர் என்று சொல்லப்படாமல், பொதுவாகவும், குறிப்பால் உணர்த்தும் படியாகவும் சொல்லப்பட்டிருக்கும்.
நாடி ஜோதிடத்தின் அடிப்படைத் தந்திரமே இதுதான். எப்படி ‘மந்திர வித்தை’ காட்டுகிறவன் எந்தவொன்றையும் மறைத்துச் செய்கிறானோ அதேபோல், இதில் உண்மைப் பெயர் வெளிப்படையாக இல்லாமல், மறைமுகமாகச் சொல்லப்படுவதால், யாருக்கு வேண்டுமானாலும் பொருந்தச் செய்யலாம்.
மறைத்து அல்லது மறைமுகமாகச் செய்யப்படுகிற அல்லது சொல்லப்படுகிற எந்தவொன்றிலும் சூழ்ச்சியுள்ளது; ஏமாற்று உள்ளது என்பதுதான் பொருள்.
நாடிசாஸ்திரம் குறித்துக் கண்ணதாசன் தனது ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ முதல் பாகத்தில் குறிப்பிட்டுள்ளவற்றை இதற்கு உதாரணமாகக் காட்டலாம்.
நாகர்கோயிலில் ஸ்ரீ ஆறுமுக நாவலருடைய நாடி சாஸ்திர ஏட்டில், அவருடைய பெயரை ‘அய்ந்தும் ஒன்றும் வதனமெனப் பெயரும் சூட்டி’ என்று கண்டிருந்தது.
அய்ந்து + ஒன்று = ஆறு; வதனம் என்றால் முகம்; ஆறுமுகம் என்பது ஆண்டவன் இட்ட பெயர்.
ஸ்ரீவைகுண்டத்திலுள்ள ஒரு கத்தோலிக்கக் கிறித்துவ அன்பருக்கு, சாவில் ஆறும், சாவில் ஒன்பதும் இவன் தன் நாமம் என்று கண்டிருந்தது.
‘சா’ என்ற எழுத்து வரிசையில் ஆறாவது எழுத்து ‘சூ’ ஒன்பதாவது எழுத்து ‘சை’ அவரது தந்தையிட்ட பெயர் ‘சூசை’ என்பதாகும். ஆண்டவன் இட்ட பெயரும் சூசையாகும்.
ஓர் ஹிந்துவைப் போல் மாறுவேஷம் போட்டுக்கொண்டு சென்ற மதுரையைச் சேர்ந்த இஸ்லாமியருக்கு ‘அப்துல் ரஹ்மான்’ என்று கூறப்பட்டிருக்கிறது.
ஓர் ஆங்கிலேயர் பார்த்த பொழுது முழத்தில் பாதி இவர்தன் நாமம் என்றிருந்தது. அவரது பெயர் ஜான் என்பதாகும்.
கோவையில் கவுமார மடத்தை நிறுவிய தலைவருக்கு ‘இராமக்குட்டி’ என்றும் பின் துறவு பூண்டு ‘இராமானந்தர்’ ஆவார் என்றும் கண்டிருந்தது”.
(அர்த்தமுள்ள இந்துமதம், பாகம் – 1, பக்கம் – 120)
மேலே கூறப்பட்டவை, மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கூறியதாகக் கண்ணதாசன் குறிப்பிட்டவையாகும்.
நல்லவேளை… மதுரை ஆதீனகர்த்தர் நாடி ஜோதிடம் பார்க்கப் போகவில்லை. போயிருந்தால் நாடி ஜோதிடன் தவித்துப் போயிருப்பான்.
“ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்” என்ற இவ்வளவு நீட்டுப் பெயருக்கு எப்படிச் சமாளிப்பது? ஏகப்பட்ட ‘கப்சாக்கள்’ அல்லவா அடிக்க வேண்டு!
கோவை கவுமார மடத்தின் நிறுவனர் இராமக்குட்டிக்கு பிற்காலத்தில் பெயர் ‘இராமானந்தர்’ என்று மாறும் என்று நாடி ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகச் சொல்கிறார்.
அப்படியென்றால், நம்ம ஜெயலலிதா நாடி ஜோதிடம் பார்க்கப் போனால், புரட்சித் தலைவி, புரட்சித் தாய், தமிழ்த்தாய், காவிரித்தாய், தெய்வத்தாய், அன்னைமேரி, கன்னிமேரி, இதயத்தாய், காவல்தாய், சமூக நீதிகாத்த வீராங்கனை…, என்றெல்லாம் பெயர் சூட்டப்படுவார் என்று நாடி ஏட்டில் கண்டிருக்குமா?
இன்றைக்கு அப்பன், ஆத்தாள் பெயர்கள் தெரியாமல் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இருக்கிறார்களே அவர்களை நாடி ஜோதிடக்காரனிடம் அழைத்துச் சென்று அப்பா பெயர், ஆத்தாள் பெயர், ஊர்ப் பெயர் கேட்டால் சொல்வானா?
பெயர் என்ன என்று கேட்டால், நேரடியாக ஜான் என்று சொல்ல வேண்டியதுதானே? அதை விடுத்து ‘முழத்தில் பாதி’ என்று ஏன் குறிப்பிட வேண்டும்?
‘ஜான்’ என்பது இரண்டெழுத்து ‘முழத்தில் பாதி’ என்பது ஏழு எழுத்து, எப்படிச் சொல்வது சுருக்கம்?
மூக்கு என்று சொல்வதை விட்டுவிட்டு நெத்திக்குக் கீழே கண்களுக்கு நடுவே, உதட்டுக்கு மேலே உள்ள உறுப்பு என்றால் அது எவ்வளவு பைத்தியக்காரத்தனமோ அவ்வளவு பைத்தியக்காரத்தனம் இது!
அதுமட்டுமல்ல, முழத்தில் பாதி என்றால் ஜாண்; ‘ஜான்’ என்பதற்கு ‘ன்’ இரண்டு சுழி. ஆனால் ஜாண் என்பதற்கு ‘ண்’ மூன்று சுழி.
நாடி சாஸ்திரமெல்லாம் பரமசிவன் பார்வதிக்குச் சொன்னது என்று கூறப்படுகிறபோது பிழைபடச் சொல்லியிருப்பார்களா?
பீட்டர், மேரி, இன்குலாப், அய்சக், உட்ஸ் என்ற பெயரெல்லாம் நாடி சாஸ்திரத்தில் இருக்கிறதா?
அய்ந்தும் ஒன்று வதனமெனப் பெயர் சூட்டி என்றால், அய்ந்து + ஒன்று = ஆறு என்று மட்டுந்தான் பொருள்கொள்ள முடியுமா? 51 என்று பொருள்கொள்ள முடியாதா?
‘அய்ந்தும் ஒன்றும் வதனம்’ என்பதற்கு அய்ந்தும் ஒன்றிய (ஒன்று சேர்ந்த) வதனம் அதாவது அய்ந்து முகம் என்று ஏன் பொருள் கொள்ளக் கூடாது? அய்ந்து முகம் உடைய சிவபெருமான் பெயராக ஏன் இருக்கக்கூடாது? சிவனுக்கு அய்ந்து முகம் என்பது புராணம்.
‘அய்ந்தும் ஒன்றும் வதனம்’ என்பதற்கு ஆறுமுகம் என்று மட்டுந்தான் அர்த்தமா? சண்முகம் என்று பொருள் இல்லையா? சண்முகம் என்பதன் பொருள் ஆறுமுகந்தானே?
அதாவது பலருக்கும் பொருந்தும்படித் திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்டவை நாடி சாஸ்திர ஏடுகள் என்பது இதிலிருந்து விளங்குகிறது அல்லவா?
எந்த நாடி ஜோதிடனும் உடனே ஏடு கொடுப்பதில்லை. தேடி எடுக்கவேண்டும் என்றுதான் சொல்லுவான். கால அவகாசம் எடுப்பான். காரணம், அதற்குள் பழைய ஓலைகள் தயார் செய்துகொள்ள.
இந்துவைப் போல மாறுவேடத்தில் சென்ற முஸ்லிம் பெயர் அப்துல் ரஹ்மான் என்று இருந்ததாம். இந்தப் பெயர் மட்டும் எப்படி ஓலையில் நேரடியாக எழுதப்பட்டிருந்தது? ‘ஜான்’ என்ற பெயருக்கு ‘முழத்தில் பாதி’ என்று இருந்தது போல், இதற்கும் மீட்டர், கெஜக்கோல் என்று ஏதாவது எழுதப்பட்டிருக்க வேண்டாமா?
அப்துல் ரஹ்மான் என்ற நீண்ட பெயரே நேரடியாக நாடி ஏட்டில் எழுதப்பட்டிருக்கும் போது ‘சூசை’ என்ற சுருக்கமான பெயர் நேரடியாக எழுதப்பட்டிருக்கலாமே? அதைவிட்டு, சாவில் ஆறும் சாவில் ஒன்பதும் என்று ஏன் வளர்த்தலாக, மறைமுகமாகச் சொல்லப்பட வேண்டும்? சூசை என்பது தமிழ் வார்த்தை அல்ல. அப்படியிருக்க தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை எப்படிப் பொருந்தும்?
எல்லாம் மோசடிக்காகத்தான் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
“புயலாடு புலவன் சரலில் பூமகன் மதிகோலாக
வெயில் மகன் போகி நண்டில், வேதியன் தேள் மீதாக
செயுமிக்கோள் நிலையில் தோற்றும் சேயாறார்க்குரிர் சியத்தே
பயன்தரு மிவனின் ஜென்மம், பாண்டியன்
நாட்டுக் குள்ளே”.
அதாவது இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள கிரக நிலையில் பிறக்கின்றவன் பாண்டியன் நாட்டுக்குள்ளே பிறப்பான் என்பதாகும்.
(ஆதாரம்: வேலு அவர்கள் எழுதிய ‘கவுமார ஜோதிடப் புரட்டு’ என்னும் கட்டுரை)
சேர, சோழ, பாண்டிய நாடு என்னும் பிரிவு இடைக்காலத்தில் ஏற்பட்ட ஒரு பிரிவாகும். ஆனால், நாடி ஜோதிடமோ ஆதிநாளில் இறைவனால் கூறப்பட்டது என்று சொல்லப்படுகிறது. அதாவது சேர, சோழ, பாண்டிய நாட்டுப் பிரிவுகள் ஏற்படாத காலத்தில் எழுதப்பட்டதாக சொல்லப்படுகிறது. அப்படியென்றால் பாண்டிய, சோழ, சேர நாட்டுப் பிரிவுகள் தோன்றாத அந்தக் காலத்தில் பாண்டிய நாடு என்ற பிரிவு எப்படி நாடி ஜோதிடத்தில் இடம்பெற்றிருக்க முடியும்?
இந்த நாடி ஜோதிடப் பாடல் பாண்டிய நாடு நடைமுறையில் இருந்த காலத்தில் எழுதப்பட்டது. அதனால்தான் அதற்கு முந்திய காலத்திற்கும் பிந்தைய காலத்திற்கும் பொருந்தவில்லை.
எனவே, நாடி ஜோதிடப் பாடல்கள் இறைவனால் எழுதப்பட்டவை அல்ல என்பதும், அது காலத்திற்கு ஏற்ப மோசடிப் பேர்வழிகளால் எழுதிக் கொள்ளப்படுவது என்பதும் தெளிவாகிறது.
அதுமட்டுமல்ல, தன்னுடைய மனைவி பார்வதியைப் பிரம்மா அனுபவிக்க வருவான் என்பதையே அறிய முடியாத பரமசிவன் நம்முடைய வாழ்வைப் பற்றிக் கூறும் நாடி சாஸ்திர ஏட்டை முன்னமே அறிந்து எப்படி எழுதியிருக்க முடியும்?
கண்ணதாசன் தனது “அர்த்தமுள்ள இந்துமதம்” நூலில்,
“சரியாகத் தேடிப் பார்த்தால் ஏதாவது ஒரு நாடி சாஸ்திரத்தில் பூர்வ ஜென்மத்தில் நான் யாராக இருந்தேன் என்பது தெரியக்கூடும்.
உதாரணமாக, எகிப்து தேசத்தில் முற்பிறவியில் மன்னராக இருந்த ஒருவரே இன்று திருநெல்வேலி ஜில்லாவில் சிங்கம்பட்டி ஜமீன்தாராகப் பிறந்திருக்கிறார் என்று ‘அநாகத வேதம்’ என்ற நாடி சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம்.
அதில், முன் செய்த தீவினை இன்னதென்றும், அதற்குரிய பரிகாரம் இன்னதென்றும் குறிப்பிடப் பெற்று, அந்தப் பரிகாரம் செய்தபின் அவருடைய வியாதி பூரண குணமாகி விட்டதாம்” என்று கூறியுள்ளார்.
(அர்த்தமுள்ள இந்துமதம், பாகம் – 1, பக்கம் – 122)
இவ்வளவு தூரம் எழுதும் கண்ணதாசன், தான் போன பிறவியில் யாராக இருந்தார் என்று நாடி சாஸ்திரத்தைத் தேடியெடுத்துச் சொல்லியிருக்கலாம்.
அதுமட்டுமல்ல, தனக்கு எல்லா நோய்களும் இருப்பதாகக் கூறும் அவர், தன் நோய்களுக்கு மருந்து சாப்பிட்டுச் சாப்பிட்டே ஒரு டாக்டரைவிட அதிக அளவிற்குத் தனக்கு மருந்து தெரியும் என்கிறார்.
உண்மையிலேயே அவருக்கு நாடி ஜோதிடத்தில் நம்பிக்கை இருந்தால், தனக்குரிய நாடி ஜோதிடத்தைத் தேடியெடுத்து, தன் ஜென்மத் தீவினையையும், அதைப் போக்குவதற்குரிய பரிகாரத்தையும் அறிந்து, பரிகாரம் செய்து பூரண குணம் அடைந்திருக்கலாமே? ஏன் அவ்வாறு செய்யவில்லை? அர்த்தமுள்ள உபதேசம் எல்லாம் ஊரை ஏமாற்றவா?
நாடி ஜோதிடம் பார்க்கிற ஜோதிடர்கள் எல்லாம், ஓலைச் சுவடிகள் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் இருப்பதாயும், அங்கிருந்து பெறப்படுவதாகவும் கூறிவந்தனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இது உண்மையா என்று கேட்டபோது அப்படி எந்தச் சுவடிகளும் அங்கு இல்லை என்று அந்த நூலகத்தைச் சேர்ந்த அலுவலர் பதில் தெரிவித்துள்ளார். எனவே, நாடி ஜோதிடம் மோசடி ஜோதிடம் என்பதில் அய்யமில்லை.
(தொடரும்)
கைரேகை ஜோதிடம்
உள்ளங்கையில் உள்ள ரேகைகளைப் பார்த்து ஜோதிடம் சொல்லும் முறையும் உலகில் பெருவாரியாகக் காணப்படுகிறது.
கையில் உள்ள கோடுகள் இறைவனால் பதிவு செய்யப்பட்டவை என்ற நம்பிக்கையையும் மதவாதிகள் மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.
“நான் இக்கட்டுரையில் முன்னர் குறிப்பிட்ட
படி அவரவருடைய வினைகளுக்குத் தகுந்த தலையெழுத்தை ஆணுக்கு வலது உள்ளங்கையிலும், பெண்ணுக்கு இடது உள்ளங்கையிலும் சுருக்கெழுத்துப் போன்ற ரேகைகளால் பொறித்துக் கடவுள் பிறக்கச் செய்கிறான்” என்று மதுரை ஆதீனகர்த்தர் கூறியுள்ளார்.
அதாவது, நாம் எப்படி வாழப்போகிறோம் என்ற விதியை கடவுள் கையில் ரேகையாகப் பதித்துள்ளான். அதைப் பார்த்து நம் வாழ்வு இப்படித்தான் இருக்கும் என்று அறிந்து கொள்ளலாம் என்பதே இதன் பொருள்.
ஆணின் தலையெழுத்தை ஆணின் வலக்கையிலும், பெண்ணின் தலையெழுத்தைப் பெண்ணின் இடக்கையிலும் ஆண்டவன் விதிக் கோடுகளாகப் பதிவு செய்துள்ளதாகக் கூறுகிறார். அப்படியென்றால் ஆணுக்கு இடது கையிலும், பெண்ணுக்கு வலது கையிலும் உள்ள கோடுகள் என்ன கோடுகள்?
விதிக் கோடுகள்தான் ரேகைக் கோடுகள் என்றால், இன்னொரு கையில் ரேகையே இருக்கக்கூடாது அல்லவா?
அது மட்டுமா, கால்களில் கூட ரேகைகள் உள்ளனவே!
ஆணிலும் சேராத, பெண்ணிலும் சேராத திருநங்கைளுக்கு விதிக்கோடு எங்கு பதிவு செய்யப்படுகிறது? பதில் சொல்வார்களா?
ஆணாக இருந்து பெண்ணாகவும், பெண்ணாக இருந்து ஆணாகவும் மாறுகிறார்கள். அவர்களுக்கு ரேகைக்கோடு எந்தக் கையில் பார்ப்பது?
மேலும், ரேகைக் கோடுகள் அடிக்கடி மாறிக் கொண்டிருக்கின்றன. ரேகைக் கோடுகள் விதிக் கோடுகள் என்றால் ஆயுள் முழுவதும் மாறாமல் அப்படியே அல்லவா இருக்க வேண்டும்?
எனவே, ரேகைக் கோடுகள் விதிக் கோடுகள்
அல்ல, அவை நம் வாழ்வைக் காட்டக் கூடியவையும் அல்ல என்பது தெளிவாகிறது.
கைரேகைக் கோடுகள், உடல்கூறு, உடல் நலம் சம்பந்தப்
பட்டவற்றை வேண்டு
மானால் ஓரளவிற்குப் பிரதிபலிக்கலாமே தவிர விதியை, வாழ்வை அல்ல.
இராணுவத்தில் உள்ள சிப்பாய்கள் ஒரே நேரத்தில் நூற்றுக்
கணக்கில் இறக்கிறார்கள். அப்படியென்றால் அவர்கள் அத்தனை பேர் கையிலும் உள்ள ஆயுள் ரேகை அன்றோடு அவர்கள் இறந்து போவதாகக் காட்டுமா?
இப்படி அறிவோடு சிந்தித்தால் இவற்றில் உண்மையில்லை என்பது எளிதில் விளங்கும்.
ஜோதிட பாதகங்கள்:
செவ்வாய் தோஷம்: ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்து விடுமானால் அந்தப் பெண்ணுக்கு அவ்வளவு எளிதில் திருமணமாவதில்லை. செவ்வாய் தோஷமுள்ள ஓர் ஆணைத் தேடி மணம் முடிக்க வேண்டும் என்று அலைவார்கள்.
இதனால், மற்ற பொருத்தங்களும் தகுதிகளும் பார்க்கப்படாமல் செவ்வாய் தோஷப் பொருத்தம் மட்டுமே பார்க்கப்பட்டு, தகுதியற்ற மாப்பிள்ளை அமைந்து விடுவதே அதிகம். செவ்வாய் தோஷமுள்ள ஆணின் நிலையும் இதுபோலத்தான்!
மூடநம்பிக்கையின் விளைவாய்ப் பார்க்க வேண்டிய பொருத்தங்கள் பார்க்கப்படாமல், தேவையற்ற பொருத்தத்தைப் பார்த்து வருத்தப்பட வேண்டி வருகிறது. இக்காலத்தில் செவ்வாய் தோஷத்திற்கும் விளக்கஞ்சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு, செவ்வாய் தோஷம் இல்லாதவர்களைத் திருமணம் செய்தால் இரத்தப் பொருத்தம் சரியாய் அமைவதில்லை. ஆகவே, செவ்வாய் தோஷம் பார்ப்பது அறிவியல் சார்ந்ததுதான் என்கிறார்கள்.
ஒருவன் விபத்தில் சிக்கி, அவனுக்கு மற்றவர் இரத்தம் ஏற்றவேண்டி வரும்போது இரத்தப் பிரிவு (Blood Group) சரியாக இருக்கிறதா என்றுதான் பார்க்கிறார்களே தவிர, செவ்வாய் தோஷம் பார்ப்பதில்லை.
இரத்த உறவு என்பதில் உண்மையிருக்கு மேயானால், அது மற்றைய விலங்குகளுக்கும் பொருந்து
மல்லவா? அவை செவ்வாய் தோஷம் பார்த்தா உடலுறவு கொள்கின்றன? கற்பழிக்கிறவன், காதல் ஜோடிகள், விபசாரியிடம் போகிறவன் எல்லாம் செவ்வாய் தோஷமா பார்க்கிறான்?
அழகிய பெண்ணை அனுபவிக்க வாய்ப்புக் கிடைக்கிறவன் செவ்வாய் தோஷம் பார்த்துவிட்டுத்தான் உடலுறவு கொள்வேன் என்றா சொல்கிறான். கிடைத்தால் போதும் என்றல்லவா அலைகிறான்.
அங்கெல்லாம் வேலை செய்யாத அறிவியல் திருமண விஷயத்தில் மட்டும் வேலை செய்வதேன்?
இரத்தப் பொருத்தம் பார்க்க வேண்டும் என்பது சரியென்றால் அதற்குத் தோஷம் பார்க்க வேண்டாமே! திருமணம் செய்யப் போகிறவர்கள் எல்லோரும் மருத்துவரிடம் இரத்தப் பொருத்தம் பார்த்துக் கொள்ளலாமே!
அதுவும் ‘எய்ட்ஸ்’ போன்ற கொடுமையான நோய்கள் பரவியுள்ள இக்காலத்தில் இரத்தப் பரிசோதனை செய்தபின்பே திருமணப் பேச்சைத் தொடங்கலாமே!
செவ்வாய் தோஷம் இல்லாதவர், செவ்வாய் தோஷம் உள்ளவரை மணந்தால், இல்லாதவர் இறந்து போவார் என்பது நம்பிக்கை.
ஒருவனுடைய ஜாதகத்தில் 80 வயது வரை வாழ்வான் என்று உள்ளது. அவன் செவ்வாய் தோஷம் இல்லாதவன்; அவனுக்குச் செவ்வாய் தோஷமுள்ள பெண்ணை மணம் முடித்தால் அவன் எப்படி அற்ப ஆயுளில் இறக்க முடியும்?
பெண்ணின் ஜாதகத் தோஷம் இவனைப் பாதிக்கிறது என்றால், இவனுடைய ஜாதகப் பலன் என்னாவது? இதில் வேறு ‘மெகாவாட்’ வித்தியாசம் உண்டா? செவ்வாய் தோஷம் 1000 வாட், மற்ற ஜாதகம் 500 வாட்டா?
இதிலே இரண்டில் செவ்வாய் என்றால் தாய்க்கு ஆகாது; 4இல் செவ்வாய் இருந்தால் மாடு, மனை, வாகன நஷ்டம்; 7இல் செவ்வாய் இருந்தால் மனைவிக்குப் பாதிப்பு என்று கிளை விதிகள் வேறு – செவ்வாய் தோஷம் இரத்த சம்பந்தமான காரணங்களால் பார்க்கப்படுகிறது என்ற வாதம் இதில் அடிபட்டுப் போகிறது. மாட்டு இரத்தத்திற்கும் மனித இரத்தத்திற்கும் என்ன தொடர்பு? வீடு, வாகனத்திற்கு ஏது இரத்தம்?
அதிலும் சூரியன் இருந்தாலும் அவன் பார்வை பட்டாலும் நிவர்த்தி; சனிப் பார்வை இருந்தால் நிவர்த்தி; இப்படி ஏகப்பட்ட விதிவிலக்குகள் வேறு. இவையெல்லாம் எதற்கு? ஒத்துவராதபோது சமாளித்துக் கொள்வதற்
காகத்தானே?
கேட்டையும் மூலமும்:
அதேபோல் கேட்டை நட்சத்திரம், மூல நட்சத்திரம், அனுஷம், பூரம் இவற்றில் பிறந்தவர்களும் படாதபாடு படவேண்டுமாம்! காரணம், இவையெல்லாம் கெடுதலான நட்சத்திரங்களாம்! கேட்டையில் பிறந்த பெண்ணைக் கேட்டவர்கள் இறந்து போவார்கள்; மூல நட்சத்திரம் மிகவும் கெட்டது; புகுந்த இடம் நாசம் என்று எழுதிவைத்து எவ்வளவோ பேர்களின் வாழ்வைப் பாழாக்குகின்றனர்.
அதிலும் கடகம், கன்னி, ரிஷபம், விருச்சிகம்,
தனுசு, கும்பம் இவற்றை ஜென்ம லக்னமாகப் பெற்றவர்களுக்கு எந்த தோஷங்களும் அண்டா
தாம். இப்படி ஏகப்பட்ட துணைவிதிகள்! விதிவிலக்குகள்! எனவே, எப்படி வேண்டு
மானாலும் சொல்லலாம், அதுதான் ‘ஜாதகம்’!
எதிர்காலம் பாழாதல் :
சிலர் இந்த ஜோதிட நம்பிக்கையால் தங்கள் வாழ்வைப் பாழடிப்பதோடு, தங்களின் குழந்தைகளின் வாழ்வையும் பாழடிக்கின்றனர்.
இப்படித்தான் தங்கள் வாழ்வு என்று நம்பி, அதற்குள் முடங்கிப் போகிறார்கள். முன்னேற வேண்டும் என்ற ஊக்கமும் உற்சாகமும் குறைந்து போகிறது.
பிள்ளைகளைப் படிக்க வைக்கக் கூட ஜோதிடம் பார்க்கின்றனர். ஜோதிடன் படிப்பு வராது என்று சொல்லிவிட்டால், அத்தோடு படிக்க வைக்காமல் விட்டு விடுகிறார்கள். அவனைப் படிக்க வைத்திருந்தால் அவன் பிற்காலத்தில் ஏதாவது ஒரு துறையில் வல்லுநராகக்கூட வந்திருப்பான்!
இங்கு என் வாழ்வையே உதாரணமாகக் காட்ட விரும்புகிறேன்.
எனக்கு அப்போது வயது பதினாறு. நான் கல்லூரியில் புகுமுக வகுப்பில் (P.U.C.) சேர்வதற்காக வீட்டில் கலந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு ஜோதிடர் தற்செயலாக வந்தார்.
என் கையைக் காட்டச் சொன்னார், காட்டினேன், என் கை ரேகையைப் பார்த்தார்.
“‘தம்பிக்கு அவ்வளவாகப் படிப்பு வராது. மேற்படிப்புக்கு உரிய அறிகுறிகள் இல்லை. இரும்பு சம்பந்தமான வியாபார வாய்ப்புத்தான் இருக்கிறது” என்றார்.
ஆனால், நான் தொடர்ந்து படித்தேன். படித்து அதன் அடிப்படையில் வேலை ஏற்றுத்தான் வாழ்க்கை நடத்துகிறேன். வியாபாரம் எதுவும் நான் செய்யவில்லை. எனவே, ஜோதிடர் கூறுவதற்கும் வாழ்க்கைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.
சிலர் தொழில் தொடங்க, ஒரு செயலில் ஈடுபட ஜோதிடம் பார்த்து, ஆலோசனை பெற்றுச் செயல்படுகிறார்கள். ஜோதிடர் தாறுமாறாகக் கூற, யோசனை பெற்றவரின் வாழ்க்கையே மாறி விடுகிறது; பெரிதும் பாதிக்கப்படுகிறது.
அரசியல்வாதிகள் பலர், இன்றைக்கு ஜோதிடப் பித்தர்களாக இருந்து நாட்டையே பாழடிக்கின்றனர்; நாட்டையே ஜோதிடர்கள் நடத்தும் நிலை வந்து விடுகிறது.
சந்தர்ப்பம், சூழல், வாய்ப்பு இவற்றைப் பரிசீலிப்பதற்குப் பதிலாகக் கிரகம், பெயர்ச்சி, திசை என்று பல்வேறு மூடநம்பிக்கையில் சிக்குண்டு, அதற்கேற்ப ஆட்சி நடவடிக்கை
களையே மேற்கொண்டு, நாட்டின் வளர்ச்சியைப் பாழடிக்கின்றனர்.
ஜோதிட மோசடி குறித்தும், ஜோதிடம் உண்மையல்ல என்பது குறித்தும் இவ்வளவு கூறிய பின்னும், ஜோதிடத்தில் இன்னும் யாருக்கேனும் நம்பிக்கை இருப்பின் அவர்களுக்
காகக் கீழ்க்கண்டவற்றைக் கூற விரும்பு
கின்றேன்.
சுனாமியில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான
வர்கள் இறந்தார்களே… அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அன்றைக்கு இறக்க வேண்டும் என்று ஜோதிடத்தில் குறிப்பு இருந்திருக்குமா? இருந்திருக்கத்தான் முடியுமா?
ஏதாவது ஓரிடத்தில் இருக்கிற பத்துப் பேரின்
ஜாதகத்தைப் பார்த்தால்கூட ஒவ்வொருவரும் வெவ்வேறு காலத்தில் இறப்பார்கள் என்றுதான் ஜோதிடம் சொல்லும். அப்படியிருக்க ஆயிரக்கணக்கானவர்கள் எப்படி ஒரே நேரத்தில் இறந்தனர்?
சில ஆண்டுகளுக்கு முன் வட இந்தியாவில் ஓர் இரயில் விபத்து ஏற்பட்டது. ஆற்றுப் பாலத்தின் மேல் இரயில் சென்று கொண்டிருந்த போது, அந்த இரயிலின் கடைசி இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு ஆற்றில் விழுந்தன. இந்த இரண்டு பெட்டிகளில் இருந்த நூற்றுக்கணக்கானவர்கள் நீரில் மூழ்கி இறந்து போயினர். அவர்களுள் முதல் நாள் திருமணம் செய்து கொண்ட 2 புதுமணத் தம்பதிகள் உட்பட பலர் இருந்தனர்.
தமிழ்நாட்டைவிட வட இந்தியர்கள் ஜோதிடம் அதிகம் பார்க்கக் கூடியவர்கள். அதுவும், திருமணம் செய்வதற்கு முன், கட்டாயம் ஜோதிடம் பார்த்து, ஆயுட்காலம், பொருத்தம் எல்லாம் ஜாதகமாக இருந்தால்தான் மணம் முடிப்பார்கள்.
அப்படியெனில், ஆற்றில் மூழ்கி ஒரே நேரத்தில் இறந்துபோன புதுமணத் தம்பதிகளின் பெற்றோர்களும் ஜோதிடம் பார்த்து, நீண்ட நாட்கள் நலமாக இருப்பார்கள் என்று ஜோதிடன் சொன்ன பிறகுதானே திருமணம் முடித்திருப்பார்கள்?
நீண்ட காலம் வாழ்வார்கள் என்று ஜோதிடனால் சொல்லப்பட்ட தம்பதிகள் எப்படித் திருமணமான மறுநாளே இறந்தார்கள்? மறுநாளே இறந்து விடுவார்கள் என்று ஒரு ஜோதிடன் கூடச் சொல்லியிருக்க மாட்டானே?
எனவே, ஜோதிடத்திற்கும் வாழ்விற்கும் சம்பந்தமில்லை என்பது தெளிவாகிறது.
அண்ணன், தங்கை என்ற விவரத்தைச் சொல்லாமல், அவர்கள் ஜாதகத்தைக் கொடுத்தபோது, திருமணப் பொருத்தம் பிரமாதமாக உள்ளது என்று ஜோதிடர் சொல்கிறார்!
இறந்துபோன இளைஞன் ஒருவனின் சாதகத்தைக் கொடுத்துப் பார்க்கச் சொன்னால், இன்னும் 60 ஆண்டுகள் உயிருடன் வாழ்வான் என்று அடித்துச் சொல்கிறார் ஜோதிடர்!
பெண் கன்றுக்குட்டி பிறந்த நேரத்தைக் குறித்துக் கொடுத்து, ரேவதி என்று பெயரையும் சொல்லி ஜோதிடம் பார்க்கச் சொன்னால், அரசு உத்தியோகத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவாள் என்கிறார் ஜோதிடக்காரர்.
இன்னும் நம்புகிறீர்களா ஜோதிடம் உண்மையென்று?
அன்றாடம் செய்தித்தாள்களில் வரும் ராசிபலன், மற்றும் வாரம் ஒருமுறை வரும் இராசிபலன் இவற்றை எடுத்து ஆராய்ந்து பார்த்தால் இவை எவ்வளவு மோசடி என்பது விளங்கும்.
பத்துச் செய்தித்தாள்களை எடுத்து, ஏதாவது ஒரு ராசிபலனை ஒப்பிட்டுப் பாருங்கள்; ஒவ்வொரு பத்திரிகையிலும் ஒவ்வொரு பலன் சொல்லியிருப்பார்கள். நான்கைந்து வாரம் சோதித்துப் பாருங்கள். நான் சொல்லும் உண்மை நன்கு விளங்கும்.
ஜோதிடம் எவ்வளவு பெரிய மோசடி என்பதற்கு இதுவே சரியான சான்று!
(தொடரும்…)
- உண்மை இதழ், 1-15.09.25,16-30.09.25,1-10.25